Wednesday, June 29, 2011

...என்று சொல்லப்பட்டது

48 முறை வாய்தா வாங்கப்பட்ட
அந்த வழக்கின் தீர்ப்பு ஒரு
அமாவாசை நாளன்று கீழ்கோர்ட்டில்
வாசிக்கப்பட்டது.
எதிர்த்து மேல்கோர்ட்டில்
முறையீடு செய்யப்பட்டது.
அங்கேயும் அதே தீர்ப்பு
உறுதி செய்யப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டிலும்
அதே தண்டனை வழங்கப்பட்டது.
ஒரு புகழ் பெற்ற சிறைச்சாலையில்
அவனுக்கு ஒரு இடம் வழங்கப்பட்டது.
கருணை மனு ஒன்று
மேதகு ஜனாதிபதிக்கு
அனுப்பப் பட்டது.
கொஞ்ச நாள் நிலுவையில் இருந்து
அதுவும் நிராகரிக்கப்பட்டது.
தண்டனை நிறைவேற்றும் நாள்
அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
அந்நாளன்று அவனுக்கு
காலையில் குடிக்க பால்
கலக்காத தேநீர் வழங்கப்பட்டது.
தண்டனை நிறைவேறியதும்
பிரேத பரிசோதனை நிகழ்த்தப்பட்டது.
பின் உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டது.

இதே தண்டனை,
வழக்கு பதியப்படாமல்
வாய்தா வாங்கப்படாமல்
தீர்ப்பு வாசிக்கப்படாமல்
கருணை மனு
விண்ணப்பிக்கப்படாமல்
சிறைச்சாலையில் இடம்
வழங்கப்படாமல்
தண்டனை நிறைவேற்றும் நாள்
அறிவிக்கப்படாமல்
ஆற அமர யோசிக்கப்படாமல்
என்னால் ஒரு உயிருக்கு
வழங்கப்பட்டது.

அது கொலை என்று சொல்லப்பட்டது