Friday, May 4, 2012

அமுக்கான்

களக்காடு வேலப்பன் குடும்பச் சண்டை காரணமாக தன் மனைவியை வெட்டிச் சாய்த்து விட்டு இரு குழந்தைகளையும் கிணற்றில் தூக்கிப் போட்டு விட்டு , துரத்தி வந்த ஊர்க்காரர்களிடம் இருந்து தப்பி நெடுந்தூரம் ஓடி வந்து, இனி முடியாது என்ற நிலையில் தன் வேட்டியைக் கொண்டு தூக்குப் போட்டுக் கொண்ட  விட்டத்தின் கீழ் திம்மன் குடி போதையில் படுத்திருந்தான்.


திம்மனுக்கு வயது நற்பதைத் தொட்டுவிட்டது. நல்ல குடிகாரன்.நல்ல வேலைக்காரன்.அருமையானபட்டைச் சாராயம். கொழுத்த இரையை விழுங்கிய மலைப்பாம்பு மாதிரி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.


அவன் மனைவி பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு தாய் வீட்டுக்குப் போயிருந்தாள். வசதியாகப் போயிற்று. தின்னாமல் விட்ட கருவாடு சிதறிக் கிடந்தது. செவ்வெறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்தன.சிலது அவனையும்
மொய்த்துக் கொண்டிருந்தன.கடித்தால் தெரியாத அளவுக்கு நல்ல போதை.அவன் வீடு அது. எத்தனையோ பேர் எவ்வளவோ சொல்லியும் திம்மன் அந்த வீட்டை காலி செய்யவில்லை.


ஒருவன் தூக்குப் போட்டுக் கொண்ட வீட்டிலே பெண்டாட்டி,பிள்ளைகளோடு வாழலாகாது.நல்லதல்ல.கேளப்பா திம்மா!.புத்தி சொன்னவர்கள் அவன் தெளிவாக இருக்கும் போது சொன்னால் ஆயிற்று.போதையில் இருக்கும் போது சொன்னால்?.ஆயிற்றா?.திம்மன் கூலிக்கு வேலை செய்பவன்.சூத்துக் கழுவ தண்ணி இல்லாத ஊரிலே ஆத்துத் தண்ணிக்கு எங்கே
போவது.அடி மாட்டு விலைக்குக் கிடைத்த வீடு.அவன் காலி செய்யவில்லை.


தினமும் வேலை முடிந்ததும் அவன் மனைவி வீட்டுக்குப் போய் விடுவாள். திம்மன் நல்ல சுதி ஏற்றிக் கொண்டு தள்ளாடி நடந்து வருவான். சமையலில் கருவாடு தினமும் உண்டு.சில சமயம் அரை வயிறு உண்பான். அதுவும் மனைவிஅதட்டினால். இல்லையென்றால் ஒரு வாய் இரண்டு வாய்.அவ்வளவுதான்.விட்டத்தின் கீழ் படுத்துக் கொள்வான்.
அங்கே படுத்துக் கொள்வதில் அவனுக்கு ஒரு சுகம்.


மறுநாள் காலையில் அவனால் எழ முடியவில்லை. கை கால்கள் எல்லாம் பத்து பேர் சேர்ந்து உருட்டுக் கட்டையால் அடித்தது போல் வலித்தது.உருண்டான்.தலைகீழாக புரட்டிப் போட்ட ஆமை போல தவித்தான். நா வறண்டது. பக்கத்தில் இருந்த சொம்பை எடுத்து இருந்த மிச்ச நீரை குடித்து பெருமூச்சு விட்டான்.இடது கையை ஊன்றி எழுந்தான். இடறி விழுந்தான்.மறுபடியும் எழுந்தான்.தூணைப் பிடித்துக் கொண்டான்.தலையைச் சாய்த்து பெருமூச்செறிந்தான். வலது கையால் முகத்தை அழுந்தத் துடைத்தான்.கண்களைக் கசக்கினான்.பின் மண்டை வலித்தது.ஜன்னலைத் திறக்க முயன்றான்.கொண்டி மாட்டிக் கொண்டது.தள்ளாடி வந்து வாசற்கதவைத் திறந்தான். பஞ்சு போல மிருதுவான வெயில்.
திண்ணையில் அமர்ந்து சுவரில் சாய்ந்து கொண்டான்.வழியில் போன ஒரு பொடியனிடம் சொல்லி வரக்காப்பி வாங்கிக் குடித்தான். மயக்க்ம் தீர்ந்தபாடில்லை.திண்ணையிலேயே சாய்ந்து விட்டான்.


