Tuesday, December 27, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - காகங்கள்

யாரோ வருவார்.
யாரோ போவார்.
வருவதும் தெரியாது.
போவதும் தெரியாது.
பறக்கும் காக்கை கரையாதென்று
பல்லு போன கிழவி ஒருத்தி
சொன்னதாக ஞாபகம்

Friday, December 23, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - தேவனின் வருகை

இதோ வருகிறேன்
ஐந்து நிமிடத்திலென்று
விட்டுப் போனார் பேருந்து நிலையத்தில்.
நாட்கள் கழிந்தன.
நபர்களும் வந்தார்கள்.
அவரும் வரவில்லை.
அவர் சொன்ன
ஐந்து நிமிடமும் வரவில்லை.

Wednesday, December 14, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - ஒரு பொழுது

மெதுவாகச் சுழலும் மின்விசிறி.
உதிர்ந்த மல்லிகைச் சரம்
துவண்டு கிடக்கும் உறை.
மார்போரம் கிழிந்த சேலை
ஒழுகி வழியும் சாராயம்
வெளியே நிற்கும் வாடிக்கையாளர்
ரத்தக் கறையுடன் நான்

Tuesday, December 13, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - 'ம்' கள்

இளைஞன் வந்தால் யதார்த்தம்.
மணமானவன் வந்தால் நவீனத்துவம்.
மனைவியை இழந்தவன் வந்தால் பின் நவீனத்துவம்.
மனைவியைத் தொடாதவன் வந்தால் அமைப்பியல்வாதம்.
நானென்ன சொன்னாலும் அது பிழைப்புவாதம்.
ஆக மொத்தம் நாராசம்.

Monday, December 12, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - இருத்தல்

கிராமத்து மூலையிலிருக்குமோர் குடிசை.

மலையடிவாரத்திலிருக்குமோர் பனை மரம்

ஊரின் எல்லையிலிருக்குமோர் கோவில்

கொடியில் தொங்குந்தென் தூமைத்துணி

Friday, December 9, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - உத்தமர்கள்

தெருவில் சிவனே என்று
நின்றிருந்தாலும்
அழைக்கிறாயா என்கிறார்கள்.
நடக்கும்போது நிலவைப்
பார்த்துக் கொண்டே நடந்தால்
கூடவே வருவது போல் அல்லவா தோன்றும்.
ஒன்று நடக்காதே.
இல்லையெனில்
நடக்கும் போது
நிலவைப் பார்க்காதே.

Sunday, December 4, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - மொழிதல்

இங்கு வருவோருண்டு.
வந்து போவோருண்டு.
வருவோரிடமும், போவோரிடமும்
என்றும் கேட்டதில்லை
ஏனிங்கு வந்தீர் என்றோ
ஏனதற்குள் போகிறீர் என்றோ.
ஆனால் வருவோரும்
போவோரும் தவறாமல்
கேட்கிறார்
'ஏனிங்கு வந்தாய்?' என்று.
பதிலைச் சொன்னால்
இனி மேல் வாரார் என்பதற்கில்லை.
ஆனாலும் பதிலைச்
சொல்வதற்கில்லை.

Thursday, December 1, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் -நடை பயில்தல்

நாயுடன் நடை பயில வந்தவர்
இன்று வந்தார்.
வரும் போது நாயை அவர்
அழைத்து வந்தார்.
போகும் போது நாய்
அவரை அழைத்துக் கொண்டு போனது.

Thursday, November 24, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் -சிறைச்சாலை

இது கனவுக் கோட்டை.
கனவில் கட்டிய கோட்டை.
கனவு காணத் தெரியாதவர்களால்
உள்ளே நுழைய முடியாத கோட்டை.
ஆதி காலத்திலிருந்து
கனவு காணத் தெரிந்தவர்களால்
கட்டப்பட்ட கோட்டை.
அப்படிக் கட்டியவர்களையே
தன்னுள் சிறை வைத்திருக்கும் கோட்டை

Wednesday, November 23, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - இன்மை

என்னிடம்
கூச்சத்தோடு வந்தவர்
பலர்.
என்னைக்
கூச்சப்பட வைத்தவரென்றொருவருமிலர்.

Tuesday, November 22, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - பிரயத்தனம்

தலை நிறையப் பூச்சூடி
ஒவ்வாத சரிகைப் புடவையணிந்து
இடையை ஒடித்து
உடலை வளைத்து
உதட்டைக் கடித்து
நாக்கைச் சுளித்து
மார்பை விலக்கி
கண்களில் பொய் போதை காட்டி.
கண்ணகியாவதற்கு
காலமெல்லாம்
கதவுக்குப் பின்னாலிருந்தால்
போதுமென்பது நிதர்சனம்.
மாதவியாவதற்குத்தான்
எத்தனை பிரயத்தனம்.

Monday, November 21, 2011

கிளிஞ்சல்கள்

யாருமே நிறைய நேரம் இருக்க விரும்பாத இடம் அது.மிக அழுத்தமான இறுக்கம்
அங்கு நிலவியது. என்னுடைய முறை எப்போது வரும் என்று தெரியவில்லை. அரை மணி நேரம் ஆகலாம்.அதற்கு மேலும் ஆகலாம்.உள்ளே இருந்த காற்று சுத்தமாக இருந்தாலும், சுதந்திரமாக இல்லை. பத்து பேர் அமர்ந்திருந்தோம்.

ஒரு தம்பதி. பார்ப்பதற்கு வடநாட்டவர்கள் போல் தெரிந்தார்கள்.வடநாட்டவர்கள்
என்று பொத்தாம் பொதுவாக சொல்லி விட்டாலும் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தீர்மானமாய் என்னால் கணிக்க முடியவில்லை.

மனைவி மிகவும் சோர்ந்திருந்தார். கணவன் அதற்கு இணையாக சோர்ந்திருந்தான்.குழந்தை மட்டும் கார்ப்பெட்டில் உட்கார்ந்து கொண்டு , வெல்வெட் துணிப் பொட்டலத்தை அவிழ்க்க முயன்று கொண்டிருந்தது. அம்மாவையும் அப்பாவையும் அடிக்கடி அவர்களின் கால்களைப் பிறாண்டி துணிப் பொட்டலத்தை அவிழ்த்துத் தருமாறு சைகை செய்தது.
அவர்கள் அதைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

'மிஸ்டர். நாகராஜன்'

எனக்குப் பக்கத்தில் இருந்த வயதானவர் எழுந்தார்.

'நேராப் போயி ரைட்ல ஃபஸ்ட் லேப்'

'ரிப்போர்ட் எப்ப கெடைக்கும்.' - கரகரப்பான குரலில் கேட்டார்.

'ஈவ்னிங் சிக்ஸ் ஓ க்ளாக் ஆகும் சார்.நாளைக்கி காலையில கலெக்ட் பண்ணிக்குங்க.இல்லன்ன போய்ட்டு சாயந்திரம் வாங்க'

தளர் நடை பெரியவர் மறைந்தார்.

நகரத்தின் மிகப் பெரிய மருத்துவமனை ஒன்றின் கிளை அது.பரிசோதனைகளுக்காக மட்டுமே அந்தக் கிளை.மேலிருந்து கீழ் வரை அத்தனையையும் பரிசோதிப்பார்கள்.

குழந்தை ஆக மட்டும் முயன்று பார்த்தது.முடியவில்லை.

என்னைப் பார்த்தது.

'வா' என்று சைகை செய்தேன். தம்பதிகள் என்னைப் பார்த்து விட்டு கண்ணை
மூடிக் கொண்டார்கள்.

'என்ன?" என்று சைகை காட்டினேன்.

எதோ ஒரு மொழியில் எதோ ஒன்று சொன்னது.

பொட்டலத்தைப் பிரித்துக் கொடுத்தேன். உள்ளே வெண்மையான கிளிஞ்சல்கள்.

அதன் மொழியில் எதோ சொல்லிக் கொண்டே ஒவ்வொரு கிளிஞ்சலாக எடுத்து
என்னுடைய கைப்பையில் போட்டது. ஒன் டூ த்ரீ ஆக இருக்கலாம்.

எல்லாக் கிளிஞ்சல்களையும் என்னுடைய பையில் போட்டதும், கீழே உட்கார்ந்து
கொண்டு வெல்வெட் துணியை விரித்து வைத்துக் கொண்டது.

உன்னுடைய பையில் இருப்பதை எடுத்து என்னுடைய துணியில் போடு என்று
சைகை செய்தபடியே எதோ சொன்னது.

இந்த ஆட்டம் ஒரு கால் மணி நேரத்திற்கு மேலே நீடித்தது.

'மிஸ்டர்.திருக்குமரன்'

நான் எழுந்தேன்.

'ஃபஸ்ட் ரைட். லாஸ்ட் லேப் சார். ரிப்போட்ட டைரெக்டா நாங்க உங்க ஆஃபீஸுக்கு அனுப்பிடுவோம். நோ நீட் டூ வெய்ட்'

எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்து சேர்ந்த போது மணி மதியம் மூன்று ஆகிவிட்டிருந்தது.மிதமான வெயில். தூரத்தில் கரையும் காகங்கள். என்னுடைய கைப்பையில் இருந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வைத்தேன்.

அந்தக் குழந்தையின் அத்தனைக் கிளிஞ்சல்களும் என்னுடைய பையில் இருந்தன.

நான் சென்ற பிறகு அந்தக் குழந்தை அவளது அம்மா அல்லது அப்பாவின் காலைப் பிறாண்டிக் கொண்டிருந்திருக்கும். அவர்கள் சோர்வில் கண் மூடி சாய்ந்திருப்பார்கள். வழக்கம் போல.

Sunday, November 20, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - தற்கொலை

தவறாமல் கேட்கிறார்கள்
'என்னை மணம் புரிந்து கொள்வாயா?" என்று.
தவறாமல் சொல்கிறேன்
"நீச்சல் தெரிந்தவன்
நீரில் மூழ்கித் தற்கொலை செய்து
கொள்ள முடியாது என்று"

எரிபரந்தெடுத்தல் - 1

பாக்யம்

'அம்மா' என்று கத்தியபடியே உள்ளே வந்தான் மாதவன்.

அடுப்படியில் துருத்து ஊதிக் கொண்டிருந்த பாக்யம் இருமியபடியே கேட்டாள். ' என்னடா?"

'அம்மா. பாவு இல்லியாம்'

'ஏனாம். ஏக்கனவே ஒரு வாரமா தறி சும்மா கெடக்கு. எப்ப வருமாம்?"

'தெரியலம்மா. மொதலாளி எதுவுஞ்சொல்லல.ஒரு எட்டு சேல மொழ பாவு வந்துதாம்.எண்ணெக்காரச் செட்டியாருக்கு குடுத்துட்டாராம்'

'யாரு நம்ம பங்களா மேடு எண்ணெக்காரச் செட்டியாருக்கா?"

'ஆமா.அவுரு ரெண்டு வாரமா சும்மாதான் இருக்காராம்'

'சரி. கஞ்சி சோறு வடிச்சு வச்சிருக்கேன்.குடிச்சுட்டு போ. பள்ளிக்கோடத்துக்கு நேரமாச்சு.மறக்காம வட்டில எடுத்துகிட்டு போடா'

மாதவன் தயங்கினான்.

'அம்மா.மத்தியான சத்துணவு சாப்பிட்டா வகுத்த வலிக்குதும்மா.சாப்பிடவே முடியலம்மா'

பாக்யம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

'அதுக்கு என்ன இப்ப. சுடுசோறு வடிக்கச் சொல்றியா.ஒரு வாரஞ்சாப்டா எல்லாஞ்சரியாப் போகும்"

வார்த்தைகள் குபுக்கென்று பொங்கும் ரத்தம் போல இளஞ்சூடாக வெளிவந்தன.

மாதவன் மெதுவாக அடுப்படிக்குச் சென்றான்.

சிறிது நேரம் கழித்து மூலைகள் ஓட்டையாகிப் போன ஒயர் கூடையில் கிழிந்த நோட்டு புத்தகங்களையும் வட்டிலையும் போட்டுக் கொண்டு கிளம்பினான். போதிய இடமில்லாததால் வட்டில் பிதுங்கியது.

பாக்யம் விளக்குமாறை எடுத்து தறி,ராட்டை ஆகியவற்றை சுத்தம் செய்யத் தொடங்கினாள்.ஒரு நாள் விட்டால் கூட நூலாம்படை அப்பிக் கொள்கிறது.மூட்டைப் பூச்சிகளின் தொந்தரவு வேறு.எத்தனை தடவை சீமெண்ணெய் அடித்தாலும் போகிறதில்லை.

முன் தினம் பெய்த மழையில் வீடு ஓதம் எடுத்து விட்டது. கால் வைத்தால் பிசுபிசுவென்று கோழையை மிதித்த மாதிரி சவசவக்கிறது.

சுத்தம் செய்து விட்டு கொஞ்சம் போல் பல்பொடியை போட்டுக் கொண்டு பொடக்காளியில் நின்று பல் விளக்க ஆரம்பித்தாள்.

எதிர் வீட்டு காந்தாமணி வீட்டுக்குள் வந்து குரல் கொடுத்தாள்.

'பாக்யா!"

'வாயில் இருந்த எச்சிலைத் துப்பினாள்.

'என்னா காந்தா?"

'டீ! ஒம்புருஷன் ஆடு வெட்ற கொட்டாயிக்கு பக்கத்துல இருக்கிற டிச்சியில வுழுந்து கெடக்குறாண்டி" பக்கத்தில் வந்து மெல்லிய குரலில் சொன்னாள்.

ஒரு வினாடி யோசித்தாள்.மறுகணம் கையில் இருந்த பல்பொடியைக் கொட்டி விட்டு சேலையைத் தூக்கி இடுப்பில் சொருகிக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் வந்தாள்.

'கண்டாரோழிப் பையா! குடிச்சி ஊட்டக் கெடுக்குறதுமில்லாம மானத்த வேற வாங்குறியா அவுசேரிக்கு பொறந்தவனே.வர்றேன் இருடா தாயோளி" என்று கத்தியபடியே தெருவில் ஓட்டமும் நடையுமாக நடந்தாள்.

சத்தம் கேட்டு வெளியே வந்த பூரணியும், காந்தாமணியும் பாக்யத்தை இழுத்துப் பிடித்தார்கள்.

'கத்தாதடீ.போயி அவனத் தூக்கிட்டு வா...கத்தி ஊரக் கூட்டாதடி'

'நீ விடுக்கா. பொழுது விடிஞ்சா இந்த புண்டவாயனுக்கு வேற வேலப்புண்ட இல்ல.ஊருல நாலு பேரு பாத்தா பாத்துட்டு போட்டுமே. எங்க பொழப்பு கொடி கட்டி பறக்குது பாரு இப்ப அரக் கம்பத்துல பறக்கறதுக்கு.பையனுக்கு ஒரு வாயி சோறு நல்ல சோறு போட முடியல. வகுத்த வலிக்குதுங்குறான். இவனுக்கு
எதுக்கு பொண்டாட்டி, புள்ளைங்க. சுன்னி மொழ நீளம் இருக்குறவனெல்லாம் ஆம்பளையா? த்தூ..அவுசேரிக்குப் பொறந்த பசங்க..இவனச் சொல்லி என்ன ..இவனுக்கு கட்டி வச்சாம்பாரு எங்கப்பன் ஊரக்கெடுத்த தாயோளி அவஞ்சுன்னி மேல எட்டி எட்டி மிதிச்சா சரியாப் போகும்..தாயோளிப் பசங்க..'

'பாக்யா! கத்தாம போயி அவனத் தூக்கிட்டு வா சாமி. அப்புறமா பேசிக்கலாம். போம்மா".

மொபெட்டில் வந்த ஈஸ்மூஸ் வாத்தியார் ஓரமாக நிறுத்தி விட்டு வந்து பாக்யத்தின் தோளைத் தொட்டு உலுக்கித் தள்ளி விட்டார்.

'என்னத்த பேசறது வாத்தியாரே..எத்தன பஞ்சாயத்து பண்ரது..ஒரு நா சும்மா கெடக்குறான்...அடுத்த நா கெளம்பிர்ரான்..என்னப் பாரு ..எஞ்சுன்னியப் பாருன்னு..இன்னிக்கு டிச்சியில விழுந்து கெடக்குறானாம்'

பாக்யம் உடைந்து அழுதபடியே ஆடு வெட்டும் கொட்டகை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

Saturday, November 19, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - தெருநாய்கள்

எச்சிலை தனில் எறியும் சோற்றுக்கும்
மஜ்ஜையில்லாத எலும்புத் துண்டுகளுக்கும்
உமிழ்நீர் வடிய
தொங்கும் நாக்கோடு
என் வீட்டுக்கு வெளியே
காத்திருக்கும் தெருநாய்கள்
வீட்டுக்குள் மட்டும் வருவதில்லை
எப்படி அழைத்தாலும்.

Tuesday, November 8, 2011

வைகுண்டத்தின் இரும்புக் கதவுகள்

'அண்ணே ! எப்பண்ணே போடும்'
'டேய்! இதென்ன பஸ்ஸா, ரயிலா.நேரத்துக்கு வாரதுக்கு..போடும்போது எடுத்துட்டு போடா"

சரிதான். மாடு எப்போது சாணி போடும் என்று யாருக்குத் தெரியும்.

அதிகாலை நான்கு மணிக்கு வீடு வழிக்க சாணி எடுக்க வந்து மாட்டின் ஆசன வாயை பார்த்துக் கொண்டிருக்கும் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்.எனக்குக் கிடைத்தது அன்று.

நான் தூங்குவது போல் நடித்து நடித்துப் பார்த்தேன். அம்மா விடவில்லை.
கடைசியில் பலம் கொண்ட மட்டும் என் போர்வையை உருவினாள்.

அதென்ன பாஞ்சாலியின் புடவையா உருவ உருவ வந்து கொண்டே இருப்பதற்கு.
ஒரே உருவலில் வந்து விட்டது.

எழுப்பித் துரத்தி விட்டாள். காப்பி கேட்டேன். வந்து குடிச்சுக்கோ என்று விட்டாள்.

முன் தினம் இரவு குடித்தது,உண்டது எல்லாம் எப்போது வேண்டுமானாலும்
வாய் வழியே வரத் தயாராக இருந்தது.

அம்மாவுக்கு சாணி வழிப்பது என்பது ஒரு சடங்கல்ல. அதுவும் சனிக்கிழமை
வழித்தே தீர வேண்டும்.

அதுவும் அன்று புரட்டாசி முதல் நாள்.சனிக்கிழமை. முதல் நாளே சனிக்கிழமை.
போதாதா?

மாட்டுக்கு அருகில் போய் வயிற்றைத் தடவிக் கொடுத்தேன். வைக்கோலை
அள்ளியெடுத்து வாய்க்கருகில் காட்டினேன். தண்ணீர் காட்டினேன்.
எதையும் சட்டை செய்யவில்லை.

'நான் போட்டு விடுவேன்.நீயும் எடுத்துக் கொண்டு போய் விடுவாய். அப்படித்தானே அற்பனே?" என்பது போல் நின்றது.

கடைசியில் மனமிறங்கி போட்டது ஐந்தரை மணிக்கு.

காப்பி கேட்டேன்.

'குளிச்சுட்டு வந்து குடி'.

'சரி. சுடு தண்ணி வச்சியா?"

'வெறகில்ல..ஒரு மயிரில்ல..ஆத்து நொம்ப தண்ணி போகுது...போ'

அதிகாலை நாலு மணிக்கு நான் எழுந்ததேயில்லை. இப்போது குளியல் ஆறு மணிக்கு.

ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு ஆறை ஒரு அரை மணி நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு குதித்தேன்.

வெடவெடக்கும் உடம்போடு வீட்டுக்கு வந்தேன்.

வாசலில் அம்மா வாயெல்லாம் பல்லாக கையில் வெண்கலச் செம்போடு நின்றிருந்தாள்.

பால்காரனுக்காக நிற்கிறாளா ?. இல்லையே..பால் எவர்சில்வர் பாத்திரத்தில் தானே வாங்குவாள்.

' டேய்..ராஜா..போய் கோமியம் கொஞ்சம் புடிச்சுட்டு வந்திருப்பா?"

'கோமியமா..அது எதுக்கு'

'கெழவி செத்த தீட்டு நேத்துதான் முடிஞ்சுருக்கில்லியா..அதுக்கு தான்..தெளிச்சா நல்லதாம்'

'ஆரு சொன்னா'

'நம்ம பூசாரிதான்'

'அடேய் பூசாரி' என்று கலைஞரின் பராசக்தி வசனம் வாயிலிருந்து பீறிட்டுக் கிளம்பியது.அடக்கிக் கொண்டு கிளம்பினேன்.

இந்த முறை மாட்டை நான் தாஜா செய்யவில்லை.

அது ஊற்றும் போது சரியாக கவனித்துப் பிடித்தால் போதும்.போனால் போனது தானே.அடுத்த தடவை ஊற்றும் வரை அல்லவா காத்திருக்க வேண்டும்?.

அந்த நேரத்தில் மாடு என்பது கட்டற்ற பெருவெளியாகவும், சாணி என்பது எங்கும் நிறைந்திருக்கும் பரம் பொருளாகவும், கோமியம் என்பது போனால் திரும்ப வராத காலமாகவும் எனக்குத் தோன்றியது.

ஒருவழியாக மனமிறங்கி ஊற்றியது எட்டு மணிக்கு.

வீட்டுக்குள் நுழையும் போதே இட்லி அவிக்கும் மணமும், தேங்காய்ச் சட்னியில் தாளித்துக் கொட்டும் மணமும் நாக்கில் தட தட வென்று நீர் வரச் செய்தது.

இரண்டு இட்லிகளை எடுத்துப் போட்டுக் கொண்டு கொஞ்சம் தேங்காய்ச் சட்னியை ஊற்றி முதல் விள்ளலைத் தோய்த்து வாயில் இறக்கப் போகும் போது தங்கை பார்த்து விட்டுக் கத்தினாள்.

'அம்மா! இங்க வந்து பாரேன்'

நான் வாய்க்கு கொண்டு போனதை அப்படியே வைத்துக் கொண்டு நின்றேன்.

