காதோரம் நரை
கண்ணுக்குக் கீழே சுருக்கம்
வயது ஐம்பதுக்கு மேல் காணும்
ஜி.நாகராஜனின் கதைநாயகன் போல்
டெரிலீன் சர்ட், எட்டு முழ வேட்டி.
போகலாமா என்றார்.
முடியாது இன்று என்றேன்.
வெளியே வேண்டாம் என்றால்
உன் வீட்டில் சரியா என்றார்.
எங்கேயும் சரியில்லை
இன்று என்றேன்.
வயதானவன் என்று பார்க்கிறாயா?என்றார்.
காதோர நரை பார்த்து
கணிக்கிறவள் நானில்லை என்றேன்.
பின் என்ன? என்றார்.
ஒன்றுமில்லை.
இன்று முடியாது என்றேன்.
பணமா பிரச்சினை?
கேள்..தருகிறேன்.என்றார்.
நீங்கள் தருவது லட்சமென்றாலும்
இன்று முடியாது என்றேன்.
ஏன்? என்றார்.
முடியாது.அவ்வளவுதான் என்றேன்.
சரி.நாளை? கேட்டார்.
நாளையும் முடியாது என்றேன்.
தொழிலை விட்டுவிட்டாயா? என்றார்.
இல்லை. நாளை மறுநாள் வாருங்கள் என்றேன்.
நாளை மறு நாள் எதற்கு? இன்று என்ன உனக்கு ?என்று அவர் கேட்கவில்லை.
அவர் கேட்க மாட்டார்.
கேட்டாலும் இருக்கவே இருக்கு
காட்ட தூமைத்துணி.