வெயில் சுள்ளென்றது.எழுந்து கை கால்களை விறைப்பாக்கி கொண்டு பொடக்காளி பக்கம் நடந்தான். கோவணத்தோடு நின்று தண்ணீரை எடுத்து பொட பொடவென்று தலையில் ஊற்றிக் கொண்டான்.தொட்டி தண்ணீர் தீர்ந்ததும் துவட்டிக் கொண்டு  ஜிட்டக்கியின் வீடு நோக்கி நடந்தான்.


ஜிட்டக்கி கஞ்சா போதையில் மிதந்து கொண்டிருந்தாள்.


'ஜிட்டம்மா..பசிக்கிது..'


இரண்டு கம்பு அடையுடன் நேற்றிரவு வைத்த ஆட்டுக்கறிக் குழம்பை சுவைத்து உண்டான்.


'ஏண்டா திம்மா...ஒடம்புக்கு சொகமில்லியா?"

'ஆமா..ஒடம்பெல்லாம் திண்டு திண்டா வலிக்கிது.."

'எளவு அந்த வூட்ட காலி பண்ணியும் தொலயுன்னா கேட்டாத்தானே?'

'இப்ப அதுக்கென்ன..புள்ள குட்டிகளோட நல்லாத்தான இருக்கேன்.."

'அதுக்கில்லடா...வீடு ஒத்தக் கட்டு வீடு..விட்டம் ஒத்த விட்டம்..அதுவும் வேலப்பன் செத்த விட்டம்..அமுக்கான் அமுக்கிப் போடும்டா"

'கத வுடாத ஆத்தா...' - திம்மனுக்கு தூக்கம் கண்ணை சுழற்றியது.இடது கையை தலைக்கு வைத்து திண்ணையில் படுத்துக் கொண்டான்.வயிற்றைப் பிசைந்தது.


'கத இல்ல திம்மா...விட்டத்துல எப்பவுமே அமுக்கான் இருக்கும்டா'- கஞ்சாவை இழுத்தாள்.


'கேளு...ஒரு காலத்துல ஒருத்தன் வீடு கட்ட நெலம் வாங்குனானாம்..அந்த நெலத்துல இருந்த ஒரு புங்க மரத்த வெட்டி விட்டத்துக்கு செதுக்கி வச்சானாம்.அது ஒருத்தன் தூக்கு போட்டு செத்த மரம்.அடிக்கால் நாட்றதுலர்ந்து, கருங்கல் வக்கிறது,செம்மண் பூசுரதுன்னு எல்லாத்தயும் நல்ல நேரத்துலயே செஞ்சானாம்..வீடு கட்ட அறுவது வருஷம் ஆச்சாம்..ஆனா விட்டத்தமட்டும் தப்பா எமகண்டத்துல வெச்சானாம்..அவன் கெட்ட நேரம்..தெரியாமத்தான் வெச்சிருப்பான்..வீடு புகுந்து மொத நா ராத்திரி
விட்டத்துக்கு கீழே பஞ்சு மெத்த போட்டு தூங்கிக்கிட்டு இருந்தானாம்.அவம்பொண்டாட்டி கால அமுக்கி விட்டுக்கிட்டிருந்தா..
அவனும் நல்லா தூங்கிப் போட்டான்..அப்ப ஒரு கனாக் கண்டானாம் ...அதுல ஒரு கொரல் கேட்டுச்சாம் ' அமுக்கவா..தள்ளவா' னு..இவனும் நல்ல தூக்கத்துல பொண்டாட்டி தான் கேக்குறளோனு ' அமுக்குன்னு' சொன்னானாம். விட்டம் இடிஞ்சு ஒரேடியா அமுக்கிப் போட்டுதாம்.அவனும் ரத்தங்கக்கி செத்துப் போனானாம்...தெரியுதாடா திம்மா..எளவு அந்த வூடு ஆகாது திம்மா..இது எங்கம்மா எனக்கு சொன்னது..இப்ப நாஞ்சொல்றேன்...உஞ்சவுரியமப்பா..திம்மா...அடேய் திம்மா..எந்திரிடா'.