'அடேய்' என்று பலத்த சத்தத்துடன் அம்மா புயல் வேகத்தில் வந்து தட்டைப் பிடுங்கினாள்.

எனக்கு கண்ணில் நீர் வரும் போலிருந்தது.

'என்னம்மா?"

'நல்ல நாள் அதுமா..சாமி கும்பிடாம என்னடா வகுத்துக்கு வேண்டிக் கெடக்கு'

கையில் தேங்காய்ப் பழத்தட்டுடன் வீதியில் இறங்கி நடந்தேன்.

நெற்றியில் நாமம். வயிற்றில் பசி. வாழைத்தோட்டத்தில் எழுந்தருளியிருக்கும்
'கோவிந்தசாமி திருக்கோவிலுக்கு'

இருபது நிமிட நடை.

அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசை நின்றிருந்தது. கோவிந்தசாமியை தரிசிக்க.
*********************************

இவருக்கும் எனக்கும் ஒரு 'நெருங்கிய' தொடர்பு உண்டு. இவருடைய பெயர்தான் என்னுடைய பெயரும்

இந்தப் பேரை வைத்திருப்பவன் பள்ளியிலும், கல்லூரியிலும் என்ன பாடு படுவான் என்பது யாரும் அறியாததல்ல.

அதனால் இவர் மேல் நான் கட்டற்ற 'பக்தி' வைத்திருந்தேன்.

இவர் சுற்று வட்டாரத்தில் மிகுந்த பிரசித்தி பெற்றவர். குடியானவர்கள் இவரைக் கேட்காமல் எதுவும் பயிரிட மாட்டார்கள்.

கோயில் என்னமோ மிகச் சிறியதுதான். முப்பது பேருக்கு மேல் நிற்க முடியாது.சிலையும் சிறியது தான்.

அதனாலென்ன மூர்த்தி சிறிதெனினும்.கீர்த்தி பெரிதல்லவா?

கோவிலிலிருந்து கொஞ்ச தூரம் வரை தட்டி கட்டி ஒழுங்கு படுத்தியிருந்தார்கள்.
அதற்கப்புறம் வரிசை தெருவில் புரளும் குடிகாரனைப் போல் ஒழுங்கின்றி வளைந்து கிடந்தது.

போய் நின்று கொண்டேன்.

'நாமதேஸ்ய' கிட்ணன் தான் பூசாரி. அவருக்கு இந்த அடைமொழி வந்தது ஒன்றும் பெரிய சுவாரசியமான விஷயமில்லை.

அர்ச்சனை செய்யச் சொல்லி யாராவது தேங்காய்ப் பழத்தட்டை நீட்டினால் பேரைக் கேட்டுக் கொண்டு பேருக்குப் பின்னால் 'நாமதேஸ்ய' என்று விடுவார். அதோடு சரி.அர்ச்சனை முடிந்தது.

ஆரஞ்சு நிறத்தில் பிரசாதம். கொஞ்சம் துளசித் தண்ணீர். கூம்பு வடிவ வெண்கல மணியினால் தலையில் ஒரு அழுத்து.அவ்வளவுதான்.

எனக்கு முன்னால் நின்றிருந்தவர் யாரென்று முகம் பார்க்காமலே தெரிந்தது. 'கள்ளபார்ட்' ரங்கசாமிக் கவுண்டர்.அவர் தலைக்கு விளக்கெண்ணையும், வேப்பெண்ணையும் கலந்த கலவையைப் பூசுவார்.
பெண்களின் கூந்தலுக்கு மணமுண்டோ இல்லையோ..இவர் மண்டைக்கு உண்டு பிரத்யேக மணம்.

எனக்கு பின்னால் ராஜாத்தி. சரிகைப் புடவை கட்டி வந்திருந்தாள். படித்துறை ஆலமரத்தையும்,இவளையும் பத்து பேர் சேர்ந்தாலும் கட்டிப் பிடிக்க முடியாது என்கிற சொலவடை எங்கள் கிராமத்தில் புழக்கத்தில் உண்டு.

வெள்ளாட்டை முழுங்கிய மலைப் பாம்பு மாதிரி 'புஸ்..புஸ்ஸென்று மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.

வரிசை நகர்வது போல் தெரியவில்லை.சிகரெட்டுப் புகையும், முன் தினம் குடித்த குடியும் பாதியில் போன தூக்கமும் வயிற்றில் ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தன.

மணி பத்தாகி விட்டது. வெயில் ஏவுகணை மாதிரி மண்டையில் இறங்கிக் கொண்டிருந்தது.

வயிறு முழுவதும் புகை நிரம்பியது மாதிரி ஒரு உணர்வு. தண்ணீர் கேட்டேன். கூட்டத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த ஒருவர் கொண்டு வந்து கொடுத்தார்.குடித்தேன்.ஏன் குடித்தேன் என்றாகி விட்டது.கிணற்று நீர்.

தாகம் அதிகமாகிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து பாதி வரிசைக்கு வந்து விட்டேன். இதற்கிடையில் ஒரு சிறு ஹாஸ்ய நிகழ்வு ஒன்று நடந்தது.

'மாயாபஜார்' முத்துசாமி செட்டியார் பக்தி மிகுதியில் கையை உயர்த்திக் கும்பிட்டுக் கொண்டே கோவிலை விட்டு வெளியே வந்தார். அவர் வரும்போது அவருடைய வேட்டியின் நுனியை யாரோ அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள். அவர் கோவிலை விட்டு வெளியே வந்த பின் இடுப்பில் வேட்டி இல்லை.

இதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் நான் இல்லை.

போதாததற்கு பக்கத்து கரும்புத் தோட்டத்தில் கரும்பு வெட்டி முடித்தாகி விட்டதால் அடிக் கரும்புக்கு தீ வைத்து விட்டார்கள். எப்போதும் என் பக்கம் வீசாத காற்று அன்று மிகச் சரியாக என் பக்கம் வீச, புகையில் மூச்சு முட்டியது.

மணி பன்னிரெண்டு ஆகி விட்டது.

பூசாரி திரைச்சீலையை இழுத்து மூடினான். உச்சி கால பூஜையாம்.
அரை மணி நேரம் ஆகும் என்றார்கள். என்னால் முடியவில்லை.

மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.'

'கோவிந்தசாமி!!! உன்னை மற்றொரு நாள் சாவகாசமாக பார்க்கிறேன். இன்று என்னால் முடியவில்லை'

தேங்காய்ப் பழத்தட்டை கையில் இறுகப் பிடித்துக் கொண்டு அப்படியே ராஜாத்தியின் மேல் சாய்ந்தேன்.

'தம்பி மயக்க்ம் போட்டுட்டுது' என்று பெரிதாக அலறினாள்.

என்னை அப்படியே அலேக்காகத் தூக்கி தட்டியை விட்டு வெளியே கொண்டு வந்தார்கள்.
********************************************
பொன்னுசாமி கவுண்டரின் தோட்டத்தில் இருந்த கிணற்றடியில் உட்கார்ந்து கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டேன்.

தேங்காயை பக்கத்திலிருந்த பெரிய கல்லில் உடைத்து நீரைக் குடித்தேன்.
அமிர்தமாக இருந்தது.

வேலியோரம் இருந்த துளசிச் செடியிலிருந்து கொத்தாக இலைகளைப் பறித்துப் போட்டேன்.

வீட்டுக்குத் திரும்பும் வழியில் நாடார் கடையில் ஜிலேபி பவுடரை வாங்கி தேங்காயில் கொட்டி விட்டு நானும் கொஞ்சம் இட்டுக் கொண்டேன்.

வீடு வந்து சேர்ந்த போது மணி ஒன்று.

அம்மா பயபக்தியோடு வாங்கி பூஜையறையில் வைத்தாள்.

அன்று மதியச் சாப்பாடு பிரமாதமாக இருந்தது. சாப்பிட்டு விட்டு சொம்பு நிறையத் தண்ணீர் குடித்தேன். வயிற்றிலிருந்த புகை மூட்டம் விலகி தெளிவான பருவ நிலை நிலவியது.

'வந்துட்டானா?" என்றபடியே வீட்டுக்கு வந்த அப்பா பூஜையறைக்குப் போய் பயபக்தியோடு ஜிலேபி பவுடரை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டார்.

இப்படியாக முற்பகலில் அம்மா சொன்னாள் என்று கோவிந்தசாமிக்காக போட்ட நாமத்தை பிற்பகலில் அம்மாவுக்கும், கோவிந்தசாமிக்கும் சேர்த்துப் போட்ட திருப்தியில், படுக்கையில் சாய்ந்து கண்ணை மூடினேன்.

வைகுந்தத்தின் இரும்புக் கதவுகளை டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ற பலத்த சத்தத்துடன் யாரோ எனக்காக திறக்கும் சத்தம் என் மனச்செவியில் தெளிவாகக் கேட்டது.

Friday, November 4, 2011

பல் விளக்கிக் கொண்டிருந்த ஜப்பானியரிடம் போய் பைசாசா நகரத்திற்கு வழி கேட்டவர்

இகுஷிமோ காகயாமா ஜப்பானின் ஏன் உலகம் கண்ட மாபெரும் கவி ஆளுமை என்று நான் சொல்ல மாட்டேன்.ஏனென்றால் அவரே அப்படி சொல்லிக் கொண்டதில்லை.ஆனால் நல்ல சிந்தனையாளர். அவருடைய மண்டையில் மயிரில்லாததற்கும் இதற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறதா என்று என்னைக் கேட்காதீர்கள். அவருடைய சிந்தனைகள் எப்போது உதிக்கும்,எப்போது ஒளி விடும் என்று தீர்க்கமாய்ச் சொல்ல முடியாது.

அவரைச் சுற்றி எப்போதும் இளைஞர் கூட்டம் இருக்கும்.அவரிடமிருந்து சிதறும் சிந்தனைகளை சொட்டு பாக்கியில்லாது பிடித்து பானைகளை நிரப்பி விடுவார்கள்.அவர் சிந்தனை செய்யும் பாங்கு பரிணாம வளர்ச்சி பெற்று வந்தது. முதலில் விட்டத்தைப் பார்த்தபடி சிந்தித்துக் கொண்டிருந்தவர், வேதாளம் போல் மரத்தில் ஏறி சிந்தனை செய்ய ஆரம்பித்தார். இது ஒரு கட்டத்தில் விபரீதத்தில் முடிந்தது.

அது என்னவென்றால்,ஒரு அஷ்டமி தினத்தன்று காலையில் எழுந்து பல் விளக்க ஆரம்பித்தவர் சிந்தனை வயப்பட்டார். அந்த சிந்தனை வயம் சற்று நீண்டதில் முன்பகல் வந்து விட்டது.கை பற்தூரிகையை ( மொழி'பெயர்'ப்பு) இடதும், வலதுமாக ஆட்டிக் கொண்டேயிருந்தது.சீடர்கள் அவரது முகத்தைப் பார்த்தபடி, எதாவது சொல்வாரென்று உட்கார்ந்திருந்தார்கள்.ஒரு வழியாக மாலை ஆறு மணிக்கு சிந்தனை வயத்திலிருந்து விடுபட்டார்.

அன்றிலிருந்து அவருக்கு வாயில் பற்தூரிகையை வைத்தால்தான் சிந்தனைக் குதிரைகள் ஓடும் என்றானது. அவரது சிந்தனைகளைக் குறிப்பெடுக்க சீடர்கள் மிகுந்த சிரமப்பட்டார்கள்.வாயிலிருந்து பொங்கி வரும் நுரையினூடே அவர் சொல்லும் சிந்தனைக் குறிப்புகள் அவர் போகும் வழியெங்கும் சிதறிக் கிடக்கும்.

அன்றொரு நாள்.

ஒரு கிழவன் தள்ளாடியபடி அவருடைய வீட்டை நோக்கி வந்தான். பார்த்தால் நீண்ட தூரம் பிரயாணம் செய்து வந்தவன் போல் அத்தனை களைப்பு. வந்தவன் வீட்டு வாசலிலேயே மயங்கி பொத்தென்று விழுந்தான்.

சீடர்கள் அவனுக்கு மயக்கம் தெளிவித்து உண்ண உணவு கொடுத்தார்கள்.
பற்தூரிகை இடதும் வலதுமாக ஆட நம் சிந்தனைச் சிற்பி அவரிடம் பேசலானார்.

'எங்கிருந்து வருகிறீர்?"
கிழவனுக்குத் தலை சுற்றியது.
'நீங்கள் என்ன சொல்கிறீர்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.வாயிலிருந்து
அதை எடுத்து விட்டு பேசுங்கள்.'

சிந்தனைச் சிற்பியின் முகம் ஜிவ்வென்று சிவந்தது.

தன் சீடன் ஒருவனைப் பார்த்து சைகை செய்ய அவன் அதே கேள்வியைக் கேட்டான்.

'நான் கிகுஜிரோ மலையிலிருந்து வருகிறேன்'
'அந்த மாதிரி ஒரு மலையை நாங்கள் கேள்விப்பட்டதேயில்லையே.அது எங்கிருக்கிறது?"
'எனக்கு சரியாகத் தெரியாது. அங்கிருந்து நான் கிளம்பி இன்றோடு வருடம் ஐம்பது ஆகிறது.என்னுடைய இருபதாவது வயதில் நான் புறப்பட்டேன்'
'இவ்வளவு வருடங்களாக ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்தீர்களா?"
'ஆம். நான் பைசாசா நகரத்திற்கு போவதற்கு வேண்டிதான் கிளம்பினேன்.
கடைசியில் எப்படியோ கண்டுபிடித்து விட்டேன். இது பைசாசா நகரம் தானே?"
'இல்லை. இது புகுஷிமோ நகரம். பைசாசா நகரத்தைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டதில்லை'

கிழவன் அழ ஆரம்பித்தான்.
'கடவுளே! என் உயிர் பிரிவதற்குள்ளாகவேனும் அந்த நகரத்திற்குப் போய் விடவேண்டும்.கருணை காட்டு'

'கிழவரே! அழாதீரும். அப்படி அந்த நகரத்தில் என்ன சிறப்பு?. அங்கு போவதற்காக உங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழித்திருக்கிறீர்கள்."

'அந்த நகரத்தில் ஒரே ஒரு வீடு மட்டுமே உண்டு.அந்த வீட்டில் ஆட்களும் கிடையாது.அந்த வீட்டிற்கு சென்றால் நான் யார் என்பதையும், வாழ்க்கை என்றால் என்ன என்பதையும் தெரிந்து கொள்வேன். அதற்காகத்தான் நான் வீட்டை விட்டுக் கிளம்பினேன்.என்னிடம் ஒரு வரைபடம் இருந்தது. அதன்படி நான் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் நடந்தேன்.ஒரு நாள் நான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது என்னுடைய கழுதை அதைத் தின்று விட்டது.
அதற்குப் பிறகு நான் ஊர் ஊராக அலைந்தேன். யாருக்கும் பைசாசா
நகரத்தைப் பற்றித் தெரியவில்லை. இதோ பாருங்கள் உங்களுக்கும் தெரியவில்லை.'

'எனக்குத் தெரியும்'

குரல் வந்த திசை நோக்கி அனைவரும் திரும்பினர்.

சிந்தனைச் சிற்பி தூரிகையை வாயிலிருந்து எடுத்து விட்டு தெளிந்த குரலில் பேசினார்.

'என்ன? உங்களுக்குத் தெரியுமா?'
'தெரியும். என்னிடம் வரைபடம் கூட உண்டு.'
'கடவுளே! நின் கருணையே கருணை. அதை எனக்குத் தருவீர்களா?'
'நீங்கள் திரும்ப வந்து அதைக் கொடுப்பீர்கள் என்பது என்ன நிச்சயம்.?"
'வயதில் நான் பெரியவனானாலும் உங்கள் காலில் விழுகிறேன். ஐம்பது
வருடங்களாக நான் அந்த நகரத்துக்குப் போக நாயாய் அலைகிறேன். சத்தியமாகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்.என்னை நம்புங்கள்"
'சரி.அந்த வரைபடத்தின் படி நீங்கள் போனால் வரும் குளிர்காலத்தில் நீங்கள்
அந்த நகரத்தை அடைவீர்கள். உங்கள் ஐம்பதாண்டு காலத் தேடல் முடிவுக்கு வரும்'.

கிழவன் வாய் நிறையப் புன்னகையோடு வரைபடத்தைப் பெற்றுக் கொண்டான்.

அந்த வரைபடத்தில் நான்கு பகுதிகள் இருந்தன. முதல் பகுதி முழுவதையும் அவன் கோடையில் கடந்தான். இரண்டாம் பகுதி முழுவதையும் அவன் வசந்தத்தில் கடந்தான்.மூன்றாவது பகுதி முழுவதையும் அவன் மழைக்காலத்தில் கடந்தான்.நான்காவது பகுதியை அவன் நடக்க ஆரம்பித்தபோது குளிர்காலம் தொடங்கியது.

கடைசி அம்புக் குறியை அவன் நடக்கத் தொடங்கியதும் கடுமையான பனிப்புயல்
வீசத் தொடங்கியது. மிகுந்த சிரமத்துடன் அவன் நடக்கலானான். இன்னும் கொஞ்ச தூரம்தான்.அவன் தன் ஐம்பது வருடக் கனவை அடைந்து விடுவான். தான் யார் என்றும், வாழ்க்கை என்றால் என்னவென்றும் அவன் தெரிந்து கொள்வான்.

பனிப்புயல் உக்கிரம் அடைந்தது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடந்தான்.இரண்டு நாட்கள் அப்படியே நடந்தான்.இரண்டாம் நாளின் இறுதியில் அவன் அந்த வீட்டைக் கண்டான். எங்கும் பனி மூடிக் கிடந்தது.

அழுகை பொங்கும் கண்களோடு அவன் அந்த வீட்டை அடைந்து அதன் கதவை மெல்லத் திறந்தான்.

உள்ளே வாயில் பற்தூரிகையோடு சிந்தனைச் சிற்பி மர நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.

தூரிகையை எடுத்து தூர எறிந்து விட்டு சொன்னார்.

'என்ன கிழவரே! வாழ்க்கை என்றால் என்ன என்று தெரிந்து கொண்டீர்களா?நீர் ஒரு உத்தமன் ஐயா.வரைபடத்தைத் திருப்பிக் கொடுக்க கடும் பனிப்புயல் என்றும் பாராது வந்திருக்கிறீர்களே?"

Friday, October 21, 2011

கிழவியின் மார்பும்,வயதானவருடன் உடலுறவும்.

மேற்கண்ட குறிச்சொற்களைத் தேடிக் கொண்டு இரண்டு
ஆண்மீக மெய்யன்பர்கள் என்னுடைய வலைப்பக்கத்திற்கு வந்திருக்கிறார்கள்.

வயதானவருடன் உடலுறவு - இந்தக் 'குறிச்'சொல்லில் இருக்கும் 'எழுச்சி'யை என்னால் உணர முடிகிறது.
கிழவியின் மார்பு - என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

என்னுடைய வலைப்பக்கத்துக்கு வருகிறவர்கள் , கதைளையும் ,கவிதைகளையும்( அப்படி என்றுதான்
நான் நம்பிக் கொண்டிருக்கிறேன்) படிக்கத்தான் வருகிறார்கள் என்ற என் நினைப்பில்
ஒரு மணல் லாரியையே கவிழ்த்த அந்த பக்தகோடிகள் எங்கிருந்தாலும் வாழ்க!!

Thursday, October 6, 2011

நன்னம்பிக்கை முனை

'சவுண்ட் சர்வீஸ்' மாரியப்பன் தன் முதல் அடிப்பொடியுடன் கோவிலில் பலவண்ண அலங்கார விளக்குகளை அமைப்பதில் மும்முரமாக இருந்தான். மற்ற இருவரும் ஊரின் முக்கிய சந்திப்புகளில் ஒலி பெருக்கி கட்டுவதில் மும்முரமாக இருந்தார்கள்.

கோவிலுக்கு அருகிலிருக்கும் மைதானத்தில் இரண்டு ஆட்டாந்தூரிக்காரர்கள் ( நான்கு பெட்டிகள் கொண்ட சுழல் ராட்டினம்) , கம்பங்களை நிறுத்துவதற்கு குழி தோண்டிக் கொண்டிருந்தார்கள்.

ஈயத்தில் வார்ப்படச் சிலைகளைச் செய்யும் அந்தியூர்க்காரர்கள் முன் தினம் இரவே வந்து விட்டிருந்தார்கள்.

பலூன் காரர்கள், சின்ன சின்ன பிளாஸ்டிக் பொம்மைகள், வீட்டு உபயோகப் பொருள் ஆகியவற்றை விற்பவர்கள், நடிகர்கள் , க்ரிக்கெட் வீரர்களின் வண்ணப் பட வியாபாரிகள், கம்ப்யூட்டர் ஜோசியக்காரர்கள், வளைய விளையாட்டுக்காரர்கள் ஆகியோர் காலையிலிருந்தே ஊருக்கு இரண்டு திசையிலிருந்து வரும் பேருந்துகளில் வந்து இறங்கிய வண்ணம்
இருந்தார்கள். இறங்கியவர்கள் ஆற்றோரம் இருக்கும் காபி, டிபன் கடையில் காலைப் பலகாரத்தை முடித்துக் கொண்டு கடை போட அவரவர்க்குத் தோதான இடங்களைத் தேடிச் சென்றார்கள்.

எதிர்பாரா விதமாக வந்த சர்க்கஸ்காரர்களுக்கும் ஊரின் ஒரு ஓரத்தில் இடம் ஒதுக்கித் தரப்பட்டது.

பெண்கள் அனைவரும் வீட்டைத் தூய்மைப் படுத்துவதில் தீவிரமாக இருந்தார்கள்.பரணில் இருந்த வெண்கலப் பாத்திரங்கள் அனைத்தும் வெளியே எடுத்து வைக்கப்பட்டு புளியினால் தேய்த்துக் கழுவப் பட்டு கவிழ்த்தப்பட்டன.