உலுக்கினாள். திம்மன் வாயிலிருந்து வழிந்த ரத்தத்தோடு திண்ணையிலிருந்து பொத்தென்று விழுந்தான்.


திம்மனை அமுக்கான் தான் அமுக்கி விட்டதென்று ஊர் பேசிக் கொண்டது. இருந்தாலும் இருக்கலாம் யார் கண்டது?

Sunday, April 22, 2012

தேவதாசியின் நாட்குறிப்புகள் - மறுதலிப்பு

வாயில் குதப்பிய வெற்றிலையோடு வாடிக்கையாளருக்காகக் காத்திருக்கும் என்னிடம் தன் அழுக்கான வலது கையை நீட்டி பசிக்கிறது என்று தன் இடது கையை வயிற்றில் தடவி இரந்து நிற்கும் சிறுமியைக் காணும் போது சுரக்க மறுக்கிறது நான் பெறாத பிள்ளைகளுக்காக மார்பில் தேக்கிய முலைப்பால்.

Saturday, March 31, 2012

கூப்பர்

கனத்து,சிவந்து,பாரமாகிப் போன மார்புகளைக் கொண்ட அப்பெண்மணி, அந்த மதுபானக் கடையின் வடக்கு மூலையில் இடது கையைத் தன் மழமழப்பான கன்னத்தில் ஊன்றிக் கொண்டு, சிற்பிக்கோ, தேர்ந்த ஒவியனுக்கோ, ஊடு பொருளாகக் காட்சி காட்டுவது போல அமர்ந்திருந்தாள்.

இரண்டு வயதுக் குழந்தைக்குப் பிதுக்கி ஊட்டிய தயிர்சாதம் வாயிலிருந்து வழிவதைப் போல கண்ணில் சோகம் வழிந்து கொண்டிருந்தது.

அத்துவானக் காட்டில் காயும் நிலவைப் போல அவள் சோகத்தை யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.அதைப் பற்றி அவள் கவலைப் பட்டதாகவும் தெரியவில்லை.

லாங் ஐலண்ட் காக்டெயிலை மிடறாக விழுங்கிக் கொண்டிருந்தாள்.கையில் மால்பரோ சிகரெட் புகைந்து கொண்டிருந்தது.

கனத்த மார்பு நிறைய சோகம் ததும்பியது போல அடிக்கடி பெருமூச்சு விட்டாள். ஊற்று நீர் போல சோகம் திரும்ப ஊறியது. இடது கையில் எந்த விரலிலும் மோதிரம் இல்லை.தனியாக வசிக்கிறாளோ என்னவோ.ஆண் நண்பர்கள் இருக்கலாம்.

இளைஞன் ஒருவன் அவளுடைய மேசையை நெருங்கினான்.

'நான் இங்கே அமரலாமா?" என்று பக்கத்திலிருந்த நாற்காலியைக் காட்டினான்.
'ஓ! தாராளமாக!"

கணவனிடம் சண்டை போட்டு கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த மனைவி, வீட்டுக்குத் திடீரென வந்த தன் தாயைக் கண்டதும் கண்ணீரை மறைத்துக் கொள்வதைப் போல தன் சோகத்தை மறைக்க முயன்றாள்.

அறிமுகம் செய்து கொண்டார்கள்.

"நீங்கள் தவறாக நினைக்கவில்லையென்றால் ஒன்று கேட்கலாமா?"

'தாராளமாய்க் கேளுங்கள்"

'நீங்கள் பெரும் சோகத்தில் இருப்பது போல் தெரிகிறது'

அடிபம்பை அழுத்தியது போல கொஞ்சம் சோகம் வெளிவந்தது.

'ஆம்'
'அது என்னவென்று தெரிந்து கொள்ளலாமா?"
'கூப்பர் இறந்து விட்டான்'
சிறிய அமைதிக்குப் பிறகு சொன்னான்.
'உங்கள் இழப்புக்கு என் அனுதாபங்கள்'
'நன்றி'
நாய்க்குத் தீனி போடுவது போல அந்த வாத்தைகள் வந்து விழுந்தன.
'எப்படி நடந்தது?"
'ஒரு வாரமாக தீராத வயிற்றுப்போக்கு.மருத்துவரிடம் காட்டியும் பலனில்லை.நேற்று..' மார்புகள் விம்மின.தேற்றினான்.
'கூப்பர் போல சிறந்த நண்பனைப் பார்க்காவே முடியாது.என் மேல் அளவிட முடியாத அன்பு.இந்த உலகில் எனக்கு இருந்தது அவன் மட்டும் தான். இப்போது அவனும் இல்லை.'
குலுங்கி அழ ஆரம்பித்தார்.தேற்றினான்.

'கூப்பரை உங்களுக்கு எத்தனை நாட்களாகத் தெரியும்?"
'கடந்த இரண்டு வருடங்களாக'
அடக்கம் செய்தாகிவிட்டதா என்று கேட்க நினைத்தவன் கேட்கவில்லை.

இரண்டு செய்லர் ஷாட்களுக்கு ஆணை கொடுத்தான்.

'இழப்புகள் இயல்பானது.வருத்தப்பட வேண்டாம்.கடவுள் விதித்தது அவ்வளவுதான்.'

'அதை நினைத்துதான் மனதைத் தேற்றிக் கொள்கிறேன்'
'நன்று!என்னை உங்கள் நண்பனாக ஏற்றுக் கொள்வீர்களா?"
மெலிதாகச் சிரித்தார்.

'அதற்கென்ன தாராளமாக ஏற்றுக் கொள்கிறேன்.உங்கள் அன்புக்கு என் நன்றிகள்'
'மகிழ்ச்சி.நீங்கள் எங்கே பணி புரிகிறீர்கள்'
'நான் ஒரு செவிலி. நீங்கள்?"
'ஒரு பல்பொருள் அங்காடியில் மேலாளராகப் பணி புரிகிறேன்'
'ஓ!ஒரு நிமிடம் இருங்கள்.நான் என் கைகளைக் கழுவிக் கொண்டு வருகிறேன்.சிகரெட் சாம்பலில் என் கைகளை வைத்து விட்டேன்'
'சரி'
ஒரு நிமிடம் கழித்து தன் கனத்த மார்புகள் குலுங்க ஓடி வந்து நாற்காலியை அவனுக்குப் பக்கத்தில் மெலிதாக இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார்.

'உங்களுக்கு மணமாகிவிட்டதா?"

'இல்லை. நான் ஒண்டிக்கட்டைதான்.எந்தப் பெண்ணுக்கும் என்னைப் பிடிப்பதில்லை.ஏனோ தெரியவில்லை.உங்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா?"

'பிடித்திருக்கிறது.நல்ல மனிதர் நீங்கள். உங்களை யாருக்கும் பிடிக்கவில்லை என்பது ஆச்சர்யம்தான்'

'நல்லவனாக இருப்பதால்தானோ என்னவோ'

தன் வலது கையை அவளது இடது கை விரல்களுடன் சேர்த்துக் கொண்டான். விடுவிக்க அவள் முயலவில்லை.

'வேறு ஏதாவது பானத்திற்கு ஆணை கொடுக்கட்டுமா?"
'உங்கள் இஷ்டம்'

பணிப்பெண்ணை அழைத்து இரண்டு யெகமைஸ்டர் ஷாட்களுக்கு ஆணை கொடுத்தான்.

'நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்?"

'ஹோஜன்வில்'
'கெண்டகியா? லிங்கன் பிறந்த ஊர்தானே?"
'ஆம்.நான் கூட அவர் பிறந்த நாளில் தான் பிறந்தேன்'
'பிப்ரவரி பனிரெண்டா?'
'ஆம்.நீங்கள்'
'நான் இந்த ஊர்தான்.லிங்கனுக்கு நாங்கள் மிகவும் கடமைப் பட்டிருக்கிறோம்"
'தெரியும்.'

அவர்களுடைய உதடுகள் அனிச்சையாக முத்தமிட்டுக் கொண்டன.

இரண்டு கோல்ட்ஸ்லாகர் ஷாட்களுக்கு ஆணை கொடுத்தான்.

'உங்கள் வேலை எப்படிப் போகிறது?'
'பல் துலக்குவது போல ஒரே மாதிரியான வேலை. என்ன செய்வது?"
'என் கதையும் அதேதான்.'
நீண்ட பெருமூச்சு விட்டாள்.