வெள்ளை அடிக்க ஆள் கிடைக்காமால் ஆளாளுக்கு கட்டைத் துடைப்பத்தால் சுண்ணாம்பை முக்கி எடுத்து கை போன போக்கில் வீட்டுக்கு பொலிவு சேர்த்தார்கள்.

பலசரக்கு கடைகளில் காலையில் இருந்தே நல்ல கூட்டம். பட்டியல் வைத்துக் கொண்டு ஆளாளுக்கு லபோ திபோ என்று கத்தி கடைக்காரர்களின் சுடு பேச்சிற்கு ஆளாகிக் கொண்டிருந்தார்கள்.

ஆடவர்கள் வெகு மும்முரமாக செலவுக்கு வேண்டிய பணத்துக்காக கடைசி சேலையை நெய்து கொண்டிருந்தார்கள்.

இப்படி ஊர் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில்
தன் சகாக்களோடு சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார் 'ஜட்கா' ராமசாமி நாயக்கர்

***********************
இந்த வருடம் உட்டி( மூங்கில்) மரம் உயரம் அதிகமாக இருப்பதாகவும், ரொம்பக் கனப்பதாகவும் எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.கடந்த இரு வருடங்களாக சாமி சப்பரம் ஊர் சுற்றிக் கோவில் சேரும் போது யாரும் மரத்து மேலேறி, பத்தே கால் ரூபா , தேங்காய்ப் பழக் காணிக்கை வாங்கவில்லை. இந்த உயரம் இருந்தால் யார் ஏறுவார்கள் ? அடுத்த வருடமாவது உயரம்
குறைந்த மரத்தை நட வேண்டும் என்று காற்றில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

ஆண்கள், பெண்கள் , சிறுவர் சிறுமியர்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி உட்டி நடும் நிகழ்ச்சியைக் காண கோவிலின் முன் கூடிய வண்ணமிருந்தனர். ஒலி பெருக்கியில் ' ஆயர் பாடி மாளிகையில்'ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.

குடிமக்கள் ஆற்றோரப் புல்வெளியில் அமர்ந்து தாக சாந்தி செய்து கொண்டிருந்தனர்.

அம்மாக்களின் இடுப்பில் அமர்ந்து கொண்டும், அப்பாக்களின் கையைப் பிடித்துக் கொண்டும் வரும் குழந்தைகள் பொம்மைக் கடையைக் கண்டால் அழுது ஆர்ப்பாட்டம் செய்தன.

கட்டிளம் காளையர் கூட்டம் ஒன்று சர்க்கஸுக்கு முன்பாக நடக்கும் ரெக்கார்ட் டேன்ஸைக் காண விரைந்தது.

படுக்கப் போட்டிருந்த உட்டி மரத்தில் பலமான கயிறுகள் கட்டப்பட்டு நான்கு திசைகளிலும் திடகாத்திரமான ஆண்கள் அதைப் பிடித்துக் கொண்டார்கள்,

கோவிலின் மேல் இருந்த இளைஞர் கூட்டம் ஒன்று மெதுவாக வடக்குத் திசை கயிறை இழுக்க மரம் குழியில் இறக்கப் பட்டு மெதுவாக மேலேறியது.

மத்தளக்காரர்கள் ஆவேசமாக மத்தளங்களை முழக்கினார்கள். கொம்பு வாத்தியம் பலமாக ஊதப்பட்டது.

சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் கூட்டம் ஒன்று மத்தாளச் சத்தத்திற்கு ஏற்றவாறு ஆடிக் கொண்டிருந்தது.

'ஜட்கா' ராமசாமி நாயக்கர் தன் சகாக்களோடு திங்கு திங்கென்று குதித்துக் கொண்டிருந்தார்.இடுப்பில் வேட்டி இல்லாமல்.

*********************************************
என்ன சொன்னாலும் அவர் சமாதானமாகவில்லை.

'அட வுடப்பா..எதோ சின்னப் பையன் சொல்லிப் போட்டான்னு இப்பிடி உம்முனு
உக்காந்துருக்க காலங்காத்தால..ஒன்ர மகந்தானே..வேற யாரா..ஆனாலும் நேத்திக்கி நீ பண்ணுனது கொஞ்சம் ஓவரு..ஆடு ..உன்ன ஆரு வேண்டாமுன்னு சொன்னது.ஆனா இடுப்புல வேட்டி இருக்கான்னு பாத்துப் போட்டல்ல ஆடோனும்..நீ பாட்டுக்கு ஜிங்கு ஜிங்குன்னு சிலுக்கு மாதிரி குதிக்கிற..என்ன இருந்தாலும் படிக்கிற புள்ளக..நீ கொஞ்சம் நாகரீகமா இருந்தாத்தான அவனுக்கு மரியாதி..காலேஜுக்கு போறானுக..நாலு எடம்,நாலு மனுசனுகள பாக்குறானுக..ஊருக்கு வந்தா ஜபர்தஸ்தா பேண்ட்,சட்ட
போட்டுகிட்டு திரியிரானுக..நீ இப்பிடி வேட்டி இல்லாம ஊரு கூடியிருக்கிற எடத்துல குதிச்சா அவனுக்கு ஒரு 'இது' வா இருக்காதா..சின்னப் புள்ளங்க மாதிரி நாமளும் இருக்கணுமின்னு நெனச்சா ஆகுதா..சரி..நேத்து உட்டி நிலுத்துறப்ப பாத்தியா..படிச்ச பசங்க அத்தன பேரும் சுத்தி நின்னு வேடிக்க பாக்குறானுகளே ஒழிய எவனாவது வந்து ஒதவி பன்னானா? கெழக்க இழுத்தா வடக்க போகுது..தெக்க இழுத்தா மேக்க போகுது உட்டிய நிலுத்துனதே ஊருல நெசவு பன்னிகிட்டு, தோட்ட வேலக்கி போய்க்கிட்டு இருக்குற பசங்கதா..அத கூட வுடப்பா..நம்ம அத்தனாரி சாமி..வக்காலோழி..காலயிலிருந்து
நம்ம கூடதான் சீட்டு ஆடிக்கிட்டு இருந்தான்..சாயந்தரம் பாத்தா..வெள்ள வேட்டி என்ன..சட்ட என்ன..அடேயப்பா..கஞ்சி போட்டு சும்மா மொட மொடன்னு..கழுத சுன்னி மாதிரி வெறச்சிகிட்டு நிக்கிது நாலு வருஷத்துக்கு முந்தி அவன் பண்ணாத அட்டுழியமா? இப்ப பாரு ..பையன் வேலக்கி
போறான்..கை நெறய சம்பாதிக்கிறான்..இவனும் கவுரவமா ஊருக்குள்ள வெள்ள வேட்டி சட்ட போட்டுகிட்டு ஜபர்தஸ்தா திரியிறான்...நம்ம காலத்துக்காவது இந்த நோம்பி எல்லாம் நடக்குது..இன்னும் பத்து வருஷங்கழிச்சு இதெல்லாம் நடக்குமா இல்லியானே தெரியாது..
நீ இப்ப என்ன பண்றியன்னா..சாயந்தரம் சாமி ஊர்வலம் போறப்ப..வெள்ள வேட்டி சட்ட போட்டுகிட்டு சும்மா ஜம்முன்னு..சாமிக்கு முன்னாடி கவுரமா போ..அவ்ளவுதான்..சின்னப் பையன் நாலு வார்த்த காரமாப் பேசிப் போட்டான்னு...நோம்பி நாளதுவுமா..இந்தா இதக் குடி..
எல்லாஞ்சரியாப் போகும்'

தன் சகா நீட்டிய பிராந்திக் கலவையை ஒரே மூச்சில் குடித்து விட்டு சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டார் 'ஜட்கா' ராமசாமி நாயக்கர்.

******************************

சாமி ஊர்வலம் தொடங்கிய ஐந்து மணியிலிருந்து , நல்ல பிள்ளையாக
வெள்ளை வேட்டி சட்டையுடன், நெற்றியில் சந்தனமும்,குங்குமமும் துலங்க,
கமகமவென்று தன் சகாக்களோடு ஊர்வலத்துக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த 'ஜட்கா' ராமசாமி நாயக்கர், உறியடிக்காக ஊர்வலம் 'கிரஷர்' மைதானத்தில் இரவு எட்டு மணிக்கு நிறுத்தப்பட்டபோது மைதானத்துக்கு எதிரில் இருக்கும் ஜெபசிங் நாடார் கடைக்குப் பின்புறம்
போய் தாகசாந்தி செய்து கொண்டு வந்தார்.

பவானி TMK மெஹபூப் பேண்டு வாத்தியக் குழுவினரின் தலைமை ட்ரம்பெட்காரன் ஆரம்பித்தான். ' சித்தாட கட்டிக்கிட்டு..சிங்காரம் பண்ணிக்கிட்டு"

யாருடைய கால்களும் நிலத்தில் நிற்கவில்லை. ஜட்கா வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு களத்தில் குதித்தார். 'வித்தார கள்ளி கழுத்தில், முத்தாரம் போட்டானாம்' வரிகளை வாசித்த போது மடிப்பு அவிழ்ந்தது.

'அஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம்' வந்தபோது இறுக்கிக் கட்டியிருந்த வேட்டி மெல்ல அவிழ ஆரம்பித்தது.

கட்டக்கடைசியாக ' சித்தாட கட்டிக்கிட்டு..சிங்காரம் பண்ணிக்கிட்டு" என்று பல்லவியை திரும்பவும் அதி வேகத்தில் அவர்கள் வாசித்தபோது பட்டு ஜரிகை தரித்த வெள்ளை வேட்டி ஜட்காவின் இடுப்பிலேதான் இருந்தது.

ஆனால் வேட்டியின் நான்கு முனைகளும் அவருடைய வலது கையில் இருந்தது.

Friday, September 23, 2011

பிலாத்து சொன்னார்....

"இந்த எளிய மனிதரை ஏன் கொல்லச் சொல்லி என்னை வற்புறுத்துகிறீர்கள். இவர் மேல் நான் எந்தக் குற்றமும் காண்பதற்கில்லை.இவருக்கு மரணதண்டனை வழங்க முடியாது.யாரங்கே! இவரை அவிழ்த்து விடுங்கள். நீங்கள் அனைவரும் போகலாம்."

சொல்லிவிட்டு உள்ளே போக யத்தனித்த பிலாத்துவின் கால்களைக் கட்டிக் கொண்டான் பரபாஸ்.

' மேதகு பிலாத்து அவர்களே ! என்ன காரியம் செய்யத் துணிந்தீர்.நீங்கள் செய்திருக்கும் காரியத்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படப் போகிறது தெரியுமா. அவருக்கு பதிலாக நான் கொல்லப் படப்போவதால் இப்படி சொல்கிறான் என்று நினைத்து விடாதீர்கள்.இந்தத் தீர்ப்பினால்
எத்தனையோ காத்திருப்புகள் வீணாகிவிட்டன.அவரை சிலுவையில் அறைய உத்தரவிடுங்கள் மாட்சிமை பொருந்திய பிலாத்துவே!"

'உளறாதே பரபாஸ். என்ன காத்திருப்புகள் வீணாகிவிட்டன?"

'என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள் மேன்மை தாங்கிய பிலாத்துவே. அவர் சுமக்க சிலுவை, அவர் சூட முள் க்ரீடம், அவர் உடலை கிழிக்க சாட்டைகள், சிந்துவதற்கு ரத்தம்,கை, கால் நரம்புகளை,தசையை,எலும்பை ஊடுருவி சிலுவையோடு பொருத்த ஆணிகள் எல்லாம் காத்திருக்கின்றன.

அவரை அடித்துத் துவைத்து இழுத்துச் செல்வதற்கு சேவகர்கள், அவர் நடக்கப் பாதை,அவரை அறைந்த சிலுவையைத் தாங்க கோல்கதா மலை,அறைந்த பின் வலது விலாவில் குத்துவதற்கு ஈட்டி எல்லாம் காத்திருக்கின்றன.

இடிந்து தூள் தூளாவதற்கு ஹெரோது மன்னனின் கோவிலும்,அவர் உயிர்த்தெழுவதற்கு 72 மணித் தியாலங்களும் காத்திருக்கின்றன.

உயிர்த்தெழுந்த பின் அது அவர் தானா என சோதிக்க சந்தேகப் பேர்வழி தோமஸ், குற்றவுணர்ச்சி காரணமாகத் தூக்கு மாட்டிக் கொள்ள யூதாஸ் ஆகியோர் காத்திருக்கிறார்கள்.

ஒடுக்கப்பட்டு நாடு நாடாக , உயிரையும் உடமையும் காத்துக் கொள்வதற்காக ஓட யூத இனமே காத்திருக்கிறது.கொல்லப்படுவதற்காகவே பிறக்க ஏராளமான யூதக் குழந்தைகள் காலத்தின் கட்டற்ற பெருவெளியில் காத்திருக்கின்றன.

மதம் ஒன்று தோன்றி பின்னாளில் பலவாகப் பிரியக் காத்திருக்கிறது.
பின்பற்றுவதற்கு கோடிக்கணக்கான மக்கள் காத்திருக்கிறார்கள்.
நம்பிக்கைகள்,,பிரார்த்தனைகள் எல்லாம் காத்திருக்கின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக யாருக்காகவும், எதற்காகவும், எப்போதும் காத்திருக்காத காலம் இதை எல்லாம் நிறைவேற்றக் காத்திருக்கிறது. கருணை காட்டுங்கள் மேதகு பிலாத்து அவர்களே!

பிலாத்து திரும்பி ஆர்ப்பரிக்கும் கூட்டத்தையும், கால்களைக் கட்டிக் கொண்டிருக்கும் பரபாஸையும் பார்த்தார்.

இந்தப் பாவத்தில் எனக்கு பங்கு இல்லை என்பதற்கு சாட்சியாக இரண்டு கைகளையும் உயர்த்திக் காட்டிவிட்டு புனித நீரில் கையைக் கழுவிக் கொண்டு சொன்னார்.

'அப்படியே ஆகட்டும்' என்று.

அது அப்படியே ஆனது.

Saturday, September 17, 2011

திரவம்

' எம்பது ரூவாயா? ரொம்ப அதிகந்தம்பி!"
'இங்க பாருங்கய்யா..நாங்களே போலீசுக்கு தெரியாம இத விக்கிறோம்.
தெரிஞ்சுதுன்னா உரிச்சிரிவாய்ங்க.இஷ்டம் இருந்தா வாங்குங்க..இல்லன்ன
போய்ட்டே இருங்க"

'கள்ளபார்ட்' ரங்கசாமிக் கவுண்டர், தன் சகாவைப் பார்த்தார். இருவருடைய
கைகளும் மெலிதாக நடுங்கிக் கொண்டிருந்தன.காலை,மாலை ஆறு மணியளவில் ஏற்படும் நடுக்கம்.குடிக்காவிட்டால் வரும் நடுக்கம்.

சுற்றுலா வந்த இடத்தில் கோயிலுக்கு போயே தீரவேண்டும் என்று இவர்கள் இருவரைத் தவிர எல்லோரும் ஜபர்தஸ்து பண்ணி ஊருக்கு திரும்பும் வழியில் இங்கே கொண்டு நிறுத்திவிட்டார்கள். கோயிலுக்கு போவதை விட்டு விட்டு கடை, கடையாக போய் மெதுவாக விசாரித்தார்கள்.
'சரக்கு எங்க கிடைக்கும்?'

பலசரக்கு கடை,டீக்கடை,ஹோட்டல், உச்சமாக தேங்காய்ப் பழக் கடையிலும் விசாரித்து ஒருவனைப் பிடித்தார்கள். அவனோ இருப்பது ஒரே பாட்டில். விலை எண்பது என்கிறான்.

வேறு வழியில்லை.கவுண்டர் மெலிதாக நடுங்கும் கைகளால் தன் பட்டாபட்டியில் இருந்து பத்து ரூபாய்த் தாள்களாக உருவிக் கொடுத்தார்.

கொடுத்த கையோடு பாட்டிலைத் திறக்க முயற்சி செய்தார்.

'ஐயா சாமி..புண்ணியமாப் போகும்..மறவாப் போய்க் குடிங்கப்பு' என்று
விரட்டினான் அந்த எண்பது ரூபாய் பார்ட்டி.

கவுண்டர் தன் சகாவைக் கூட்டிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக
பஸ்ஸுக்கு விரைந்தார். பின் சீட்டில் அமர்ந்து அவசரமாகத் திறந்தார்.
இரண்டு தம்ளர்களில் கொஞ்சம் கொஞ்சமாக சரக்கை ஊற்றினார். பாட்டிலை மூடி இடுப்பில் சொருகிக் கொண்டார். இரண்டு தம்ளர்களிலும் கொஞ்சம் தண்ணியை கலக்கினார். வழக்கமாக பூமிக்கு விடும் மூன்று சொட்டு தீர்த்தத்தையும் விடாமல் அப்படியே இருவரும் வாயில் வைத்துக் கவிழ்த்தார்கள்.

அந்தத் திரவமானது நாக்கைத் தாண்டி தொண்டையில் இறங்கியபோது
ப்ப்ப்பூபூபூச்ச்ச்ச்ச்ச் என்ற பலத்த சத்தத்துடன் இருவரும் எடுத்த வாந்தி பஸ்ஸின்
நடுப்பகுதி வரை பாய்ந்தது.

*************************************************

'டேய் பழன்ச்சாமி..டேய்..எந்திரிடா.மணி அஞ்சாச்சு.இன்னும் என்னடா தூக்கம்?"

கவுண்டர் ஊருக்கு வெளியில் இருந்த தனியார் மதுபானக் கடையின் கதவுக்கு வெளியே நின்று கத்திக் கொண்டிருந்தார்.

அவருடைய சகா ஜமுக்காளக் கவுண்டர் பொறுமையிழந்து கதவை பலமாகத் தட்ட ஆரம்பித்தார்.

இருவருடைய கைகளும் இப்போது பலமாக நடுங்க ஆரம்பித்திருந்தன.

சில வினாடிகள் கழித்து கதவுக்கு பின்னால் ஒரு தூக்கக் கலக்கக் குரல் கேட்டது.

'ஆரு?"

'நாந்தாண்டா..கள்ளபார்ட்டு'

'என்ன இவ்வளவு நேரத்துல..மணி என்னாச்சு?"

'எல்லாம் எந்திரிக்கிற நேரந்தான்...கோட்டரு ஒன்னு குடு.. சீக்கிரம்'

கை நடுக்கம் குறைந்து சம நிலைக்கு வர அரை மணி நேரம் பிடித்தது.

கடையின் படிக்கட்டில் இருவரும் சாய்ந்து உட்கார்ந்தார்கள்.

முன் தினம் மாலையில் வாந்தி எடுத்ததிலிருந்து அவர்கள் பட்ட துயரம்
சொல்லி மாளாது.

கூட வந்தவர்களின் ஏச்சைத் தொடர்ந்து, பஸ்ஸை சுத்தமாகக் கழுவி விட்டது முதல்,ராத்திரி சாப்பிடாமல் , தூக்கம் வராமல், நடுங்கும் கைகளோடு
எப்போது ஊருக்கு போய்ச் சேருவோம் என்ற தவிப்போடு , ட்ரைவரிடம் போய்
இன்னும் எத்தனை மணி நேரம் ஆகும் என்று பத்து நிமிடத்துக்கொரு முறை
விசாரித்துக் கொண்டு, ஆந்தை மாதிரி விழித்திருந்தது வரை.

கள்ளபார்ட் மெதுவாக தன் இடுப்பிலிருந்த பாட்டிலை எடுத்து மங்கிய குண்டு
பல்பின் வெளிச்சத்தில் பார்த்தார்.

கருஞ்சிவப்பு நிறத்தில் அமைதியாக பாட்டிலில் அடங்கியிருந்தது.

ஒரு தம்ளர் கூட இல்லை அதிலும் பாதி குடித்ததற்கே இந்தப் பாடு படுத்திவிட்டது.

' யோவ்..அந்தக் கெரகத்த எந்த மசுத்துக்கு இன்னும் வெச்சுட்ருக்கற..தூக்கி வீசு'-ஜமுக்காளக் கவுண்டர் சத்தம் போட்டார்.

கள்ளபார்ட் மெதுவாகத் திறந்து முகர்ந்து பார்த்தார்.

ஒரு விரக்திப் புன்னகை அவருடைய மேல்,கீழ் உதடுகள் இடது பக்கம் ஒன்று
சேருமிடத்தில் தோன்றியது.

மொபட்டில் வந்த 'டோபாஸ்' தங்கவேலு இருவரையும் பார்த்து விட்டு வண்டியை நிறுத்தி இறங்கி வந்தான்.

'என்ன மாமா? டூரெல்லாம் பலமா..ரொம்ப சீக்கிரமே வந்துட்டீங்க கடக்கி?"

'பலந்தான்..பலந்தான்'

அவருடைய கையில் இருந்த பாட்டிலைப் பார்த்து விட்டுக் கேட்டான்.

'இதுவா..போயிருந்த எடத்துல ஒரு இந்திக்காரன் கிட்ட வாங்கினோம்..
பாட்டிலு எம்பது ரூவா..ஆனா அருமையான சரக்கு..அடிக்கிறியா..அரக் கோட்டரு அதிலயும் ஆளுக்குப் பப்பாதி தான் அடிச்சோம்...சரியான மப்பு'

ஜமுக்காளக் கவுண்டரின் முகத்தில் கலவர ரேகைகள் படர்ந்தன.

'சரி குடுங்க"

கள்ளபார்ட் தன் பையில் இருந்த பிளாஸ்டிக் தம்ளரில் மிச்சமிருந்த மொத்தத்தையும் ஊற்றி தண்ணீரைக் கலந்து நீட்டினார்.

ஒரே மடக்கில் குடித்து விடுபவன் போல தலையை அண்ணாந்து வைத்துக் கொண்டு கவிழ்த்தான்.

அந்தத் திரவமானது நாக்கைத் தாண்டி தொண்டையில் இறங்கியபோது
ப்ப்ப்பூபூபூச்ச்ச்ச்ச்ச் என்ற பலத்த சத்தத்துடன் டோபாஸ் எடுத்த வாந்தி மொபட்
மொத்தத்தையும் நனைத்து விட்டது.

அவர்கள் இருவருக்கும் வாய் வழியே வந்தது, இவனுக்கு இலவச இணைப்பாக
மூக்கு வழியேயும் வந்தது.

அடுத்த ஐந்து நிமிடங்களில் பொங்கிப் பொங்கி, குமுறிக் குமுறி, ரோட்டின்
இரண்டு பக்கமும் பாய்ந்து பாய்ந்து வாந்தி எடுத்தான். காலையில் பால்
வயிற்றில் அப்படியொரு திரவத்தை குடித்தால் யாருக்குத்தான் வராது.

அவன் கண்கள் கலங்கியிருந்தன. அடி வயிற்றைப் பிடித்துக் கொண்டான்.

ஜமுக்காளக் கவுண்டர் அவனுடைய தலையைப் பிடித்துக் கொண்டு கள்ளபார்ட்டை நோக்கி சத்தம் போட்டார்.

'யோவ் அறிவு கெட்டக் கூதி...வெவரப் புண்ட இருந்தா இந்த மாதிரி செய்வியா..கேனக் கூதி'

கள்ளபார்ட் கவுண்டர் உரத்துச் சிரித்தார். கண்ணில் நீர் வரச் சிரித்தார்.

சிரித்து விட்டு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு சொன்னார்.

'இந்த ஒலகத்துல ஒரு பாட்டில் டீ டிக்காசனை எம்பது ரூவா குடுத்து வாங்குன ஒரே இளிச்சவாய்க் கூதிக நாமதாண்டா ஜமுக்காளம்'

Friday, September 9, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் -- பெய்தல்

அரை நூற்றாண்டுக்கான
அன்பை
அந்த நேரத்தில்
பொழிகிறார்
குடை மேல் மட்டும்
அதிகமாகப் பொழியும்
மழை போல

Sunday, July 31, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - 05.த்தூ

காதோரம் நரை
கண்ணுக்குக் கீழே சுருக்கம்
வயது ஐம்பதுக்கு மேல் காணும்
ஜி.நாகராஜனின் கதைநாயகன் போல்
டெரிலீன் சர்ட், எட்டு முழ வேட்டி.

போகலாமா என்றார்.
முடியாது இன்று என்றேன்.

வெளியே வேண்டாம் என்றால்
உன் வீட்டில் சரியா என்றார்.

எங்கேயும் சரியில்லை
இன்று என்றேன்.

வயதானவன் என்று பார்க்கிறாயா?என்றார்.

காதோர நரை பார்த்து
கணிக்கிறவள் நானில்லை என்றேன்.

பின் என்ன? என்றார்.

ஒன்றுமில்லை.
இன்று முடியாது என்றேன்.

பணமா பிரச்சினை?
கேள்..தருகிறேன்.என்றார்.

நீங்கள் தருவது லட்சமென்றாலும்
இன்று முடியாது என்றேன்.

ஏன்? என்றார்.

முடியாது.அவ்வளவுதான் என்றேன்.

சரி.நாளை? கேட்டார்.

நாளையும் முடியாது என்றேன்.

தொழிலை விட்டுவிட்டாயா? என்றார்.

இல்லை. நாளை மறுநாள் வாருங்கள் என்றேன்.

நாளை மறு நாள் எதற்கு? இன்று என்ன உனக்கு ?என்று அவர் கேட்கவில்லை.

அவர் கேட்க மாட்டார்.

கேட்டாலும் இருக்கவே இருக்கு

காட்ட தூமைத்துணி.

Wednesday, July 27, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் 4 - இன்று வரப்போகிறவர்

இங்கு வந்து
எத்தனை நாளானது இன்றோடு
என்பது நினைவில் இல்லை.

என் அறைக்கு
முதன் முதலாக வந்தவர்
முகமும்,பெயரும் நினைவில் இல்லை.

எத்தனை பேர்
என் அறைக்கு வந்திருப்பார்கள்
என்பதும் நினைவில் இல்லை.

எத்தனை பேர்
'எனக்கு இது முதல் முறை'
என்று சொன்னார்கள் என்பதும்
நினைவில் இல்லை

இன்றைக்கு
வரப் போகிறவர்
எப்படி இருப்பார் என்பது
தெரியவில்லை.

இது அவருக்கு
முதல் முறையா என்பதும்
தெரியவில்லை.

அப்படி இல்லை
எனும் பட்சத்தில்
என் அறைக்கு
வந்த முதல் ஆள்
அவராகக் கூட இருக்கலாம்.

Tuesday, July 26, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - 3 மூவர்

வந்தனர் மூவர் இன்று.
அதிலொருவன் இல்லை
திருப்தியென்று வாங்கிக்
கொண்டான் கொடுத்த பணத்தில்
பாதியை.

ஜாகையின் ஒழுகும் கூரையை
மாற்றிக் கொடுத்தவன்
வேண்டாம் பணம்
படுத்துத் தீர்த்துக் கொள்கிறேன்
என்று விட்டான்.

வாங்கிய கடனுக்கு
கட்ட வேண்டிய வட்டி போக
மிச்சப் பணத்தில்
இன்றிரவு நாலு இட்லி
நாளைக்கு
கவுளி வெத்திலை
சுருட்டு ரெண்டு
தீர்ந்து போன பாக்கெட் ஒன்று
மல்லி ஒரு முழம்
போக வர நான்கு
உண்டியலில் போட பத்து
போக மீதம்
ஒன்றுமில்லை.

எப்படியும் வரும் நாளை மாலை.
எப்படியும் வருவார்
எனக்காக மூவர்.

தேவதாசியின் நாட்குறிப்புகள் - 2 . விலாசம் கேட்டதற்கு

வேசி என்றார்கள்
விலைமகள் என்றார்கள்
நிறம் கறுப்பு,
வளைந்த தேகம்
தலையில் மல்லிகை
நிறத்திற்கொவ்வாத உதட்டுச் சாயம்
மல்லிகைப் பூ செண்ட் அவள் அடையாளம்
என்றார்கள்.
ஐந்து மணிக்கு வரும்
கவன்மேந்து பஸ்ஸில் பக்கத்து
டவுனுக்கு தொழிலுக்குப்
போவாள் என்றார்கள்.
பதினோரு மணிக்கு
கடைசி வண்டியில்
திரும்பி வருவாள் என்றார்கள்.

விலாசம் என்று திரும்பக் கேட்டதற்கு

ஊர் சாக்கடைகள் அனைத்தும் கூடும்
ஓரிடத்தில் அவள் வீடு என்றார்கள்.

ழார் பத்தாயின் குதிரை - எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனின் தளத்தில் வெளியான என் சிறுகதை

ழார் பத்தாயின் குதிரை

மெலிந்த இடையும் அகன்ற இடுப்பும் கொண்ட அந்தப் பெண்ணைப் புணருவதற்கு முன்னரோ,புணரும்போதோ இல்லை புணர்ந்த பின்னோ பாப்லோ நெரூதாவுக்கு அந்த எண்ணம் தோன்றியிருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்.

தந்தி அலுவலகத்துக்கு சென்றார்.
'எங்கிருந்தாலும் உடனடியாக என் வீட்டுக்கு வரவும்'
தந்தி கொடுத்தார். உலக இலக்கியவாதிகள் அனைவருக்கும்.

அன்ன கரீனினாவுடன் படுக்கையில் இருந்த தொல்ஸ்தோய் அரை நிஜாருடன் வந்து சேர்ந்தார்.நாடகக்காரியுடன் படுக்கையில் இருந்த செகாவ், தனது கரமசோவ் சகோதரர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த தஸ்தாவெஸ்கி(உச்சரிப்பு சரி என்றே நினைக்கிறேன்), தனது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீட்டைப் பற்றி உள்ளூர் போலீசாரிடம் புகார் கொடுக்கச் சென்று கொண்டிருந்த கொத்தஸார்,போர்ஹே,காப்கா,புதுமைப்பித்தன் என்று எல்லோரும் வந்தார்கள்.

வந்தவுடன் அவர்கள் கேட்ட முதல் கேள்வி.

'எதற்கு அழைத்தீர்?"

'நாம் எல்லோரும் உலக இலக்கியவாதிகள் என்று அறியப்படுகிறோம் அல்லவா?"
'ஆம்.அதிலென்ன சந்தேகம்"
'அதில் சந்தேகம் ஒன்றுமில்லை.நாம் எல்லோரும் உலகத்தின் பல மூலைகளில் சிதறிக் கிடக்கிறோம். நாளை நாம் இல்லாமல் போகலாம். நாம் வருங்கால சந்ததியினரால் மறக்கப் படக்கூடும்"
'அதெப்படி.நாம் வண்டி வண்டியாக, மரங்களுக்குக் கேடாக எழுதி வைத்த புத்தகங்கள் இருக்கிறதே.அதெப்படி அவ்வளவு சீக்கிரம் மறந்து விடுவார்கள். பார்த்து விடலாம்' என்று ஆளுக்கொரு திசையில் பிரிந்து , பேனாவைத் திறந்து எழுத ஆரம்பித்தார்கள்.

நெரூதா அவர்களை சமாதானப் படுத்தினார்.
'நான் சொல்ல வந்தது அதுவல்ல. நமக்காக ஒரு தேர் செய்யலாம். இதுவரை யாருமே அந்த மாதிரி பார்த்திருக்கக் கூடாது.காலத்தால் நிலைத்து நிற்கக் கூடிய தேர்'
'தங்கத்தாலும் பொன்னாலும் இழைக்கச் சொல்கிறாயா?"
'இல்லை. நமது புத்தகங்களால்'

மார்க்கேசுக்கு மயக்கம் வருவது மாதிரி இருந்தது.
'புத்தகங்களாலா?"
'ஆம்'
'ஸரி'
ஆரம்பித்து விட்டார்கள்.
உலமெங்கும் உள்ள சனாதாநிகள் கவலை கொண்டார்கள்.

தனித் தனியாக இருந்தாலே இவர்களை சமாளிப்பது கடினம்.இப்போது ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.என்ன செய்யலாம்? என்று பல ரகசியக் கூட்டங்கள் நடத்தினார்கள்.

தீவிரவாதக் கூட்டம் ஒன்று அவர்கள் ஒன்று கூடி இருக்கும் போது குண்டு வீசலாம் என்று முடிவு செய்தது.பின்னர் அது கைவிடப்பட்டதாக தகவல் வந்தது.

ஒரே மாதத்தில் அந்தத் தேர் செய்யப்பட்டது. எல்லோரும் குதிரைகளைக் கொண்டு வந்து கட்டினார்கள்.புதுமைப்பித்தனின் குதிரை சற்று உயரமாக இருந்தபடியால் அது முன்னாலே நிறுத்தப்பட்டது. மற்ற குதிரைகள் இரண்டு வரிசைகளாக தேரில் பிணைக்கப் பட்டன.ழார் பத்தாயின் குதிரை இரண்டு வரிசைகளுக்கு நடுவில் நிறுத்தப்பட்டது.

ஆனால் அவர்கள் அஞ்சியது போல் ஆபத்து சனாதாநிகள் மூலமாக வரவில்லை.
வேறொரு வடிவில் வந்தது.
*************************************************

அந்தப் பிராந்தியம் எங்கும் ஒரே ரணகளம். அடிதடி. புகை மண்டலம்.

பெரிய தலை கொண்ட நிறைய மனிதர்கள் அந்தச் சண்டையில் கலந்து கொண்டிருந்தார்கள்.அவர்களைப் பார்த்தால் எழுத்தாளர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

எல்லோரும் சமாதானம் செய்தும் அவர்கள் சண்டையை நிறுத்துவதாகத் தெரியவில்லை.கடைசியில் காம்யூ எல்லோரையும் ஒரு உதைபந்தாட்ட உதை விட்ட பிறகுதான் நிறுத்தினார்கள்.

'இப்போது என்ன. இந்தத் தேரில் நீங்கள் பயணம் செய்ய வேண்டு அவ்வளவுதானே"
'ஆம்"

"நான் ஒரு உபாயம் சொல்கிறேன். எல்லோரும் பயணம் செய்யலாம்"
'அதெப்படி எல்லோரும் பயணம் செய்ய முடியும். ஒருவருக்கு மேல் ஏறினாலே இந்தத் தேர் தாங்காது போலிருக்கிறதே'
'உங்களுடைய ஆக்ரோஷத்தைப் பார்த்தால் ஒருவர் ஏறினாலே தாங்காது போலிருக்கிறது.பொறுமையாக வரிசையில் நில்லுங்கள். ஒவ்வொருவராகப் பயணம் செய்யலாம்"

முதலில் ஒருவர் ஏறினார். கையில் சாட்டை ஒன்று தரப்பட்டது.
'சுளீர்' என்று ஒரு வீசு வீசினார். குதிரைகள் புயல் வேகத்தில் பறந்தன.
மணலும், காற்றும் மட்டுமே உள்ள ஒரு கட்டற்ற பெருவெளியில் பாய்ந்தோடிய அக்குதிரைகள் ஒரு புளிய மரத்தைக் கண்டதும் நின்று விட்டன. அதற்கு மேல் நகரவில்லை. அவ்வளவுதான். அவர் இறக்கி விடப்பட்டார்.

இரண்டாமவர். குஸ்தி வாத்தியாரோ எனும்படியான தோற்றம் கொண்டிருந்தார்.
கையில் சாட்டையை வாங்கிய மறு கணமே குதிரைகள் கிளம்பி விட்டன. இப்போது அக்குதிரைகள் சென்ற வழியெல்லாம் இலைகள் ரம்பியிருந்தன.சீரான வேகத்தில் சென்ற அக்குதிரைகள் சிறிது ஒய்வெடுத்து விட்டு மறுபடியும் ஏவுகணைகள் போன்று சீறின. ஒரு இடத்தில் முட்டையும், பழைய பேப்பரும் விற்பனை செய்யும் கடையைக் கண்டதும் அவை நின்று விட்டன. அவர் இறக்கி விடப்பட்டார்.

மூன்றாமவர். மோட்சம் அளிப்பதற்காகவே வானத்திலிருந்து இறங்கி வந்தவர் போல் காணப்பட்டார்.முதல் இருவரும் தேரை ஓட்டும் போது வாயைத் திறக்கவில்லை. ஆனால் இவர் ஓயாது சொற்பொழிவாற்றிய வண்ணம்
வந்தார். அவர் செய்த உபதேசத்திற்கு குதிரைகள் தான் தூங்கியிருக்க வேண்டும்.ஆனால் அவர் தூங்கியபடியே உபன்யாசம் செய்து வந்தார்.வாய் எதையோ பிதற்றியபடியே இருந்தது. ஒரு இடத்தில் குதிரைகள் வளைவைக் கடக்கும் போது தூங்கிக் கொண்டிருந்தவர் புரண்டு படுத்தார். குதிரைகள் நின்று விட்டன.

நான்காமவர்.இவர் முகம் மிகவும் சாந்தமாகக் காணப்பட்டது. அத்தனை குதிரைகளையும் அன்போடு தடவிக் கொடுத்தார்.குதிரைகள் நெகிழ்ந்தன. தேரில் ஏறியவர் குதிரைகளை சாட்டையால் விளாசவில்லை.வலது காலை எடுத்து இடது கால் மேல் போட்டுக் கொண்டு இன்னும் ஒரு நூற்றாண்டுக்குப் பின் பிரபலமாகப் போகும் பப்புவா நாட்டைச் சேர்ந்த ஒரு எழுத்தாளரின்
நூலைப் படித்தபடி வந்தார். குதிரைகள் நிற்காமல் ஓடிக் கொண்டேயிருந்தன. ஒரு இடம் வந்தது. அந்த இடத்தில் வெயில் தவிர வேறு எதுவும் இல்லை. பாறைகளில் வெயில்.கள்ளிச் செடிகளில் வெயில். வெயில் அந்தப் பிரதேசக்
கிண்ணத்தில் வழிந்து வழிந்து நிரம்பிக் கொண்டிருந்தது. குதிரைகள் நிற்கவில்லை. இவராகவே குதித்து விட்டார்.

ஐந்தாமவர். இவரைக் கண்டதும் அத்தனை குதிரைகளின் முகத்திலும் இனம் புரியாத பீதி( இந்த "இனம் புரியாத பீதி"எனும் வார்த்தைப் பிரயோகம் ஆரம்ப நிலை எழுத்தாளர்களால் மட்டுமே பயன்படுத்தப் படக் கூடியது என்று ஒரு
பெரிய எழுத்தாளர் சொல்லியிருக்கிறார்.ஆகவே "இனம் புரியாத பீதி").
சாட்டையைக் கம்பீரமாக வாங்கிக் கொண்டார். சுற்றி ஒரு முறை பார்த்தார். ஆசனத்தில் அமர்ந்து 'ஹொய்"என்ற பலத்த சத்தத்துடன் சாட்டையை வீசினார். அவ்வளவுதான்.குதிரைகள் தேரிலிருந்து பிய்த்துக் கொண்டு திசைக்கொன்றாகப் பறந்தன. காற்றினும் கடிய வேகத்தில் அவை
மறைந்தன. ஒரே ஒரு குதிரையைத் தவிர. அது ழார் பத்தாயின் குதிரை. தேருடன் பலமாகப் பிணைத்து விட்டார்களோ என்னவோ. பரிதாபமாக அசைய முடியாமல் அப்படியே நின்றது.ஐந்தாமவர் விடுவதாக இல்லை. 'ஹொய்' என்று மறுபடியும் சாட்டையை வீசினார்.முன் இரண்டு கால்களையும் சட்டென்று மடித்து தரையில் சாய்ந்து விட்டது.நீண்ட நேரம் அவர் 'ஹொய்' என்று சாட்டையை வீசிக் கொண்டே இருந்தார்.ழார் பத்தாயின் குதிரை மட்டும் எழுந்த பாட்டைக் காணோம்.

ஜிட்டக்கியும் ஒரு மழை நாள் இரவும் - ஒரு அஞ்சலி

என் முதல் கதையின் நாயகியான ஜிட்டக்கி நேற்று இறைவனடி சேர்ந்தார். அவருக்கு வயது 110.

எப்போதும் போல் படுக்கையில் விழுந்தவர்தான். காலையில் எழுந்து விடுவார் என்று தான் நினைத்திருந்தோம்.

ஆனால் எழுந்திருக்கவில்லை.

நூறு ஆண்டுகள் முழுமையாக வாழ்ந்திருக்கிறார். யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாமல்.

அவரது ஆன்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கப் போவதில்லை. அது தேவையுமில்லை.

மேடக் சீக் ரஹா ஹே

அந்த சிறிய ரயில் நிலையத்தில் நானும், நிதின் துபேவும் வந்து இறங்கிய போது
விடிந்திருக்கவில்லை.மணி நான்கு இருக்கலாம். எங்களுடைய பெட்டி,படுக்கை,
பாரங்களோடு நான் பிளாட்பாரத்திலிருந்த , உடைந்த ஒரு சிமெண்ட் திண்ணையில் சாய்ந்து கொண்டேன். விழிப்பும் இல்லாமல், நித்திரை கலக்கமும் இல்லாமல் ஒரு வித, கபால மோட்சம் அடைந்தவனின் கடைசி மணித்துளிகளில் இருக்கும் கிறக்கம் என் கபாலத்தில் இருந்தது.

காரணம் அவன் தான். நிதின் துபே. இரவெல்லாம் குடித்துக் கொண்டே வந்தேன்.மூன்று மணிக்கு உறங்கச் செல்லும் போது இன்னும் எட்டு மணி நேரப் பிரயாணம் பாக்கி இருப்பதாகச் சொன்னான். கண்ணயர்ந்து, கனவின் ஆரம்பக் காட்சியில் எழுப்பினான். இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது என்று.

துபே எங்களுடைய மூட்டை முடிச்சுகளை சரி பார்த்துக் கொண்டான்.

'சாப், நீங்க இங்க இருங்க. நா போய் ஊர்ல பேசிட்டு வரேன்'
'சீக்கிரமா வந்து சேரு..இந்த எடமே பாக்க ஒரு மாதிரி இருக்கு'


இமைகள், கிணற்றுக்குள் இறங்கும் வாளியைப் போல மெதுவாக கீழ் நோக்கி
இறங்கிக் கொண்டிருந்தன. ஒரு வலிமையான கரம் தோளைத் தொட்டு உசுப்பியது.ஸ்டேஷன் மாஸ்டர்.

'கோன் ஹே தும்? யஹா கியா கர்தாஹே தும்?'
எனக்கு இந்தி புரியும் .ஆனால் பேச வராது.

அதற்குப் பின் அவருக்குத் தெரிந்த பட்லர் ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.
அவரைக் கேள்வி கேட்க விடாமல் நானே எல்லாவற்றையும் ஆங்கிலத்தில் சொன்னேன்.
'சாப். நாங்கள் இந்த கிராமத்தை,மக்களை படம் எடுப்பதற்காக இங்கே வந்திருக்கிறோம்.இரண்டு நாட்கள் இங்கே இருப்போம். வேண்டுமானால் போகும் போது உங்களையும் படம் எடுக்கிறேன்.இந்தப் படம் கவர்மெண்ட் நியூஸ் ரீலுக்காக. எனக்கு இந்தி பேச வராது.போதுமா"

இத்தனையும் நான் சொல்லிக் கொண்டு வந்தபோது அவர் தன் காதை என் வாயருகே வைத்திருந்தார். காரணம் உண்டு. என் குரல் மிக மெல்லியது.எனக்கு சிறு வயதில் தொண்டையில் ஒரு சர்ஜரி நடந்தது. அதற்குப் பின் என் குரல் மிக மெல்லியதாக மாறிவிட்டது. என்னால்
ஓங்கிக் கத்த முடியாது.வலி எடுத்துவிடும்.மிகக் குறைவாகவே பேசுவேன்.அதிலும் தூக்கக் கலக்கத்தில் குரல் மிகவும் மெலிதாகவே வரும்.