அவளுடைய இடது கன்னத்தில் முத்தமிட்டான்.பல நாள் பசித்தவன் தன் தட்டில் இடப்பட்ட அப்பத்தை ஏற்றுக் கொள்வது போல ஏற்றுக் கொண்டாள்.

'இன்றிரவு என்ன செய்கிறீர்கள்?"
'ஒன்றுமில்லை'
'என் வீட்டுக்கு வருகிறீர்களா?"
'ஓ! தாராளமாக"

இறுக்கி அணைத்தபடி மதுபானக் கூடத்தை விட்டு வெளியேறினார்கள்.

அடிக்கடி முத்தமிட்டுக் கொண்டார்கள்.

படுக்கையில் அவளுடைய கனத்த மார்புகளில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு கேட்டான்.

'கூப்பரை பார்க்க ஆசையாக இருக்கிறது.புகைப்படம் ஏதாவது இருக்கிறதா?"

'ஓ!"

தன்னுடைய கைப்பேசியை எடுத்துக் காட்டினாள்.

அவளும் கூப்பரும் இரவில் கட்டிலில் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

கூப்பருக்கு நல்ல பொசுபொசுவென்ற செம்பட்டைத் தலைமுடி. மெலிதான மீசை.கோதுமை நிறம். ஒளிரும் கண்கள். நான்கு கால்கள்.

Tuesday, February 7, 2012

ஆயிரத்தில் ஒருவன்

சட்டை செய்யாமல் சென்றன சில கைகள்.வேண்டாம் என்பது போல் மறுத்தன சில கைகள்.வாங்கிக் கொண்டன சில கைகள்.

அந்த மிகப் பெரிய அலுவலக வளாகத்திற்கு வெளியே இருக்கும் கடைகளுக்கு சாப்பிடுவதற்காயும்,டீ குடித்துவிட்டு புகைப்பதற்காயும் வெளியே வரும் பணியாளர்களை நோக்கி, ' சார்!ப்ளீஸ் சார்' என்றவாறு ' பதினைந்து லட்சம் தனி நபர் கடன்.சுலபத் தவணை.உடனடியாக' என்று அச்சடிக்கப்பட்ட தாளை நீட்டியபடி இருந்தார் அவர்.

பசி எடுத்தது. எதிரே இருந்த டீக் கடைக்குப் போய் ஒரு போண்டா சாப்பிட்டு விட்டு டீ குடித்துவிட்டு வந்து பழைய இடத்திலேயே நின்று கொண்டு தொடர்ந்தார். ' சார்! ப்ளீஸ் சார்"

சட்டை செய்யாமல் சென்றன சில கைகள்.வேண்டாம் என்பது போல் மறுத்தன சில கைகள்.வாங்கிக் கொண்டன சில கைகள்.

செக்யூரிட்டி வந்து சத்தம் போட்டான்.' தும் உதர் ஜாவோ! யஹா கடே ரஹேனே கி ஜரூரத் நஹி ஹே! தும் ஜாவோ' வளாகத்தை ஒட்டி வளர்ந்திருந்த மரங்களின் நிழலில் நின்று கொண்டிருந்தவர், எதிரே இருந்த கடைக்குப் பக்கத்தில் நின்று கொண்டார்.

'யோவ்! கொஞ்சம் தள்ளி நில்லுய்யா" கடைக்காரனின் சத்தத்திற்கு இணங்கி சற்றுத் தள்ளி மண்டையைப் பிளக்கும் வெயிலில் நின்று கொண்டார்.

மதிய நேரம் ஆக ஆக பணியாளர்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினார்கள். ' சார்!ப்ளீஸ் சார்"

சட்டை செய்யாமல் சென்றன சில கைகள்.வேண்டாம் என்பது போல் மறுத்தன சில கைகள்.வாங்கிக் கொண்டன சில கைகள்.

கூட்டம் குறைந்ததும் பசி எடுப்பதை உணரத் தொடங்கினார். பக்கத்துக் கடைக்குப் போய் ஒரு ஆறிப் போன போண்டாவை சாப்பிட்டு , டீ குடித்து விட்டு வந்து வெயிலில் நின்று கொண்டார்.உட்கார அங்கே எதுவுமில்லை.