ஆனால் நிதின் துபே அதற்கு நேர் எதிர். குடித்து விட்டு மேடையில் 'சொற்பொழிவாற்றும்" 143 வது வட்டச் செயலாளர் மாதிரி உரக்கப் பேசுவான். பேசிக் கொண்டே இருப்பான். அவன் தமிழ்நாட்டுக்கு
வந்து ஒரு இருபது வருடங்கள் இருக்கலாம்.அவனுக்கு நன்றாகத் தமிழ் பேச வரும்.இந்தி வாயால் அவன் பேசும் தமிழ் ஒரு மாதிரியாகத் தான் இருக்கும்.

விளம்பரங்கள்,ஆவணப் படங்கள் எடுப்பது எங்கள் நிறுவனத்தின் தொழில். அவன் கேமிராமேன்.நான் டைரக்டர். இந்தியா முழுக்க சுற்றிச் சுற்றி படம் எடுத்திருக்கிறோம்.நானும் அவனும் பூட்டுக்கு ஏற்ற சாவி மாதிரி. அவன் நன்றாக சமைப்பான். நான் நன்றாக சாப்பிடுவேன்.
நான் முட்டக் குடித்து விட்டு சீக்கிரத்தில் சாய்ந்து விடுவேன். அவன் மெலிதாகக் குடித்து விட்டு என்னை பத்திரமாக வீட்டில் சேர்ப்பான். இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

அவனிடம் எனக்குப் பிடிக்காத ஒரே விஷயம் அவனுடைய குரல்.காட்டுக்கத்து கத்துவான்.தொண்டையில் ஆம்ப்ளிஃபையர் வைத்திருப்பானோ என்னவோ.

எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. துபே வந்து எழுப்பினான்.மணி காலை எட்டு.

'என்னாச்சு"
"மொதல்ல பிடி குடுக்கல சாப்..அப்புறம் ஊர்ப் பெரியவர் கிட்ட பேசி..கையில கால்ல விழுந்து சம்மதிக்க வெச்சேன்.ஆனா ஒன்னு.ஊருக்குள்ள தங்கறதுக்கு எடம் தர மாட்டாங்களாம்.வெளிய டேரா போட்டுக்க சொல்லிட்டாங்க."
'அது பரவால்ல'

பாரங்களைத் தூக்கிக் கொண்டு, ஸ்டேஷன் மாஸ்டருக்கு கையாட்டிவிட்டு புறப்பட்டோம்.என்னைப் படம் பிடிக்க மறந்து விட வேண்டாம் என்று சிரித்துக் கொண்டே சைகை காட்டினார்.மறக்க மாட்டேன் என்று பதில் சைகை காட்டினேன்.

'அப்புறம் இன்னொரு விஷயம் சாப்'
'என்ன?'
'ஆறு மணிக்கு மேல நாம ஊருக்குள்ள இருக்கக் கூடாதாம்'
'சரி'

துபே மூச்சு வாங்கினான். அவனுக்கு கொஞ்சம் பூசினாற் போல உடல் வாகு.
நின்று, இரண்டு தடவை மூச்சை இழுத்து விட்டு விட்டு, திரும்பவும் பாரங்களைத் தூக்கிக் கொண்டு எப்படியோ வந்து சேர்ந்தாகி விட்டது.

'சாப்.இங்கயே டேரா போட்டுடலாம் சாப்'
'இங்கிருந்து ஊர் எவ்வளவு தூரம்"
'எப்படியும் ஒரு கிலோ மீட்டர் இருக்கும். இப்ப ஸ்டேஷன்லர்ந்து நடந்து வந்த தூரம் இருக்கும்'
"சரி. கூடாரத்த நாம்பாத்துக்குறேன்.நீ என்ன பண்றன்னா சுத்தி இருக்குறத அப்பிடியே கவர் பண்ணிடு.
மொதல்ல அங்க இருக்குற முள்ளுச் செடிகள படம் புடி.வேணுமுன்ன யூஸ் பண்ணிக்கலாம்.
அப்புறம்..இங்க குளம்,குட்டை எதுனா இருக்கா..ஒடம்பெல்லாம் நச நசன்னு பிக்கிது'

'கொஞ்ச தூரத்துல ஒரு ஏரி இருக்குதுன்னு கெழவன் சொன்னா சாப். இப்ப குளிக்க வேண்டா.ஊர்ப் பொம்பளைங்க தண்ணி எடுக்க,தொவைக்க போவாங்க..ஆறு மணிக்கு மேல, வேல முடியட்டும்.
அப்புறம் போலாம்"

துபே படம் பிடிக்க ஆரம்பித்தான். நான் கூடாரத்தை முடித்து விட்டு, சப்பாத்தி மாவு பிசைய ஆரம்பித்தேன்.சுட்டுத் தின்று விட்டு ஒரு 11 மணி வாக்கில் ஊருக்குள் போனோம்.

'எல்லா ஊர்லயும் பஞ்சாயத்து மரத்தடிக்கு கீழதான் நடக்கும் போல சாப்'
நாங்கள் போன போது எதோ ஒரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது.
'படம் புடிக்கலாமானு கேளு'
யாரிடமோ போய்ப் பேசி விட்டு வந்தான்.
'புடிக்கலாம் பாஸ்."


பஞ்சாயத்துத் தலைவர் மீசையை முறுக்கி விட்டுக் கொண்டார். கோழி திருடிய வழக்கு.

திருடியவன் ஒரு மாசத்துக்கு ஊரைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும். தீர்ப்பு.
'அநியாயமப்பா.சரி ..எல்லாம் கவர் ஆகிருக்கானு செக் பண்ணிக்க..'
'கவர் ஆகலன்னா..இன்னொரு தடவ அவங்கள பஞ்சாயத்து பண்ண சொல்லலாமா சாப்'
'வேலயப் பாருடா'

அடுத்து கோவில்,பெண்கள் நடனம் ஆடுவது, பானைகளைத் தலையில் வைத்துக் கொண்டு தண்ணீர் சுமந்து வருவது,ரொட்டி சுடுவது என்று எடுத்தோம். முன் தினம் தூங்காத அலுப்பு.ஐந்து மணிக்கே பேக்கப் செய்தாகிவிட்டது.

குளித்து விட்டு கூடாரத்திற்கு வந்தோம்.

துபே எடுத்த வரை சரியாக வந்திருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தான். நான் பிராந்தியை ஊற்றிக் குடிக்க ஆரம்பித்தேன்.

மணி இரவு 11. துபே நாலு ரவுண்டு முடித்திருந்தான். என்னுடையது கணக்கு தெரியவில்லை.

திடீரென்று ஒரு வினோத சப்தம்.'கொர்..கொர்' என்று ஏரி இருந்த திசையில் இருந்து வந்தது.போகப் போக அது பெரிதாகி அந்தப் பிரதேசம் முழுதும் எதிரொலித்தது.

'மேடக் சீக் ரஹா ஹே சாப்' என்று சொல்லி விட்டு 'கெக்.. கெக்' என்று குலுங்கி குலுங்கி சிரித்தான்.

அதிசயமாக போதை அதிகமாகி விட்டால் இப்படி சிரிப்பான்.

'தவளைங்க கத்துது சாப்.மேடக் சீக் ரஹா ஹே' திரும்பவும் 'கெக்.. கெக்' என்று குலுங்கி குலுங்கி சிரித்தான்.

'மூடிட்டு குடி.சொல்லலன்னா தெரியாது பாரு'


*************************************************************************** இந்த கிராமத்திற்கு பள்ளிக் கூடத்தைக் கொண்டு வர அரசாங்கம் படாத பாடு பட்டது என்று டீச்சர் சொன்னார். அதை விட இந்தப் பள்ளிக் கூடத்திற்கு குழந்தைகளைச் சேர்க்க தான் பட்ட பாடு பெரிது என்றும் சொன்னார்.
துபே டீச்சரை வளைத்து வளைத்து படம் பிடித்தான்.

என்னவாக வர விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை எல்லாக் குழந்தைகளிடம் டீச்சர் கேட்க அவர்கள் சொல்லி வைத்த மாதிரி பேந்தப் பேந்த விழித்தார்கள்.

தோளைக் குறுக்கி, தலையைச் சாய்த்து வெட்கப்பட்டார்கள்.

மதிய உணவு முடிந்து ஏரிக்கு போனோம்.

'துபே..மிச்ச இருக்குற நேரத்துக்கு இந்த ஏரி , பாரு அங்க இருக்குற சோளக் காடு எல்லாத்தயும் புடி..நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்".

இந்தி பேச முடியாத குறைக்கு பெயருக்குத் தான் நான் டைரக்டர். மற்றபடி எல்லாமே அவன் தான்.

முகத்தில் துண்டைப் போட்டுக் கொண்டு ஒரு மரத்தோடு சாய்ந்து படுத்துக் கொண்டேன். எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியவில்லை. சோளக் காட்டிலிருந்து யாரோ இரண்டு பெண்கள் கத்தும் சத்தம் கேட்டது.

துபேயின் குரலும் கூடவே கேட்டது. விழுந்தடித்துக் கொண்டு குரல் வந்த திசையில் ஓடினேன்.

ஒரு குடிசை. இரண்டு பெண்கள். கையை ஆட்டி ஆட்டி கத்திக் கொண்டிருந்தார்கள்.

என்னைப் பார்த்தவுடன் ஒருத்தி ' கான் ஹே தும் லோக்' என்று உரக்கக் கத்தினாள்.

துபே கையை வாயில் வைத்துப் பொத்தி அமைதியாக இருக்கும் படி இறைஞ்சினான்.

'துமே யஹா நஹி ஆனா ச்சாயியே.ஜாவ்..ஜாவ்"

'பூல் சே ஹம் யஹா ஆகயே.தீதீ.பூல் சே ஹம் யஹா ஆகயே'

'ஜாவ்..ஜாவ்'

என்னுடைய கையைப் பிடித்துக் கொண்டு விடுவிடு வென்று சோளக் காட்டை விட்டு வெளியேறத் தொடங்கினான்.

'யாருடா அது?"

'தெரியல சாப். பேசாம வாங்க'. நடையில் வேகம் கூட்டினான்.

வழியில் இன்னொரு குடிசை தென்பட்டது. அதில் ஒரு பெண் கதவோரம் நின்று கொண்டு எங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

வெள்ளைப் புடவை உடுத்தியிருந்தாள். வயது 16, 17 இருக்கலாம். அதற்கு மேல் சொல்ல முடியாது.

சோளக் காடு முடியும் இடம் வந்ததும், என்னை நிற்கச் சொல்லி விட்டு, சோளத் தட்டைகளைப் பிரித்து தலையை கொஞ்சமாக வெளியே நீட்டி யாராவது வருகிறார்களா என்று பார்த்தான்.

யாருமில்லை என்று தெரிந்ததும் ' வாங்க சாப். போயிடலாம்.ரொம்ப டேஞ்சரான ஊரு போலிருக்குது சாப்'

கூடாரத்தை நெருங்கி விட்டோம்.

'சாப்..சாப்'

டீச்சர் வெகு வேகமாக எங்களை நோக்கிக் கத்தியபடியே மான் மாதிரி துள்ளித் துள்ளி வந்தார்.

அந்தத் துள்ளலில் பரவசம் தெரியவில்லை. ஏதோவொரு துஷ்ட மிருகத்திடமிருந்து தப்பி வந்த பயம் தெரிந்தது.

'கித்னே பஜே துமாஹ்ரி ட்ரைன் ஹே?" - மூச்சு வாங்கினார்.

'பாரா பஜே ராத் கோ."

'சாப். மெனே தும்லோகோ கோ உஸ் கன்னே கே கேத் சே நிகல்தே ஹுவே தேக்கா. தும் லோக் வஹா க்யூ கயா தா?"

அவளிடம் தெரிந்த பயம் அப்படியே துபேவின் முகத்தில் தெரிந்தது. என்னை ஒரு முறை பார்த்தான்.

'ஹம் லோக் கல்தி சே சலே கயே தா?"

'அகர் கோய் துமே தேக் லேதா, தும் லோகோ கோ மார் பட்தி"

'என்னடா சொல்றா.எதுக்கு நம்மள அடிப்பானுங்களாம். அங்க தெரிஞ்சா போனோம்'

'கொஞ்சம் இருங்க சாப். ஏசா கியா? அகர் ஹம் கல்தி சே கயே, தப் பி?"

'ஹா'

நான் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டேன்.

' ஹம் லோகோ நே தோ லட்கியோ கோ குட்டியா மே தேக்கா. கான் ஹே வோ? வோ லோக் வஹா க்யூ ரெஹதே ஹே?"

'உன்லோகோ கி மங்க்னி ஹொ கயி ஹே. ஜப் தக் உன்கி சாதி நஹி ஹோத்தி, டப் தக் உன்கோ வஹா ரெஹ்னா ஹோகா"

'உஸ் குட்டியா பே ஆர் ஏக் லட்கி சஃபேத் கப்டே மே ஹே.வோ கோன் ஹே?"

'உஸ்கி பி மங்க்னி ஹோ ச்சுக்கி ஹே,லேகின் உஸ்கே மங்கேதார் அபி நஹி ரஹே. இஸ்தியே வோ வித்வா ஜெய்சி ஹே ஆர் உஸ்கோ
வஹா பே ஜிந்தகி பர் ரெஹ்னா ஹே'

'இஸ் காவ் மே, மேனே வித்வா தேக்கே ஹே, லேகின் இஸ் லட்கி கோ வஹா க்யூ ரெஹ்னா ஹே?"

"யஹ் அலக் ஹே.துமே பத்தாவோ நஹி ஹே க்யா? முஜே நஹி பத்தாவோ, கெய்சே போல்னா சாஹியே?"

' மே சமஜ் கயா'

'தயா சே. ஜிந்தா கர் ஜாவோ. யே லோக் பாஹுத் கராப் ஹே. முஜே ட்ரைன் லியே தர் ஹோ ரஹி ஹே, தும் லோகோ கோ தேக்கே அச்சா லகா.Bye'

டீச்சர் துள்ளிக் கொண்டு போய் விட்டாள்.

' சாப். இது வில்லங்கமான ஊரு சாப்."

கூடாரத்திற்கு வந்து ஆளுக்கொரு க்ளாஸ் பிராந்தியை ஊற்றிக் கொண்டோம்.

'அந்த டீச்சர் சொன்னதெல்லாம் உண்மையா? அந்த ரெண்டு பொண்ணுங்க சரி.கல்யாணம் முடிஞ்சதுமே அந்த குடிசய விட்டுப் போய்டுவாங்க. ஆனா அந்த வெள்ளப் பொடவ கட்டின பொண்ணு சாகற வரெக்கும் அங்கேயேதான்
இருக்கணுமா..என்னடா அநியாயம் இது'

துபே பேசவில்லை. அமைதியாக பிராந்தியை உறிஞ்சிய படி எதோ யோசனையில் இருந்தான்.

' சரி. அந்தப் பொண்ணப் பத்தி கேட்டதுக்கு..இது வேற.உங்களுக்குப் புரியலயா..எனக்கு சொல்லத் தெரியலனு சொன்னாளே..
அவ என்ன சொல்ல வந்தான்னு உனக்கு புரிஞ்சுதா..புரிஞ்ச பாரி சமஜ் கயா ன்னே"

அவன் பேசவேயில்லை.

'டேய். ஒன்னத்தாண்டா"

'சாப். அந்தப் பொண்ண நாம கூட்டிகிட்டு போயிடலாம் சாப்'

தூக்கி வாரிப் போட்டது.

'நம்ம ட்ரைன் எத்தன மணிக்கி'

'சாப். அந்தப் பொண்ணு ரொம்ப பாவம் சாப். அந்தப் பொண்ணுக்கு 16 வயசுக்கு மேல சொல்ல முடியாது.பாவம் சாப்'

'.கூடாரத்த பிரிச்சு மூட்ட கட்டு. நாம ஸ்டேஷனுக்கு போயிடலாம்"

'சாப்.ஒன்னு சொல்லட்டுமா?' - குரல் மிகத் தீர்க்கமாக இருந்தது.

'நீ என்ன சொன்னாலும் சரி. இது நமக்கு தேவையில்லாத வேல.'

'சாப்.அந்தப் பொண்ணு இந்த ஊர்ல இருக்குற "ஆம்பளங்க" எல்லோருக்கும் சொந்தம் சாப்.பாவம் சாப்.ரொம்ப சின்ன வயசு சாப்' - கெஞ்சினான்.

'அப்டீன்னா?"

'அப்டீன்னா..இந்த ஊர்க்காரங்க எவன் வேணாலும் எப்ப வேணாலும் அந்தப் பொண்ணு இருக்குற குடிசைக்கு போகலாம்.ஒருத்தன் போகும் போது இன்னொருத்தன் இருந்தா அவன் வர்ர வரைக்கும் இவன் வெய்ட் பண்ணிட்டு உள்ளே போவான்.புரியுதா.போதுமா. தாயோளிக. தேவிடியாப் பசங்க.." - கடுமையான கோபத்தில் க்ளாஸை விட்டெறிந்தான்.

*********************************************************************

'உன்கோ மத் மாரோ.'

.உன்கோ மத் மாரோ.

மே பீக் மாங்க்தி ஹூ.

சோட் தோ.சோட் தோ."

வெள்ளை நிறப் புடவை அணிந்த அந்தப் பெண் நிலத்தில் விழுந்து கதறினாள்.ஆளுக்கொரு பிடியாக பிடித்துக் கொண்டார்கள்.

துபேயின் முகம் ரத்த விளாறாக இருந்தது. பௌர்ணமி நிலவொளியில் அவன் வாயிலிருந்து எச்சிலோடு வழிந்த ரத்தம் ஒரு வினோதமான நிறத்தில் இருந்தது. அவன் அடிவயிற்றை பிடித்துக் கொண்டு எழுப்பிய அலறல்,
கை கால்களைப் பிணைத்து விலாவில் குத்தப்பட்ட வெறி கொண்ட ஒரு மிருகத்தின் அலறலைப் போலிருந்தது.

என்னுடைய கண்கள் பாதி மூடி, எந்தக் கணத்திலும் முழுவதுமாக மூடி விடக் கூடிய நிலையில் இருந்தது.

கனத்த தோல் செருப்பணிந்த ஒருவன் என் முகத்தில் அவன் காலை வைத்து அழுத்தினான்.'க்..க்' என்ற சத்தம் என் தொண்டையில் இருந்து மூக்கு வழியாக ரத்தமாக வந்தது.

'பெஹ்லே உஸ் லட்கே கதம் கரோ. ஜல்திகரோ..ஜல்தி..ஜல்தி' - துபேவைப் பார்த்து ஒருவன் கை காட்டினான்.

அவன் அலறல் குறைந்தபாடில்லை.

ஒருவன் கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு பெரிய கல்லைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்தான்.

அந்தப் பெண் தன்னைப் பிடித்திருந்தவர்களை உதறி விட்டு கொஞ்ச தூரத்தில் உட்கார்ந்திருந்த நரைத்த மீசைக் கிழவனின் காலில் விழுந்து என்னமோ சொன்னாள்.

கிழவன் எழுந்து அவளின் தலை முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து எல்லோர் முன்னால் தரையில் தள்ளி விட்டான்.

உரத்த குரலில் எதோ சொன்னான்.

அத்தனை பேரும் எங்களை விட்டு விட்டு அவளை நோக்கி ஓடினார்கள்.

கல்லைத் தூக்கிக் கொண்டு வந்தவன் அதைப் போட்டு விட்டு அந்தப் பெண்ணின் பால் வயிற்றில் உதைத்துத் தள்ளினான்.

மற்றொருவன் அவளுடைய இடது முழங்காலில் எட்டி உதைத்தான்.

அவள் எனக்குப் பக்கத்தில் குப்புற விழுந்ததும் அவளுடைய கைகள் பின்னால் இறுக்கிக் கட்டப்பட்டன.

சணல் கயிற்றில் அவள் வாயும், கால்களும் கட்டப்பட்டன.

அவளுடைய சேலை இடுப்பு வரை தூக்கப்பட்டது.

கனத்த தோல் செருப்புக்காரன் என்னை விட்டு விட்டு அவளருகே போய் கையில் சாக்குத் தைக்கும் ஒரு கோணி ஊசியை எடுத்து நூலைக் கோர்க்கத் துவங்கினான்.

அவளுடைய முதுகையும், இடுப்பையும் ஒருவன் அழுத்திப் பிடித்துக் கொள்ள , கனத்த தோல் செருப்புக்காரன் ஊசியை அவளின் இடது தொடையின் ஆடுசதையில் விட்டு வலது தொடை வழியாக எடுத்து முடிச்சுப் போட்டான்.

நான் மெதுவாக எழ முயற்சி செய்தேன்.

என் பின் மண்டையில் ஒரு பலமான உதை விழுந்தது.

நான் கீழே விழுந்தவுடன் அவர்கள் போய் விட்டார்கள்.போயே விட்டார்கள்.

அவர்கள் உரத்து பேசிக் கொண்டு செல்லும் சப்தம் குறைந்து கொண்டே வந்து நின்றது.துபேவின் முகத்தில் ரத்தமும், மண்ணும் கலந்து விகாரமாகக் காட்சியளித்தது.

மெதுவாக நகர்ந்து அவன் பக்கத்தில் போனேன்.

'சாப்..சாப்..என்னால முடியல சாப்..சுன்னி மேல பலமா ஒதச்சிட்டான் சாப்' வார்த்தைகள் சொட்டு சொட்டாக வந்தன.

கொஞ்ச நேரம் அனத்தினான். அவன் கண்கள் மெல்ல சொருகிக் கொண்டன.

மூச்சு மட்டும் மெலிதாக வந்து கொண்டிருந்தது.

நான் கொஞ்ச நேரம் எழ முயற்சி செய்து முடியாமல் அப்படியே மண்ணில் சாய்ந்து கொண்டேன்.

நாங்கள் போக வேண்டிய ரயிலின் சப்தம் தொலை தூரத்தில் கேட்டது.

காற்றில்லாத அறையில் வைத்த எண்ணெய்ப் பாத்திரம் போன்ற சலனமற்ற முகத்தைக் கொண்ட அந்தப் பெண்ணின் அலறல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்து மொத்தமாக நின்றது.

'கொர்..கொர்' என்ற தவளைகளின் சப்தம் மெதுவாக ஆரம்பித்து அந்தப் பிரதேசம் எங்கும் எதிரொலிக்க ஆரம்பித்தது.

Wednesday, June 29, 2011

...என்று சொல்லப்பட்டது

48 முறை வாய்தா வாங்கப்பட்ட
அந்த வழக்கின் தீர்ப்பு ஒரு
அமாவாசை நாளன்று கீழ்கோர்ட்டில்
வாசிக்கப்பட்டது.
எதிர்த்து மேல்கோர்ட்டில்
முறையீடு செய்யப்பட்டது.
அங்கேயும் அதே தீர்ப்பு
உறுதி செய்யப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டிலும்
அதே தண்டனை வழங்கப்பட்டது.
ஒரு புகழ் பெற்ற சிறைச்சாலையில்
அவனுக்கு ஒரு இடம் வழங்கப்பட்டது.
கருணை மனு ஒன்று
மேதகு ஜனாதிபதிக்கு
அனுப்பப் பட்டது.
கொஞ்ச நாள் நிலுவையில் இருந்து
அதுவும் நிராகரிக்கப்பட்டது.
தண்டனை நிறைவேற்றும் நாள்
அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
அந்நாளன்று அவனுக்கு
காலையில் குடிக்க பால்
கலக்காத தேநீர் வழங்கப்பட்டது.
தண்டனை நிறைவேறியதும்
பிரேத பரிசோதனை நிகழ்த்தப்பட்டது.
பின் உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டது.

இதே தண்டனை,
வழக்கு பதியப்படாமல்
வாய்தா வாங்கப்படாமல்
தீர்ப்பு வாசிக்கப்படாமல்
கருணை மனு
விண்ணப்பிக்கப்படாமல்
சிறைச்சாலையில் இடம்
வழங்கப்படாமல்
தண்டனை நிறைவேற்றும் நாள்
அறிவிக்கப்படாமல்
ஆற அமர யோசிக்கப்படாமல்
என்னால் ஒரு உயிருக்கு
வழங்கப்பட்டது.

அது கொலை என்று சொல்லப்பட்டது

Saturday, June 25, 2011

கருநாகங்கள் புணரும் கல்லறை

அந்தக் கோவிலைப் பற்றி பாம்படக் கிழவி சொன்ன கதையின் சாரம்சம் இதுதான்:

" மேற்கிலிருந்து  கூட்டம் கூட்டமாக மக்கள்,கால்நடைகள்.அந்த கானகத்தைக் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் மேற்கிலிருந்து வந்ததன் காரணம் அங்கிருந்த ஒரு துஷ்ட மாந்த்ரீகனின் இம்சைகள். இரவுக்கு ஒரு பெண் ,சாராயம், ஒரு கிடா.
தாங்க மாட்டாமல் அவர்கள் கிளம்பி மேற்குத் தொடர்ச்சி மலையைத் தாண்டி, கானகத்தை ஒட்டி இருந்த ஒரு கிராமத்தை நோக்கிப்
போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு வழித்துணையாக ஒரு கல் தெய்வம். பின்னாலே வந்து கொண்டிருந்தது.கிழவர்களும்,
கிழத்திகளும் வலிமையான உட்டி(மூங்கில்) மரங்களில் கட்டிய தொட்டில்களில் தொங்கிக் கொண்டு வந்தனர். அந்தக் கல் தெய்வம்
அவர்கள் பாதி வழியைக் கடந்து வந்து ஒரு இடத்தில், குடிக்க நீரில்லாத ஒரு இடத்தில் இளைப்பாற அமர்ந்த போது அவர்களுக்கு
அறிமுகமானது. அவர்கள் தங்களுக்குத் துணையாக வருமாறு அதை வேண்டிக் கேட்டுக் கொண்டனர். மந்திரவாதியினால் எதேனும் இடர்
நேருமோ என்று அவர்கள் அஞ்சினர்.தான் இந்த இடத்தை விட்டுவரலாகாது என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அம்மக்களின் அன்புக்கிணங்க
அவர்களின் வேண்டுகோளை அது ஒப்புக் கொண்டது.ஆனால் ஒரு ஒப்பந்தத்தின் பேரில்.
அதாகப்பட்டது, "நீங்கள் அனைவரும் முன் செல்வீர்களாக.
நான் பின் தொடர்ந்து உங்களைக் காத்துவருவேன்.யாரும் திரும்பிப் பார்க்கலாகாது. "
"' ஆகட்டும். நீ எங்களைத் தொடர்ந்து வருகிறாய்
என்று எங்களுக்கு எப்படித் தெரியும்"
' என் கால் சலங்கைகள் ஒலி எழுப்பியபடியே வரும்.அதுதான் சமிக்ஞை."
 இப்படியாக அவர்கள் ஏழு இரவுகள்,ஏழு பகல்கள் கடந்து
பயணத்தைத் தொடர்ந்த வண்ணமிருந்தார்கள். கானகத்தின் ஒரு எழில் மிகுந்த பகுதியைக் கடக்கும் போது, அந்தக் கல் தெய்வமானது அந்தக்
கானகத்தின் எழிலில் மெய் மறந்து, வற்றாது பொங்கிக் கொண்டிருந்த ஒரு நீருற்றில் காலை வைத்தது. சலங்கைச் சத்தம் நின்றது.
நான்கு அடி முன்னால் வைத்த மக்கள் சலங்கை ஒலி நின்றது கண்டு திரும்பிப் பார்த்தனர். கல் தெய்வம் கோபம் கொண்டு
' நான் இனி மேல் ஒரு அடி எடுத்து வைக்க மாட்டேன். இனி என் வீடு இங்கேதான். எனக்கு இங்கே ஒரு கோவில் கட்டி வழிபடுங்கள்'
என்று சொல்லி காற்றில் கறைந்தது"

ஆனால் இதைக் கேட்ட பின்பும் மூப்பன் சமாதானமாகவில்லை.

'கிழவி உளறுகிறாள். நான் அதை நம்பத் தயாரில்லை'
' சரி.நீ நம்பினாலும்,நம்பாவிட்டாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை'
' அது கோவில் அல்ல. கல்லறை'
'மூப்பா! இதை நீ பல தடவை என்னிடம் சொல்லி புலம்பிவிட்டாய். ஒன்று கேட்கிறேன்.அது எதுவாக வேண்டுமானலும் இருந்து விட்டு போகட்டும்.அதை தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறாய்?"
' நீ என்னை நம்பவில்லை.அப்படித்தானே?"
"மூப்பா! அது கோவிலோ..கல்லறையோ..இன்று வரை அது நம்பிக்கைதான்.அதை பார்த்தவர்கள் கிடையாது.
நாம் கேட்டதெல்லாம் இந்தக் கிழவிகள் சொல்லும் கதைகள் தான். அதுவும் உண்மையா என்று தெரியாது.நீ ஏன்
அதைப் பற்றி வீணில் கவலைப் படுகிறாய்?"
"காரணம் உண்டு.அந்தக் கல்லறைக்குக் கீழே எதோ ஒரு மர்மம் புதைந்திருக்கிறது"
"இந்தப் பிதற்றலை நான் கோடி முறை கேட்டு விட்டேன். என் வீட்டில் உன்னுடன் சேர்ந்து சுற்ற வேண்டாம், பழக வேண்டாம் என்று
எச்சரித்திருக்கிறார்கள். அது என்ன எழவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டுமே. பிறக்காத குழந்தைக்கு
பெயர் வைக்காதே.இதை இத்தோடு விட்டு விடு"

மூப்பன் என்னிடம் கோபம் கொண்டு போய் விட்டான். ஆனால் அவன் இதைப் பற்றி பலரிடம் புலம்பிக் கொண்டிருப்பதாக
கொம்பன் என்னிடம் சொன்னான். ஒரே வாக்கியம்' அது கோவில் அல்ல.கல்லறை'. இதையேதான் திரும்பத் திரும்ப புலம்புவதாக
சொன்னான்.

ஒரு பௌர்ணமி நாளின் நள்ளிரவில், ஊரோரம் இருந்த மசானத்தில் இருந்து பயங்கரமான அலறலும், கூச்சலும் எழுந்தது. நாங்கள் அனைவரும் அங்கு
சென்று பார்த்தபோது மூப்பன் அங்கிருந்தான். நிர்வாணமாக நின்றிருந்தான்.அத்தனை கல்லறைகளையும் தோண்டிப் போட்டிருந்தான்.
முன் தினம் இறந்திருந்த ஒரு கிழவியின் உடல் உட்பட. அது பாதி அழுகி,அழுகாமல், பன்றிகள் குதறிய கை, கால்களற்ற சதைப் பிண்டத்தைப் போல்
காட்சியளித்தது.

ஊரார் அவனை நெருங்க பயந்தார்கள். கொம்பன் அவனைப் பின்னால் இருந்து தாக்கி மயக்கமுறச் செய்தான். அவனை ஒரு இருட்டறையில்
அடைத்து வைப்பதென முடிவானது. நாங்கள் அவனை அங்கே கொண்டு செல்லும் முன் விழித்துக் கொண்டான்.
 ' அது கோவில் அல்ல ..கல்லறை..என்னை விடுங்கள்..நான் போக வேண்டும்.
நான் அதைக் கண்டுபிடிப்பேன்...உங்களிடம் சொல்வேன்..நீங்கள் ஆச்சரியம் கொள்வீர்கள்...என்னை விடுங்கள்...இன்னும் நிறைய கல்லறைகள் இருக்கின்றது..
அவைகள் என்னை அழைக்கின்றது...அதில் ஒன்றில் தான் நான் தேடும் கல்லறை உள்ளது..அந்த மர்மத்தைப் பார்க்காமல் நான் சாக மாட்டேன்.என்னை விடுங்கள்'
என்று கத்தியபடியே வந்தான்.அவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

அந்த இருட்டறைக்கு ஜன்னல்கள் கிடையாது. ஒரு கதவு. கீழே சாப்பாட்டு தட்டை கொடுப்பதற்கு ஒரு சிறிய வழி. அவ்வளவே.
அங்கே அவனை அடைத்தபின்னர் எங்கள் யாருக்கும் நிம்மதி இல்லை. ஒருவேளை அவன் சொல்வது உண்மையாக இருக்குமோ.
அப்படி இருக்கும் பட்சத்தில் அதைத் தெரிந்து கொண்டு செய்யப் போவது என்ன?. என்ன அங்கே இருக்கும். வரலாற்றின் மறைக்கப்பட்ட
உண்மையோ? யாருக்கும் தெரியாத கதையோ?புதையலோ? மனம் வெகுவாகக் குழம்பியது.

நாட்கள் கடந்தன.இப்போதெல்லாம் மூப்பன் அவனுடைய வழக்கமான புலம்பலை விட்டு விட்டு புதிதாக ஒன்றை உளற ஆரம்பித்தான்.
'என்னைக் கருநாகங்கள் தீண்ட வருகின்றன.என்னைக் காப்பாற்றுங்கள்.என்னை வெளிக்கிடுங்கள்.' முதல் முதலாக இந்த அலறலை
அவன் அலறியதும் நாங்கள் பதறிப் போய் ஓடினோம்.ஆனால் அப்படி ஒன்றும் இல்லை. மூப்பன் அறையின் ஒரு மூலையில் நிர்வாணமாக
குத்துக் காலிட்டு அமர்ந்திருந்தேன். அவனுடைய கண்கள் ஒரு திசையை வெறித்துப் பார்த்தபடி இருந்தன.மிகவும் பயந்திருந்தான்.
ஒன்றும் இல்லை என்று தெரிந்ததும் நிம்மதியாக வீடு திரும்பினோம்.

இந்தப் புதுப் புலம்பல் எங்களுக்கு வழக்கமாகி விட்டது.ஒரு நாள் பௌர்ணமி இரவில் அவனுடைய கூச்சல் வழக்கத்திற்கு மாறாக
மிகவும் பயங்கரமானதாயிருந்தது. ஆதி பயத்தின் அத்தனை சக்திகளையும் அவன் தன் குரலில் வெளிக்கிட்டுக் கொண்டிருந்தான்.

அன்று நாங்கள் அங்கே போகாதிருந்தது எவ்வளவு பெரிய தவறு என்பது அடுத்த நாள் காலை தான் தெரிந்தது. மூப்பன் இறந்திருந்தான்.
அவனுடைய ஆடையில்லாத மெலிந்த உடல் முழுவதும் கருநாகங்கள் தீண்டிய தடயங்கள் காணக் கிடைத்தது. மிகுந்த சோகத்தில்
அவனை அடக்கம் செய்தோம். அவனுக்காக அவன் விட்ட பணியை நாங்கள் தொடர்வது என்று முடிவு செய்தோம்.

இது நடந்த சில நாட்களில், கொம்பன் ஒரு ஆச்சரியமான விஷயத்தைக் கூறினான். அவன் ஒரு கனவு கண்டதாக.
அதன் சாரம்சம் என்னவென்றால்: ' ஒரு கானகம்.அடர்த்தியான, அழகான கானகம். அதன் நடுவில் வெள்ளை மணல் பகுதி.
அதன் நடுவே ஒரு கல்லறை. பௌர்ணமி நாள். அங்கே நிறைய கருநாகங்கள் மெதுவாக பல திசையில் இருந்து ஊர்ந்து
வருகின்றன. அந்தக் கல்லறை மீது மெதுவாக ஏறிப் புரள்கின்றன."

"சரி! அப்படியே வைத்துக் கொள்வோம். அந்த இடத்திற்கு எப்படிப் போவது?"
"மூப்பனின் அறையில் அவன் நிறைய குறியீடுகள் வரைந்து வைத்திருக்கிறான். அதை பார்த்தால் தெரியும்"

நாங்கள் இருவரும் அந்தக் குறியீடுகளை மிகக் கவனமாக ஆராய்ந்து அந்தக் கல்லறைக்குப் போவதற்கான வழியைக் கண்டு பிடித்தோம்.

எதிர்வரும் பௌர்ணமி நாளில் அங்கே போவதாக முடிவெடுத்துக் கொண்டோம். இடைப்பட்ட ஒரு நாளில் கொம்பன் இன்னொரு
ஆச்சரியமான கனவைக் கண்டதாகக் கூறினான். ' அந்தக் கருநாகங்கள் ஒரு பெண் பாம்போடு புரள்வதாகவும்.அந்தப் பெண் பாம்பு
மிக்க வலியில் துடிப்பதாகவும், அதை ஒரு ஒற்றைக் கருநாகம் பக்கத்திலிருந்த ஒரு அத்தி மரத்தின் பொந்தில் இருந்து பார்ப்பதாகவும்,
அந்த ஒற்றை நாகத்தால் நகர முடியவில்லை எனவும், அதன் கண்களில் தெரியும் கோபத்திலிருந்தும், விரிந்த படத்தின் அனலிலிருந்தும்
அந்தப் பெண் பாம்பு, அதற்குச் சொந்தமானது போல் தெரிகிறது என்றும் கூறினான்,"

அந்த இடத்திற்கு போகவேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது. மர்மம் மெலிதாகப் புலப்படத்தொடங்கியது.

அந்தப் பௌர்ணமி நாளின் மதியப் பொழுதில் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். ஆனால் கானகத்தின் வழியே நடப்பது அவ்வளவு
எளிதாக இல்லை. ஒரு வழியாக மாலை முடிந்து இரவு தொடங்கிய ஒரு நிமிடத்தில் நாங்கள் அங்கே சென்று சேர்ந்தோம்.அந்தக் கல்லறை
இருந்தது. நடுநிசியில் தான் கருநாகங்கள் வருமென கொம்பன் உறுதி படக் கூறினான். நாங்கள் ஒரு கூடாரம் அமைத்தோம்.

உணவு தயாரித்துக் கொண்டே குடித்தோம். எனக்கு உணவு உண்டபின், உறக்கம் கண்களை மிகப் பலமாக அழுத்தியது.

' கொம்பா! நான் கொஞ்ச நேரம் உறங்குகிறேன். சரியாக நடுநிசி வந்ததும் என்னை எழுப்பி விடு' என்று சொல்லி விட்டுப்
படுத்துக் கொண்டேன்.

கொஞ்ச நேரம் கழித்து எனக்கு தானாகவே விழிப்பு வந்து விட்டது. ஆனால் கண்களைத் திறக்க முடியவில்லை.

' கொம்பா! நீ எங்கே இருக்கிறாய்.?"
"இங்கே தான். உன் பக்கத்தில் அமர்ந்திருக்கிறேன்."
'நேரம் என்ன?'
'விடிந்து விட்டது'
'என்னது விடிந்து விட்டதா? ஏன் என்னை எழுப்பவில்லை'
'எனக்கு எழுப்பத் தோன்றவில்லை'
'உளறாதே. சரி நீ கருநாகங்களைப் பார்த்தாயா?"

அவனிடம் பதில் இல்லை. ' கொம்பா! கொம்பா' என்று கத்திக் கொண்டே கண்களைத் திறந்து கொண்டு எழுந்து உட்கார்ந்தேன்.

என் முன்னால் இருந்த கல்லறை மறைந்தது.கானகம் மறைந்தது. கருநாகங்கள் மறைந்தன. ஒற்றை அத்தி மரம் மறைந்தது.
கூடாரம் மறைந்தது. கொம்பனும் மறைந்தான்.

ஜன்னல்கள் இல்லாத, உணவு கொடுப்பதற்கு ஒரு  துவாரம் உள்ள ஒரு சிறிய கதவு மட்டும் கொண்ட என் இருட்டறையின்
சுவர்கள் முழுக்க அந்தக் கல்லறைக்குப் போவதற்கான குறியீடுகள் விரவிக் கிடக்கக் கண்டேன்.

Friday, May 27, 2011

ஒரு பொய்யின் கதை

குமரேசனின் அப்பா இறந்து இரண்டு வருடங்களாகிவிட்டது.அவர் ஏன் இறந்தார்,எப்படி இறந்தார் என்ற கேள்விகள்
இப்போது அனாவசியம். அவர் இறந்ததால் என்ன ஆனது என்பதை , தற்போது குமரேசன் கூத்தாமண்டி பஸ் ஸ்டாப்பில்

நின்று கொண்டிருக்கும் நிலையைப் பார்த்தாலே தெரியும்.வயதில் இளையவன் தான். ஆனால் ஒரு குருட்டு

பிச்சைக்காரனின் கோலத்தில் நின்று கொண்டிருந்தான். அவன் அணிந்திருந்த சட்டை கிழிந்திருக்கவில்லை.

நைந்திருந்தது.நிறம் மங்கிய பீட்ரூட் நிறத்தில் அந்த சட்டை இருந்தது.இரண்டு பித்தான்களுக்கு பதிலாக ஊக்கு

மாட்டியிருந்தான்.



அவனுடைய கால்சட்டை, அணிந்திருந்த தூசி படிந்திருந்த ரப்பர் செருப்பிலிருந்து ஒரு ஜாண் உயரத்திலிருந்தது.

சற்று நேரம் முன்புதான் அம்மா கட்டிக் கொடுத்திருந்த புளி சாதத்தை சாப்பிட்டுவிட்டு கொஞ்சமாகத் தண்ணீர்

குடித்திருந்தான். பஸ் வர இன்னும் அரை மணி நேரமாவது ஆகும். அதற்கு மேலும் ஆகலாம். நல்ல அடர்த்தியான

வெயில் காலம். கூத்தாமண்டியில் குடிக்க நல்ல தண்ணீர் கிடைக்காது.உப்புத் தண்ணீர் தான். சற்று தூரத்தில்

இலை உதிர்ந்த ஒரு மரத்தடியில் ஒருவர் இளனீர் விற்கிறார். எப்படியும் பத்து ரூபாய்க்கு குறையாமல்

இருக்கும். அவனிடம் இருப்பதே ஐந்து ரூபாய்தான்.அதுவும் டிக்கெட்டுக்கு. அருகிலிருந்த பெட்டிக் கடையில்

ஒரு தண்ணீர் பாக்கட் வாங்கிக் குடிக்கலாம். நாலு ரூபாய் டிக்கெட் எடுத்தால் ஊருக்கு வெளியே இறக்கி விட்டு

விடுவான். நடந்து கூட போய்விடலாம்.



இந்த யோசனையில் நாக்கிலிருந்து சுரக்கும் எச்சிலை மேல் அண்ணத்தில் தடவியபடி நின்றிருந்தான்.தாகத்தில்

இருக்கும்போது நல்ல குளிர்ந்த,ஆற்று நீரைக் குடிப்பதுபோல சுகம் வேறொன்றில்லை.இப்போது அவனுக்கு அதற்கு

கூட வழியில்லை.சில வருடங்களுக்கு முன்பு அவன் இருந்த நிலை வேறு.இரண்டு அக்காமார்கள், ஒரு தங்கை.

அம்மா,அப்பா,அப்பத்தாவுடன் சேர்த்து மொத்தம் ஏழு பேர் கொண்ட சற்றே பெரிய குடும்பம்.



பெரிய அக்கா படிக்கவில்லை.சிறிய அக்கா ப்ளஸ்2 வரை படித்திருந்தாள்.இவன் பத்தாவதும்,தங்கை மூன்றாவதும்

படித்துக் கொண்டிருந்தார்கள்.ஊரில் மிக வசதியான குடும்பம். ஏழு ஏக்கர் கிணற்றுப் பாசன நிலத்தை குத்தகைக்கு

விட்டிருந்தார்கள். ஐந்து ஏக்கர் ஆற்றுப் பாசன நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்கள். மஞ்சள்,பருத்தி,புகையிலை

என்று எப்பொது பணப்பயிராகவே அவருடைய அப்பா பயிரிடுவார். மூன்று வீடுகள். வீட்டுப் பெண்கள் அணிந்திருந்த

நகை எப்படியும் நூறு பவுனுக்கு குறையாது.