சுவற்றில் சாய்ந்து கொண்டார்.தாகம் எடுத்த போது கைப்பையில் இருந்த தண்ணீர்ப் போத்தலில் இருந்து கொஞ்சம் தண்ணீரை மிடறாக விழுங்கினார்.

ஒருவன் அவர் கொடுத்த தாளை வாங்கி இரண்டு எட்டு வைப்பதற்குள் கீழே போட்டு விட்டு போனான்.

காற்றில் பறந்த அந்தத் தாளைப் பிடித்து கையில் இருந்த கட்டோடு சேர்த்துக் கொண்டார்.

'தெரியாமத் தூக்கிப் போட்டுட்டுப் போனா பரவால்ல சார்.இஷ்டம் இருந்தா லோன் வாங்கப் போறாங்க.வாங்கி கண்ணுக்கு முன்னாடி போட்டுட்டுப் போனா என்ன சார் அர்த்தம்" என்று பக்கத்தில் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவரிடம் குறைபட்டுக் கொண்டார்.

மாலை வேளை வந்ததும் மிச்சமிருந்த தாள்களை கைப்பையில் போட்டுக் கொண்டு பேருந்து நிறுத்தம் நோக்கி தளர்வாக நடக்க ஆரம்பித்தார்.

அடுத்த நாள் காலை சுமார் ஏழு மணியளவில் அந்த அலுவலக வளாகத்திற்கெதிராகவும், கடைகளுக்கெதிராகவும் வழியெங்கும் சிதறிக் கிடந்த ' தனி நபர் கடன் தாள்களை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள், மற்ற
குப்பைகளோடு பெருக்கி கூடையில் போட்டார்கள்.

சுமார் எட்டு மணியளவில் அவர் வளாகத்திற்கு எதிரே இருந்த கடையில் ஒரு டீயும் போண்டாவும் சாப்பிட்டு விட்டு வந்து இளவெயிலில் நின்று கொண்டார். தன் ' தனி நபர் கடன்' தாள்களுடன்.

Friday, January 20, 2012

தேவதாசியின் நாட்குறிப்புகள் - ஏழைகள் வாழும் வீடு

கருவளையத்தில் இடுங்கிய கண்கள்.
ஒட்டிப் போன கன்னங்கள்.
உலர்ந்து போன உதடுகள்.
துவண்டு போன கழுத்து.
தொங்கிப் போன மார்புகள்.
வற்றிப் போன முலைகள்.
சுருங்கிப் போன வயிறு.
தூர்ந்து போன தொடைகள்.
சலித்துப் போன பெண்மை.
"என் மூலதனம் இதுதான்.
அடிக்காதீர்கள் ஐயா" என்று
எவ்வளவு கதறினாலும்
கேட்பதில்லை காவலர்கள்.
பசித்த வயிறுக்காகவும்,
காயத்துக்கு போட வேண்டிய கட்டுக்காகவும்
உடலெங்கும் பொங்கி வழியும் உஷ்ணத்தோடும்,
சொருகும் கண்களோடும்,
சொல்ல முடியாத வலியோடும்
கட்டிலில் காத்திருக்கும் என் மேல்
படரும் வாடிக்கையாளர்
கிழிந்து ரத்தம் தோய்ந்த என்
உதடுகளின் மீது தர முனையும்
முத்தத்தைத் தவிர்க்க
என் முகத்தைத் திருப்பி அவர் முகத்தை
என் மார்போடு அணைத்துக் கொள்கிறேன் இதமாக.
அவரோ முயங்குகிறார் மூர்க்கமாக.

Tuesday, December 27, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - காகங்கள்

யாரோ வருவார்.
யாரோ போவார்.
வருவதும் தெரியாது.
போவதும் தெரியாது.
பறக்கும் காக்கை கரையாதென்று
பல்லு போன கிழவி ஒருத்தி
சொன்னதாக ஞாபகம்

Friday, December 23, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - தேவனின் வருகை

இதோ வருகிறேன்
ஐந்து நிமிடத்திலென்று
விட்டுப் போனார் பேருந்து நிலையத்தில்.
நாட்கள் கழிந்தன.
நபர்களும் வந்தார்கள்.
அவரும் வரவில்லை.
அவர் சொன்ன
ஐந்து நிமிடமும் வரவில்லை.