ஆனால் மலை உச்சியிலிருந்து உருட்டி விடப்பட்ட பாறையைப் போல கடந்த இரண்டு வருடங்களில் கொஞ்சம்,

கொஞ்சமாக கீழே வந்து கொண்டிருந்தார்கள். காலுக்குக் கீழே வாழ்க்கை வழுக்கிக் கொண்டிருந்தது.சரியாக ஆறு

வருடங்களுக்கு முன்பிருந்து இதை ஆரம்பித்தால் சரியாக இருக்கும். அப்போது குமரேசன் ஆறாவது பாரம் படித்துக்

கொண்டிருந்தான். ஒரு வெள்ளிக் கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது, அப்பா வெளியிருந்த கயிற்றுக்

கட்டிலில் அமர்ந்திருந்தார்.அவருடைய முகத்தைப் பார்த்தாலே அவர் நன்றாகக் குடித்திருக்கிறார் என்று தெரிகிறது



அவர் ஒன்றும் மொடாக் குடியர் அல்ல. அவ்வப்போது மிதமாகக் குடிப்பார். வீட்டின் உள்ளிருந்து விசும்பல் சத்தம்

கேட்டது. அம்மா அழுகிறாள்.சரி. பாட்டியும் அழுகிறாளே? சிறிய அக்காவும் அழுகிறாள். பெரியவளைக் காணவில்லை.

போய் விட்டாள். யாருடன் என்று தெரியவில்லை.



அடுத்த வாரமே அவர் ஒரு காரியம் செய்தார். சிறிய அக்காவுக்கு திருமணம் செய்வித்தார்.மிகுந்த ஆரவாரத்தோடு அது

நடந்தது. பெரியவளுக்கு வைத்திருந்த அத்தனையும் சிறியவளுக்குத் தூக்கிக் கொடுத்தார்.எதோவொரு கோபத்தில்

அப்படி செய்தார்.ஆனால் சிறியவளுக்கு வாய்த்த கணவன் ஒரு மூர்க்கன். அடிக்கடி அதை வாங்கி வா, இதை வாங்கி வா

என்று பிறந்த வீட்டுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தான்.



அப்பாவின் மன உறுதி நாளுக்கு நாள் தளர்ந்து கொண்டே வந்தது.சரியாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு பெரியவள்

கையில் ஒரு குழந்தையுடன் வந்து நின்றாள். அப்பா அவளை வீட்டை விட்டு போகச் சொல்லவில்லை. அது பாவம் என்று

அவருக்குத் தெரியும். ஏனென்றால் அவள் தன் கணவனை இழந்து விதவையாக வந்திருந்தாள். ஒரு மூலையில்

இருந்து விட்டுப் போ என்று அனுமதித்தார்.



இது அவனுடைய சிறிய மாமாவுக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் பிடிக்கவில்லை. வாய்க்கு வந்தபடி ஏசிவிட்டு போனவர்கள் தான்.

ஒரு நல்லது,கெட்டது எதற்கும் வருவதில்லை.ஆனால் சிறிய அக்கா மட்டும் வருவாள். அது வேண்டும், இது வேண்டும்

என்று.எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல ஒரு சம்பவம் நடந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு.



அது ஒரு அமாவாசை நாள்.காலை ஏழு மணிக்கு முடுக்கந்துறைக்காரி குமரேசனின் வீட்டுக்கு முன் வந்து நின்று கொண்டு

வாய்க்கு வந்தபடி கத்திக் கொண்டிருந்தாள். கண நேரத்தில் ஊர் கூடி விட்டது.அவள் பல பேருக்கு தொடுப்பாக இருந்தாள்.

அவனுடைய அப்பாவும் அதில் ஒருவர் என்பது தாமதமாகத்தான் அவனுக்குப் புரிந்தது.



அவள் சொன்ன ஒரு விசயம் யாருமே ஜீரணிக்கத் தகுந்ததல்ல. தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அதற்கு காரணம்

குமரேசனின் அப்பாதான் என்றும் அழுது ஓலமிட்டாள்.இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் ஒரு

வார்த்தையும் சொல்லாமல் தலை குனிந்த வண்ணமிருந்தார்.பேரப் பிள்ளைகள் கண்ட பிறகு இதென்ன ஒரு அவிசேரித்தனம்

என்று ஊர்க்காரர்கள் காறித் துப்பிவிட்டார்கள்.ஒரு வழியாக அவளை சமாதானம் செய்து, ஜீவனாம்சமாக கொஞ்சம் பணம்,

ரெண்டு ஏக்கர் நிலம் என்று கொடுத்து அனுப்பி விட்டார்கள். பின்னே..இல்லையென்றால் கெடுத்து விட்டதாக புகார்

குடுப்பேன் என்று சேலையை மடித்துக் கொண்டு நிற்கிறாள்.



ஒருவரது பார்வையையும் அவரால் எதிர்கொள்ள முடியவில்லை. அவனுடைய இளைய தங்கையைத் தொடக் கூட அவருக்கு

கை கூசியது. நேராகப் போனார்.அறைக் கதவை சாத்தினார். பதினோறாம் நாள் காரியம் முடிந்ததும், கடன் காரர்கள் வரிசையாக

பாண்டு பத்திரத்தை எடுத்துக் கொண்டு வந்தார்கள். அப்பா இத்தனை பேரிடம் கடன் வாங்கியிருக்கிறாரா என்று அவனுக்கு

மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. கூட்டிக் கழித்து பார்த்ததில் அவர்கள் இருந்த வீடு மட்டும் தான் மிஞ்சியது.



அந்த மட்டிலும் அவர்கள் நிம்மதியாக இருந்தார்கள். ஆனால் அதற்கும் ஆபத்து வந்தது, நிலவள வங்கியின் ஏல அறிவிப்பு கார்டு

மூலமாக. வீட்டை மட்டுமல்லாது அவர்கள் மொத்த பேரின் வாழ்க்கையையும் அடமானம் வைத்து விட்டு போயிருந்தார்.

மொத்தமாக காலி செய்துவிட்டு 'சிட்டேபாளையம்' சுப்பைய நாயக்கரின் ஒரு ஒதுக்குப் புறமான சிறிய வீட்டில்

வாடகைக்குத் தங்கிக் கொண்டார்கள். அப்போதுதான் அவனுக்கு ஒரு விஷயம் புரிந்தது.இத்தனை நாளாக அவன் பள்ளிக்குச்

செல்லவில்லை. இனி மேல் அது நடக்காது என்பது அவனுக்குத் தெரியும்.



அவனும், பெரியக்காவும் பக்கத்திலிருந்த மில்லில் வேலைக்கு சேர்ந்தார்கள். பஞ்சு மில். பஞ்சுத் துசி மூக்கில் ஏறி அவனுடைய

அக்காவிற்கு, அவள் சிறியவளாக இருந்த ஆஸ்த்துமா திரும்பவும் வந்து விட்டது. கொஞ்ச காலத்திற்கு பிறகு அவளும் வேலைக்குப்

போவதை விட்டுவிட்டாள். வீட்டில் மூன்று விதவைகள்.இரண்டு குழந்தைகள். அத்தனை பேரும் பெண்கள்.



அவன் தனியனாகத் தான் போராடிக் கொண்டிருந்தான். அவர்கள் ரேஷன் அரிசி உணவுக்கு பழக்கப் பட்டுவிட்டார்கள்.

கொசுக்கடிக்கும்,வியர்வைக்கும் பழக்கப் பட்டு விட்டார்கள். சில நேரத்தில் விஷம் குடித்து விடலாமா என்று கூட அவன்

யோசித்ததுண்டு. ஆனால் அவன் தங்கையும்,அக்காவின் சிறிய குழந்தையும் அதன் வீரியத்தை தாங்குவார்களா.ஒரு வேளை

அவன் மட்டும் செத்து அத்தனை பேரும் பிழைத்துவிட்டால்.அவன் தங்கை, நைந்து போன சட்டையும், பாவாடையும்

போட்டுக் கொண்டு, மூக்கில் ஒழுகும் சளியோடு ஸ்கூலுக்குப் போகிறது. வந்து சிரத்தையாக வீட்டுப் பாடம் எழுதுகிறது.

அதன் வாழ்க்கையை தீர்மானிக்க அவன் யார். இப்படியாக பல யோசனைகள்.



ஒரு நல்ல நாள் பார்த்து அம்மா மயங்கி விழுந்தாள். டாக்டரிடம் காட்டியதில் கர்ப்பப்பையில் கட்டி இருப்பதாக அறிய வந்தது.

மருத்துவச் செலவுக்கு பணம்? அவன் கால்கள் நிற்காமல் சிறிய அக்காவின் வீட்டுக்குப் போய் நின்றது. சிறிய மாமா ஒரு வண்டி

அவனுடைய அப்பாவைத் திட்டிவிட்டு பணத்தைக் கொடுத்தார். ஒரு மாசத்தில் திருப்பி கொடுக்க வேணுமாய் ஒப்பந்தம்.



சர்ஜரி முடிந்த உடனேயே, அவனுக்கு வாங்கிய கடனை எப்படிக் கொடுப்பது என்ற யோசனை எழுந்தது. பெரிய அக்கா இரண்டு

கம்மல்களைக் கொடுத்தாள். மிச்சப் பணத்துக்கு என்ன செய்வது. ஒரு வழி தெரிந்தது.'மொரப்பா' கந்தசாமியிடம் போய் விஷயத்தைச்

சொன்னான். அவன் அதைக் கேட்டு 'ஓ' வென்று அழுது ஓலமிட்டான். அத்தனையும் அடமானம் வைத்து விட்டு போன அப்பா

இரண்டு மாடுகளை மட்டும் விட்டு வைத்துவிட்டு போயிருந்தார்.அதை 'மொரப்பா' கந்தசாமி பாதுகாத்து, பராமரித்து வந்தான்.

அவ்வப்போது மாட்டு வண்டி கட்டிக் கொண்டு, மண், ஜல்லி, சிமெண்ட் என்று லோடு அடிப்பான். அவர்கள் பண்ணையத்தில்

இருபது வருடமாக வேலை செய்ததற்கு, இது தான் கிடைத்தது. அதற்கும் வந்தது ஆபத்து. கண்ணைத் துடைத்துக் கொண்டு

கொடுத்து விட்டான்.



கூத்தாமண்டி பொம்மு நாயக்கர் அதை விலைக்கு வாங்கிக் கொண்டார். முதல் தவணையாக நாலாயிரம் ரூபாய் கொடுத்தார்.

இரண்டவதாக நாலாயிரம். இப்போது மூன்றாவது தடவையாக வந்து வெறும் கையுடன் திரும்பி நாம் முதலில் பார்த்த

பஸ் ஸ்டாப்பில் நிற்கிறான்.



பஸ் எப்போது வரும் என்று நான்கு தடவை பெட்டிக் கடைக்காரனை கேட்டாகி விட்டது. மாலை ஐந்து மணிக்கு அவன் மில்

வேலைக்குப் போக வேண்டும். வெயிலோடு புழுதியும், தூசியும் நிறைந்த காற்று மெலிதாக வீசிக் கொண்டிருந்தது.



தூரத்தில் ஒரு இரு சக்கர மோட்டார் வண்டி வருகிறது. சரி, இவரிடம் கேட்டு பார்ப்போம்.எது வரை போகிறாரென்று.

பெத்திக் குட்டை வரை போனால் கூட போதும். கள்ளிப்பட்டி பிரிவு வரை நடந்தால், நம்பியூர் மார்க்கமாக செல்லும் பஸ்ஸில்

ஏறிப் போய் விடலாம் என்ற நினைப்புடன் கையைக் குறுக்கே நீட்டினான்.



ஆனால், பின்னால் ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள். கையை இறக்கி, பெட்டிக் கடை பக்கமாக முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டான்.

அந்த வண்டி நிற்காமல் போனதே நல்லது என்று நினைத்துக் கொண்டான். ஆனால் வண்டி நின்றது.ஒரு பெண் அதிலிருந்து இறங்கி

நடந்து வருவதை அவனால் உணர முடிந்தது. அவள் வேறு யாருமல்ல. அவன் ஒரு காலத்தில் மிகுந்த ப்ரேமை கொண்டிருந்த பரிமளா.



அது அவளுக்குத் தெரியாது. அவளுக்கு கல்யாணாம் நடந்து நான்கு மாதங்கள் தான் ஆகிறது. இவள் எதற்கு இங்கே வருகிறாள். அடையாளம்

கண்டு கொண்டாளா என்ற பரிதவிப்பில் முகத்தை திருப்பாமலே நின்றான்.



வெயிலோடு, புழுதியும் தூசியும் கலந்த காற்று இப்போது பலமாக வீசியது.கண்களில் விழுந்து அழுத்தியது. கண்களில் நீர் திரண்டது.



பின்னால் ஒரு குரல் கேட்டது." குமரேசா ! நல்லா இருக்கியா?"



அவன் மெதுவாக கண்களைக் கசக்கியபடியே திரும்பினான். ' என்ன கேட்ட பரிமளா?"



"நல்லா இருக்கியானு கேட்டேன்" என்று இழுத்தாள்.



இப்போது அவனுக்கு நிஜமாகவே கண்ணீர் வந்தது. புழுதியின் துணை தேவைப்படவில்லை.



பொம்மு நாயக்கரிடம் மிச்சப் பணத்தை வாங்கி பத்திரமாக கொண்டு போவதற்கா அவன் கொண்டு வந்திருந்த சிறிய மஞ்சள்

பையை பார்த்து விட்டு உதடு குவிந்த புன்னகையோடு சொன்னான்.



'ரொம்ப சௌக்கியம்'













Friday, April 8, 2011

தேவதச்சன்

இன்றிலிருந்து சரியாக மூன்று மாதங்களுக்கு முந்தைய ஒரு பௌர்ணமி நாளில் மருதப்ப ஆச்சாரி மிக்க குதூகலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தார்.அவருடைய சந்தோஷத்திற்கு காரணம் இருந்தது.அது என்னவென்றால் "கச்சக்" பொன்னுசாமி கவுண்டர் அவருடைய புது வீட்டின் தச்சு வேலைக்கு அவரைக் கூப்பிடிருந்தார்.தச்சு வேலை அவருடைய தொழில். அதில் குதூகலமடைய என்ன பெரிய காரணம் வேண்டிக் கிடக்கிறது என்ற ஆகப்பெரிய கேள்விக்கு ஆகச்சிறிய பதில் என்னவா
இருக்குமென்றால் அவர் கடந்த ஆறு வருடங்களாக தொழிலுக்குப் போகவில்லை என்பதுதான்.



அவர் ஏன் ஆறு வருடங்களாக தொழிலுக்குப் போகவில்லை என்ற ஆகச்சிறிய கேள்விக்கு மிகச் சிறந்த பதில் என்னவாக இருக்குமென்றால் அவரை யாரும் தச்சு வேலைக்கு கூப்பிடவில்லை என்பதாகத்தான் இருக்கும். அவரை ஏன் யாரும் தச்சு வேலைக்கு கூப்பிடவில்லை என்ற ஆகச்சிறந்த கேள்விக்கு பதில்கள் ஏராளம்.



முதலாவது அவருக்கு வயதாகிவிட்டது.அதெல்லாம் ஒரு காரணமா என்று எதிர்க்கேள்வி எழுவது இயல்புதான்.ஆனால் இயல்பிலே மிக நிதானமான ஆள் மருதப்ப ஆச்சாரி.வயது கூடக் கூட அவர் நிதானம் எல்லை கடந்து விட்டது. அந்த அளவுக்கு நிதானமும், பொறுமையும் எங்கள் ஊரில் யாருக்கும் இல்லை. இரண்டாவது, மனைவி போன சோகத்தில் குடித்து விட்டு வேலைக்குப் போக ஆரம்பித்தார். பதினைந்து பேர் தவிர மற்ற எல்லாரும் குடிகாரர்களாக இருக்கும் ஒரு ஊரில் இது ஒரு பெரிய முறைப்பாடாக இருந்தது.மூன்றாவது, இப்போது வரும் இளம் தச்சர்கள் , சிறியதும் பெரியதுமான பல மின்சாரத் தளவாடங்களை வைத்துக் கொண்டு வேலை பார்க்கிறார்கள். ஒரு பீடியைப் பற்ற வைப்பதற்குள் எவ்வளவு

பெரிய பலகையானாலும் அறுத்துத் தள்ளி விடுகிறார்கள். ஜர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ற சப்தம் மட்டுமே வருகிறது.அறுந்து போன பலகை கீழே விழுகிறது.அவ்வளவுதான். ஓட்டை போடுவதற்கும் அப்படியே. சப்தம் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாய் வருகிறது கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று. இவர்களுக்கு முன் அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.



அதிலும் அந்த பலகையில் ஓட்டை போடும் சமாச்சாரம் மற்றவர்களை விட, பல சமூக நாடகங்களில் "ஸ்த்ரீ பார்ட்" வேஷம் கட்டும் "தங்க முருகன்" என்றழைக்கப்படும் "கோல்டு" முருகனுக்கு பெரிய தலைவலியாக இருந்தது. அவன் அவரிடம் எடுபிடியாக வேலை செய்து வந்தான். இப்போது கொளத்து வேலைக்கு போவதாகக் கேள்வி.



இதையெல்லாம் விட மிதமிஞ்சிய ஒரு காரணம் உண்டு.சிட்டேபாளையம் சுப்பைய நாயக்கர் அவருடைய "தொடுப்பு" க்காக கட்டிய சிறிய வீட்டின் கூரையை வேய்ந்து கொண்டிருந்தபோது, மிகு போதையில் பீடியைப் பற்ற வைத்து விட்டு மறக்காமல் நெருப்பை கூரை மீதே போட்டு விட்டார். ஒரு முனையில் அது பற்றி எரிந்து கொண்டிருந்தபோது மறுமுனையில் இவர் மும்முரமாக கூரை வேய்ந்து கொண்டிருந்தார். இவர் முழு வேலையையும் முடித்து விட்டு கீழே இறங்கியபோது கூரை முற்றிலுமாக எரிந்து, பல காலமாக வெற்றிலையும், பாக்கும்,புகையிலையும் போட்டுத் துப்பிய பல்லில்லாத கிழவியின் வாய் மாதிரி தோற்றமளித்தது.



ஆறு வருட காலமாக இவர் வனவாசம் போன கதை இதுதான். இவையெல்லாம் அவருக்கு தெரிந்தே இருந்தது. ஆரம்பத்தில்
கொஞ்சம் வருத்தம் இருந்தாலும், நம்முடைய காலம் முடிந்து விட்டது என்ற எண்ணம் அவருக்கு கொஞ்சம் ஆறுதல் தந்தது. ஆனாலும் வருத்தம் வருத்தம் தான்.வயிற்றுப்பாட்டுக்கு பிரச்சனையில்லை. சொந்தமாக அவருக்கு கொஞ்சம் நிலம் இருந்தது. வங்கியில் கொஞ்சம் சேமிப்பும் இருந்தது.ஆற்றில் விழுந்த இலை போல அவர் பாட்டுக்கு வாழ்க்கையோடு போய்க் கொண்டிருந்தார்.



இந்த நேரத்தில்தான் பொன்னுசாமிக் கவுண்டரின் அழைப்பு அவருக்கு வசந்த அழைப்பாக இருந்தது. இனித்தது.போதக்குறைக்கு இருநூறு ரூபாய் வேறு முன்பணமாகக் கொடுத்து விட்டு போயிருந்தார். பணத்தை எடுத்துக் கொண்டு நேராக மதுபானக் கூடத்துக்கு போனார். தனது சாகாக்களுடன் ஜமாவை ஆரம்பித்தார். முதல் கிளாஸ் சல்பட்டுக்கு " தீன கருணாகரனே நடராஜா" என்று பாகவதரில் ஆரம்பித்தவர், மூன்றாவது ரவுண்டுக்கு " அமைதியில்லாதென் மனமே" என்று கண்டசாலாவில் வந்து நின்றார்.ஐந்தாவது ரவுண்டை " தென்றல் உறங்கிய போதும்..திங்கள் உறங்கிய போதும்" என்று ஏ.எம்.ராஜாவில் முடித்தார். ஆறாவது ரவுண்டை
எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடையைக் கட்டினார்.



பூப்படைந்த பெண்ணின் இளம் கொங்கைகளைப் போன்ற பரிசுத்தமான நிலவொளியில் வரப்பின் மீது அடி மேல் அடி வைத்து மெதுவாக
நடந்தார்." மோகனப் புன்னகை வீசிடும் நிலவே..மேகத்திலே நீ மறையாதே" என்று சௌந்தரராஜனின் அற்புதமான பாடல் ஒன்றை மெதுவாக பாடியபடியே வீடு வந்து சேர்ந்தார்.மங்கிய குண்டு பல்பின் வெளிச்சத்தின் கீழே அவருடைய சோம்பேறி நாய் ஜும்பா படுத்திருந்தது.அது யார் வந்தாலும் குரைக்காது. அதற்காக கடிக்காது என்று அர்த்தம் கிடையாது.கடிக்கும். சில சமயங்களில்.



யார் வருகிறாரென்று பார்த்துக் கொண்டே இருக்கும்.ஆனால் அந்த வீட்டுக்கு வருகிறவர் ஆச்சாரி மட்டுமே. அவர் வீடு. வருகிறார்.
மற்றபடி யாரும் அந்த வீட்டுக்கு வருவதில்லை.அதனால் அதற்கு கடிப்பதற்கு சரியான சந்தர்ப்பம் கிட்டவில்லை.மத்தியானம் சமைத்து
வைத்திருந்த சோற்றில் கொஞ்சத்தை ஜூம்பாவிற்கு போட்டு விட்டு வீட்டின் பின்பக்கம் போனார்.அங்கே ஒரு பெரிய தகரப் பெட்டி ஈசான்ய
மூலையில் கிடந்தது.அந்தப் பெட்டியில் தான் அவருடைய தச்சு வேலைக்கான அத்தனை தளவாடங்களும் இருக்கிறது. மெதுவாக அந்த
கனமான பெட்டியைத் தூக்கிக் கொண்டு முன் பக்கம் வந்தார்.



ஜூம்பா அவரையே பார்த்துக் கொண்டிருந்தது.பெட்டியைத் திறந்தார். அத்தனை பொருட்களும் துருப்பிடித்துக் கிடந்தது. ஆடி மாதம் கழிந்து தன் மனைவியைத் தொடும் ஆடவனைப் போல ஆசையாகத் தொட்டுத் தொட்டு பார்த்தார்.கொஞ்சம் சீமை எண்ணையைத் தடவி , பக்கத்திலிருந்த சொர சொரப்பான தரையில் "தர்ர்ர்..தர்ர்ர்ர்" என்று தேய்த்து துருவை அகற்றினார்.சாணைக் கல் கொண்டு கூர்மை தீட்டினார்.எலுமிச்சம்பழச் சாற்றை பிழிந்து, தனது வேட்டியில் நனைத்து துடைத்து பளபளப்பாக்கினார்.எல்லாம் முடிந்த போது அவருடைய தளவாடங்கள் தொண்டைமானின் போர்க் கருவிகளைப் போல ஜொலித்தது.நடு நடுவே " உல்லாச உலகம் எனக்கே சொந்தம்" என்று எஸ்.சி. கிருஷ்ணனையும் பாட மறக்கவில்லை. நள்ளிரவு தாண்டி, சாப்பிடக் கூட மறந்து உறங்கிப் போனார்.



அடுத்த நாள் அவர் பொன்னுசாமிக் கவுண்டரின் வீட்டுக்குப் போனார்.

" மருதப்பா! பெருசா ஒண்ணுமில்ல..ஏழு ஜன்னலு..நாலு கதவு..மேல சாரங் கட்டி ..ஓடு போட்டுக் குடுத்துரு.அவ்ளோதான்..பவக்காளியைக் கூட்டிட்டு போய் நாயக்கரோட மர மண்டியில இருந்து , என்னென்ன மரம்,பலக வேணுமோ எடுத்துட்டு வந்துரு..சரியா..பொறுமயா வேல பாரு..ஒண்ணும் அவசரமில்ல..செலவுக்கு எதுனா வேணுமின்னா கேளு..சரியா.."


" அது சரி பொன்னு..எந்த நாயக்கர நீ சொல்ர.."


"நம்ம ஊருல எத்தன பேருடா இருக்காங்க...நம்ம சுப்பைய நாயக்கருதான்"

ஆச்சாரிக்கு 'சுருக்' கென்றது. காட்டிக் கொள்ளவில்லை.



அவர் அத்தனை மரப்பலகைகளையும் கொண்டு வந்து சேர்த்தபோது மணி இரவு எட்டாகி விட்டது.அவரும், பவக்காளியும் மெதுவாக நடந்து மதுபானக் கடைக்கு போனார்கள். மெலிதான மழை.

ஒரு புட்டி வாங்கிக் கொண்டு கால்வாய் ஓரமாக உட்கார்ந்து கொண்டு ஜமாவை ஆரம்பித்தார்கள். பவக்காளியும் அவரைப் போலவே திக்கற்றவன்.இருவரும் மிக்க மகிழ்ச்சியாகக் குடித்தார்கள். அவர்களுக்கு ஏறிய போதையில் , கொஞ்சம் அன்னியோன்யமும் கலந்திருந்தது.




***********************************************************

மூன்று நாட்கள் கழித்துத் தான் அவரால் வேலையை ஆரம்பிக்க முடிந்தது. மழையால் ஊரெல்லாம் சகதியாகக் கிடந்தது. முதலில் ஜன்னலுக்கு அளவெடுத்து மரத்தை அறுக்க ஆரம்பித்தார்கள்.மருதப்ப ஆச்சாரியின் தொழில் நேர்த்தி வியக்கத்தக்கது.அவர் பாட்டுக்கு மரப்பலகைகளை அறுத்துப் போட்டுக் கொண்டே இருந்தார். எது எதற்கு என்று மிக்க குழப்பத்தினூடே பவக்காளி அவருக்கு உதவி செய்து கொண்டிருந்தான்.அறூப்பு வேலையை மட்டும் 6 நாட்கள் செய்தார்.இதனூடே ஆச்சாரி தன் ஜாகையை மொத்தமாக அந்த கட்டப் பட்டுக் கொண்டிருக்கும் வீட்டுக்கு மாற்றிவிட்டார். அவர் வீடு கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலே என்பதால் வேலை முடியும் வரை இந்த ஏற்பாட்டை செய்தார்.பக்கத்தில் ஒரு குடிசை போட்டு அதில் தங்கிக் கொண்டார்.ஜூம்பாவும் வந்து விட்டது. சமையலும் அங்கேயே. ஆனால் ஜூம்பா புது இடத்திற்கு பழக கொஞ்ச நாள் பிடித்தது. பவக்காளி தன் வேட்டியை அதனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள ஒரு நாளில் சில மணிநேரங்களை செலவிட வெண்டியிருந்தது.



அவர் அவனுக்கு அந்த ஊர்க் கதைகளைச் சொல்லியபடியே வேலை செய்தார். நடு நடுவே ' ஆடிப் பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது'
என்று கண்டசாலாவின் பாடலை நேயர் விருப்பப் பாடல் போல பாடிக்கொண்டேயிருந்தார். காலை 9 மணிக்கு ஆரம்பித்தால்
மதியம் 1 மணி வரை. கொஞ்சம் சாராயம்.சோறு.தூக்கம். பிறகு இருட்டும் வரை வேலை. பிறகு சாராயம்,சோறு, தூக்கம்.இப்படியாக தினசரிகள் கழிந்தன. கவுண்டர் வாரத்திற்கு ஒரு முறை வருவதோடு சரி.



அது மழைக் காலம் என்பதால் கட்டுமான வேலைகளும், இவர் வேலையோடு சேர்ந்து கெட்டது. பளீரெனெக் காணப்படும் வானம்
திடீரென்று ஓட்டைப் பானை போல கொட்டும். அந்த வேளைகளில் சாரயத்தைக் குடித்து விட்டு குடிசையில் படுத்துக் கொள்வார்.



இன்றிலிருந்து சரியாக ஒரு மாதத்திற்கு முந்தைய ஒரு பௌர்ணமி நாளில் ஆச்சாரி அத்தனை வேலைகளையும் முடித்து ஓடு வேய்ந்து அந்த வீட்டை முழுமையாக்கினார்.

அன்றிரவு,அவரும், கவுண்டரும், பவக்காளியும் மது அருந்தினார்கள். மெலிதான காரம் போட்டு வறுத்த நாட்டுக்கோழியும், ஆவி பறக்கும் இட்லியும், பாம்பு மீன் குழம்பும் பவக்காளி சமைத்தான்.



ஆச்சாரி, ஒரு பீடியை பற்றவைப்பதற்காக தன் பட்டாபட்டியில் கை விட்டு துழாவினார். ஒன்றே ஒன்றுதான் இருந்தது.சிரித்தார்.

' என்னடா மருதா சிரிப்பு..!

'ஒன்னுமில்ல பொன்னு...நம்ம 'மொரப்பா' கந்தசாமி ஒன்னு அடிக்கடி சொல்லுவான்..அத நெனச்சேன்!"

' அவன் என்ன பெரிசா சொல்லிட்டான்னு நீ இப்போ உன் அண்டா வாயத் தொறக்கற!"

"இல்ல...ரெண்டு பீடி இருந்தா எந்தக் கவலயுமில்லாம ஒன்னக் குடிக்கலாமின்னு சொல்லுவான்'



கவுண்டர் தன்னிடமிருந்த ஒரு சுருட்டை எடுத்து நீட்டினார்.வாங்கிக் கொண்டு அவர் அந்த கடைசி பீடியைப் பற்றவைத்துக் கொண்டார்.

' மருதா..கூலினு நான் எதுவும் உங்கிட்ட பேசல..நீயும் கேக்கல..எவ்வளவுன்னு நீயே சொல்லு..காலயில வந்து வீட்ல வாங்கிக்க..சரியா?'

ஆச்சாரி விசும்ப ஆரம்பித்தார். மற்ற இருவரும் அவரை வேடிக்கையாக பார்த்தபடி இருந்தனர்.

மழை மேகங்கள் திரண்டு கொண்டிருந்தன. குளிர்ந்த காற்றோடு, மின்னல்களும் வீசின.

' எனக்கு கூலி வேண்டாம் பொன்னு'

'உனக்கென்ன பைத்தியமா..ரெண்டு மாசமா வேல செஞ்சிருக்க..கூலி வேண்டாங்கற!

' இல்ல பொன்னு வேண்டா..ஒன்னு சொல்லட்டா..இந்த ஊர்ல இருக்கற முக்காவாசி வீடு நான் வேல செஞ்சது.ஆறு வருசமா என்ன நம்பி யாரும் வேல தரல.நீ குடுத்த. இதோ இந்த பெட்டி இருக்கே..இந்த உளி,ரம்பம் இதெல்லாந்தான் எனக்கு சோறு போட்டது..என் ரெண்டு புள்ளைங்களுக்கு கல்யாணாம் மூச்சுக் குடுத்துது..கடசி காலத்துல நான் யார் கிட்டயும் கையேந்த விடாம நெலமும்,கொஞ்சம் பணமும் சம்பாதிச்சுக் குடுத்துது...இது வரைக்கும் நான் எல்லர்கிட்டயும் கூலி வாங்கியிருக்கேன்..உங்கிட்ட வாங்க எனக்கு மனசு வல்ல..நீ பெரிய பணக்காரன்..நான் கேட்கிற பணம் உனக்கு ஒன்னுமில்ல..ஆனாலும் எனக்கு வேண்டா'

முகத்தைப் பொத்திக் கொண்டு சிறுபிள்ளை போல அழுதார்.



ஆச்சாரி எதோ குடி போதையில் உணர்ச்சிவயப்படுகிறார் என்று கவுண்டர் நினைத்துக் கொண்டார்.,

' சரி விட்ரா...நல்லா திருப்தியா சாப்புட்டு தூங்கு..காலயில பாக்கலாம்'

'இல்ல பொன்னு..நான் என் வீட்டுக்கு போறேன்'

' மழ வர்ராப் போலிருக்கு..இங்கயே தூங்கிக்க"

"இல்ல நான் போறேன்..ஏ! ஜூம்பா..வா இந்தப் பக்கம்..போலாம் நம்ம வீட்டுக்கு'

தளவாடங்கள் அத்தனையும் பொறுமையாக எடுத்து பெட்டியில் அடுக்கினார்.போதையில் கொஞ்சம் தடுமாறினார்.

அடுக்கியதும் கவுண்டரை பார்த்து கை நிறையக் கும்பிட்டார்.

பெட்டியைத் தூக்கி தலை மேல் வைத்துக் கொண்டு , ஜூம்பா முன் செல்ல, பூப்படைந்த இளம் பெண்ணின் கொங்கைகளைப் போன்ற பரிசுத்தமான நிலவொளியில் ' மோஹனப் புன்னகை வீசிடும் நிலவே..மேகத்திலே நீ மறையாதே" என்ற சௌந்தரராஜனின்
அற்புதமான பாடலைப் பாடிய படியே வீடு வந்து சேர்ந்தார். பெட்டியை அதே ஈசான்ய மூலையில் வைத்து விட்டு உப்புக்கறை படிந்த
கன்னங்களோடு அப்படியே தூங்கிப் போனார். அன்றிரவு சூறைக் காற்றும், மழையும் பலமாக இருந்தது.



மறுநாள் காலை பவக்காளி கூலிப்பணத்தை எடுத்துக் கொண்டு ஆச்சாரி வீட்டுக்குப் போனான்.

அங்கே, அவருடைய நாய் ஜூம்பா, தரைமட்டமாகி கிடந்த ஆச்சாரியின் வீட்டைப் பார்த்துக் குரைத்துக் கொண்டிருந்தது.

Friday, February 11, 2011

தலைவன் - இட்லிவடையில் வெளியான என் சிறுகதை

"சேர்ந்து கொள்கிறீர்களா?"


"ஓ! தாராளமாக.ஆனால் இந்த மாதிரி நான் கேள்விப்பட்டதே இல்லையே? புதுமையாக இருக்கிறதே?"

"ஆம்! இது கொஞ்சம் புது மாதிரிதான்"

"இந்த மாதிரி வேறு எங்கேனும் உண்டா?"

"உண்டு"

"அவர்களுடன் நாம் இணைந்து செயல்படப்போகிறோமா?"

"இல்லை! நாம் தனித்து செயல்படப் போகிறோம்"

"தனித்தா?நன்று.யாருடனும் கூட்டணி இன்றி செயல்படுவது எனக்கு பிடித்தமான ஒன்று.

பின்னால் காலை வார மாட்டீர்களே?"

"இல்லை."

"சரி! நான் என்ன செய்ய வேண்டும்?"

"நீ நாலு பேரை சேர்த்து விடு.நானும் சேர்க்கிறேன்"

"ஆட்களை சேர்ப்பதா? இதில் எத்தனை பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்?"

"உன்னையும் என்னையும் சேர்த்து..?"

"சேர்த்து..?"

"இரண்டே பேர்"

"இரண்டே பேரா? இது ஆரம்பித்து எத்தனை நாட்களாகிறது?"

"இப்போதுதான்!"

"இப்போதுதான் என்றால்?"

"இரண்டு மணி நேரமாகிறது"

"இரண்டு மணி நேரம்தானா? வயிற்றைக் கலக்குகிறதே!"

"உனக்கு இதன் தலைவர் பதவி தரலாம் என்றிருக்கிறேன்.வயிற்றைக் கலக்குகிறது,

வாந்தி வருகிறது என்று பிதற்றுகிறாயே?"

"தலைவர் பதவியா? இப்போது நெஞ்சை அடைக்கிறது"

"ஏன்?"

"தலைவர் பதவி என்கிறீர்களே. அதுதான். தலைவன் என்பது பதவியல்லவே"

"பதவி அல்லவா? அதுதான் பிரதம பதவி.அதுகூட தெரியாத மூடனா நீ?"

"தெரிந்த மூடன்.போதுமா?"

"சரி. தலைவன் பதவியில் நீ இரு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்"

"அதைத்தானே நான் சொன்னேன்"



இப்படியாக சில ஆண்டுகளுக்கு முன் பனிக்கரடி சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டேன்.அதன் ஆகக்கூடிய செயல்பாடு வருடத்திற்கொரு முறை எங்கள் வீட்டுக்கருகில் இருக்கும் க்ரீவ் கோர் ஏரியில் குதிக்க வேண்டும்.



அதனால் என்ன பிரயோசனம் என்ற கேள்வி என்னுள் எழுந்தபோது, "அது உனக்கு தேவையில்லாதது" என்ற விடை கிடைத்தது. மகிழ்ச்சியாக ஆட்களை சேர்க்க ஆரம்பித்தேன்.



ஆனால் அது அவ்வளவு சுலபமாக இல்லை. என்னைக் கண்டாலே காத தூரம் ஓடினார்கள். இது பற்றி நான் முறைப்பாடு செய்தபோது " குதிப்பவர்களுக்கு அன்று அவர்கள் குடிக்கும் பீர் மொத்தமும் இலவசம்" என்று அறிவிப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டேன்.என்னை தலைவர்
பதவிக்கு தேர்வு செய்த என் ஆலோசகர் ஒரு பெரிய மதுபானக் கூடத்தின் உரிமையாளர்.



அப்படியும் என்னால் ஒரு எட்டு பேரை மட்டுமே சேர்க்க முடிந்தது.அத்தனை பேரும் பீர் மட்டுமே குடிப்பவர்கள். அவர்களை மட்டுமே என்னால் சேர்க்க முடிந்தது என்பது எனக்கு மட்டுமே தெரியும்.



ஒரு சனிக்கிழமை அமாவாசை மதியம் 12 மணிக்கு பனிக்கரடி படை மதுக்கூடத்திலிருந்து புறப்படும் என்று அடுத்த அரை மணி நேரத்தில் அத்தனை நிகழ்ச்சிகளும் முடிவடையும் என்றும் நிரல் தயாரிக்கப்பட்டது.



அந்த நாளும் வந்தது.அதற்கு முந்தைய இரவு நான் வானத்தை பார்த்தபடி சுருட்டு புகைத்தபடி உட்கார்ந்திருந்த போது இனம் புரியாத பீதி மனதை ஆட்கொண்டது.அது என்னவென்று எனக்கு புரிய ஐந்து நிமிடம் ஆனது. புரிந்தபின் அது ஜீரணம் ஆக அடுத்த ஐந்து நிமிடம் ஆனது.



அது கடுமையான குளிர்காலம்.அந்த ஏரி உறைந்தல்லவா கிடக்கிறது. அதில் எப்படி குதிப்பது. வேண்டுமானால் சித்தர்கள் மாதிரி குறுக்கும் நெடுக்குமாக நடக்கலாம்."ஆஹா! என்னைக் கண்டதும் அத்தனை பேரும் சிதறி ஓடினார்களே.இதுதான் காரணமா?இது எனக்கு மட்டும் எப்படி தெரியாமல் போனது?" என்று எனக்குள் நானே புலம்பிக் கொண்டு இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தேன்.



அடுத்த நாள் மாற்று உடுப்புகள் எடுத்துக் கொண்டு நான் மதுக்கூடத்துக்கு போன போது அதற்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது. சுமார் இரு நூறு பேர் அமர்ந்திருந்தார்கள். எப்போதும் காற்று வாங்கும் சனிக்கிழமை மதியம் எப்படி இத்தனை பேர்? அத்தனை பேரும் குதிப்பதற்கு வந்திருக்கிறார்களா? நன்று.



ஆனால் அது ரொம்ப நேரம் நீடிக்கவில்லை.அத்தனை பேரும் நாங்கள் குதிப்பதை வேடிக்கை பார்க்க வந்தவர்களாம்.அன்று மதிய வியாபாரம் அபாரமாக இருந்தது. என் ஆலோசகர் என்னையும், மற்ற உறுப்பினர்களையும் கூப்பிட்டு ஒரு பத்திரத்தில்  கையெழுத்து போடச் சொன்னார். அது என்ன என்று கேட்ட போது " குதிக்கும் போது
காயமோ அல்லது உயிருக்கு ஆபத்தோ நேர்ந்தால் அதற்கு மதுபானக் கூட நிர்வாகம் பொறுப்பல்ல" என்று எழுதியிருப்பதாக பதில் வந்தது.



இன்னும் எத்தனை அதிர்ச்சிகள் காத்திருக்கிறதோ? என்ற நினைப்புடன் நாங்கள் ஏரிக்கு பயணமானோம். ஏரியில் இரண்டு மாட்டு வண்டி சக்கர அளவிற்கு பனிக்கட்டிகள் உடைத்து குளம் போல் அமைக்கப்பட்டிருந்தது.



சரி! யாரவது முதலில் குதிக்கட்டும். அவர்கள் நிலைமையைப் பார்த்துவிட்டு அடுத்து எடுக்க வெண்டிய நடவடிக்கை குறித்து யோசிக்கலாம் என்று நான் குளத்தை வெறித்தபடி நின்றிருந்தபோது, என் ஆலோசகர் உரக்க அறிவித்தார்.



"தற்போது நம் தலைவர் முதலில் குதித்து இந்த சிறப்பு நிகழ்வை தொடங்கி வைப்பார்"



திரும்பி கூட்டத்தைப் பார்த்தேன். ஒரே ஆராவாரம்.கிழக்கு நோக்கி சேவித்துவிட்டு குதித்தேன் .எனக்கு பின்னால் மாட்டிக்கொண்ட மந்தைகள்.அந்த அனுபவம் எப்படி இருந்தது என்று எனக்கு வர்ணிக்கத் தெரியவில்லை.அது குதித்தால் தான் தெரியும்.



குதித்த அத்தனை பேர் வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை.கரண்ட் கம்பியைத் தொட்ட கரடி மாதிரி விதவிதமான சப்தங்கள்தான் வந்தது. இப்படியாக அந்த நிகழ்வு சில பல ரத்த காயங்களோடு இனிதே நிறைவடைந்தது.



இது நடந்த சில நாட்களுக்கு பின்னர் என் ஆலோசகர் என்னை அழைத்தார்.



" தலைவரே! ஒரு பெரும் பொறுப்பு உங்கள் முன் நிற்கிறது"

" முன்னால் நிற்கிறதா?எவ்வளவு தூரத்தில் நிற்கிறது?"

"எச்சில் துப்பினால் எவ்வளவு தூரம் போய் விழுமோ அவ்வளவு தூரத்தில்

நிற்கிறது. வேடிக்கை வேண்டாம்".

"சரி! சொல்லுங்கள்"

"நம் போட்டி மதுபானக் கூடம் இருக்கிறதல்லவா? அவர்களும் பனிக்கரடி

சங்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்"

" ஆரம்பித்துவிட்டு போகட்டுமே! அதனால் என்ன?"

"அதனால் என்னவா? ஒரு தலைவன் பேசும் பேச்சா இது? அதில் நம்மை விட

அதிகம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்திருக்கிறார்களாம்"

" இப்போது என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?"

"நம் சங்கத்தை பிரபலப்படுத்த நாம் முயற்சி செய்ய வேண்டாமா?"

" எப்படி செய்வது?"

"நான் ஒரு உபாயம் வைத்திருக்கிறேன்."

" என்ன உபாயம்?"

" இங்கிருந்து பத்து மைல் தொலைவில் ஒரு சிறிய விமான தளம் இருக்கிறதல்லவா?"

"ஆமாம் இருக்கிறது. ரொம்ப வருடங்களாக அங்கேயேதான் இருக்கிறது."

" அங்கே போய் ஒரு சிறிய கிளைடர் விமானத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறோம்"

"எடுத்துக் கொண்டு..?"

" அப்படியே 12,000 அடி உயரத்துக்கு போய்.."

"போய்..?"

" மிஸொரி நதி இருக்கிறதல்லவா..?"

" இருக்கிறது. அதற்கு என்ன இப்போது..?"

" அதன் மேல் பாராசூட் கட்டிக் கொண்டு நீ மட்டும் குதிக்கிறாய்"

" நான் மட்டுமா?"

" ஆம்"

" நான் மட்டும் ஏன்?"

" ஏனென்றால் நீ...?"

" நான்?"

"தலைவன்"