Thursday, November 24, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் -சிறைச்சாலை

இது கனவுக் கோட்டை.
கனவில் கட்டிய கோட்டை.
கனவு காணத் தெரியாதவர்களால்
உள்ளே நுழைய முடியாத கோட்டை.
ஆதி காலத்திலிருந்து
கனவு காணத் தெரிந்தவர்களால்
கட்டப்பட்ட கோட்டை.
அப்படிக் கட்டியவர்களையே
தன்னுள் சிறை வைத்திருக்கும் கோட்டை

Wednesday, November 23, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - இன்மை

என்னிடம்
கூச்சத்தோடு வந்தவர்
பலர்.
என்னைக்
கூச்சப்பட வைத்தவரென்றொருவருமிலர்.

Tuesday, November 22, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - பிரயத்தனம்

தலை நிறையப் பூச்சூடி
ஒவ்வாத சரிகைப் புடவையணிந்து
இடையை ஒடித்து
உடலை வளைத்து
உதட்டைக் கடித்து
நாக்கைச் சுளித்து
மார்பை விலக்கி
கண்களில் பொய் போதை காட்டி.
கண்ணகியாவதற்கு
காலமெல்லாம்
கதவுக்குப் பின்னாலிருந்தால்
போதுமென்பது நிதர்சனம்.
மாதவியாவதற்குத்தான்
எத்தனை பிரயத்தனம்.

Monday, November 21, 2011

கிளிஞ்சல்கள்

யாருமே நிறைய நேரம் இருக்க விரும்பாத இடம் அது.மிக அழுத்தமான இறுக்கம்
அங்கு நிலவியது. என்னுடைய முறை எப்போது வரும் என்று தெரியவில்லை. அரை மணி நேரம் ஆகலாம்.அதற்கு மேலும் ஆகலாம்.உள்ளே இருந்த காற்று சுத்தமாக இருந்தாலும், சுதந்திரமாக இல்லை. பத்து பேர் அமர்ந்திருந்தோம்.

ஒரு தம்பதி. பார்ப்பதற்கு வடநாட்டவர்கள் போல் தெரிந்தார்கள்.வடநாட்டவர்கள்
என்று பொத்தாம் பொதுவாக சொல்லி விட்டாலும் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தீர்மானமாய் என்னால் கணிக்க முடியவில்லை.

மனைவி மிகவும் சோர்ந்திருந்தார். கணவன் அதற்கு இணையாக சோர்ந்திருந்தான்.குழந்தை மட்டும் கார்ப்பெட்டில் உட்கார்ந்து கொண்டு , வெல்வெட் துணிப் பொட்டலத்தை அவிழ்க்க முயன்று கொண்டிருந்தது. அம்மாவையும் அப்பாவையும் அடிக்கடி அவர்களின் கால்களைப் பிறாண்டி துணிப் பொட்டலத்தை அவிழ்த்துத் தருமாறு சைகை செய்தது.
அவர்கள் அதைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

'மிஸ்டர். நாகராஜன்'

எனக்குப் பக்கத்தில் இருந்த வயதானவர் எழுந்தார்.

'நேராப் போயி ரைட்ல ஃபஸ்ட் லேப்'

'ரிப்போர்ட் எப்ப கெடைக்கும்.' - கரகரப்பான குரலில் கேட்டார்.

'ஈவ்னிங் சிக்ஸ் ஓ க்ளாக் ஆகும் சார்.நாளைக்கி காலையில கலெக்ட் பண்ணிக்குங்க.இல்லன்ன போய்ட்டு சாயந்திரம் வாங்க'

தளர் நடை பெரியவர் மறைந்தார்.

நகரத்தின் மிகப் பெரிய மருத்துவமனை ஒன்றின் கிளை அது.பரிசோதனைகளுக்காக மட்டுமே அந்தக் கிளை.மேலிருந்து கீழ் வரை அத்தனையையும் பரிசோதிப்பார்கள்.

குழந்தை ஆக மட்டும் முயன்று பார்த்தது.முடியவில்லை.

என்னைப் பார்த்தது.

'வா' என்று சைகை செய்தேன். தம்பதிகள் என்னைப் பார்த்து விட்டு கண்ணை
மூடிக் கொண்டார்கள்.

'என்ன?" என்று சைகை காட்டினேன்.

எதோ ஒரு மொழியில் எதோ ஒன்று சொன்னது.

பொட்டலத்தைப் பிரித்துக் கொடுத்தேன். உள்ளே வெண்மையான கிளிஞ்சல்கள்.

அதன் மொழியில் எதோ சொல்லிக் கொண்டே ஒவ்வொரு கிளிஞ்சலாக எடுத்து
என்னுடைய கைப்பையில் போட்டது. ஒன் டூ த்ரீ ஆக இருக்கலாம்.

எல்லாக் கிளிஞ்சல்களையும் என்னுடைய பையில் போட்டதும், கீழே உட்கார்ந்து
கொண்டு வெல்வெட் துணியை விரித்து வைத்துக் கொண்டது.

உன்னுடைய பையில் இருப்பதை எடுத்து என்னுடைய துணியில் போடு என்று
சைகை செய்தபடியே எதோ சொன்னது.

இந்த ஆட்டம் ஒரு கால் மணி நேரத்திற்கு மேலே நீடித்தது.

'மிஸ்டர்.திருக்குமரன்'

நான் எழுந்தேன்.

'ஃபஸ்ட் ரைட். லாஸ்ட் லேப் சார். ரிப்போட்ட டைரெக்டா நாங்க உங்க ஆஃபீஸுக்கு அனுப்பிடுவோம். நோ நீட் டூ வெய்ட்'

எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்து சேர்ந்த போது மணி மதியம் மூன்று ஆகிவிட்டிருந்தது.மிதமான வெயில். தூரத்தில் கரையும் காகங்கள். என்னுடைய கைப்பையில் இருந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வைத்தேன்.

அந்தக் குழந்தையின் அத்தனைக் கிளிஞ்சல்களும் என்னுடைய பையில் இருந்தன.

நான் சென்ற பிறகு அந்தக் குழந்தை அவளது அம்மா அல்லது அப்பாவின் காலைப் பிறாண்டிக் கொண்டிருந்திருக்கும். அவர்கள் சோர்வில் கண் மூடி சாய்ந்திருப்பார்கள். வழக்கம் போல.

Sunday, November 20, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - தற்கொலை

தவறாமல் கேட்கிறார்கள்
'என்னை மணம் புரிந்து கொள்வாயா?" என்று.
தவறாமல் சொல்கிறேன்
"நீச்சல் தெரிந்தவன்
நீரில் மூழ்கித் தற்கொலை செய்து
கொள்ள முடியாது என்று"

எரிபரந்தெடுத்தல் - 1

பாக்யம்

'அம்மா' என்று கத்தியபடியே உள்ளே வந்தான் மாதவன்.

அடுப்படியில் துருத்து ஊதிக் கொண்டிருந்த பாக்யம் இருமியபடியே கேட்டாள். ' என்னடா?"

'அம்மா. பாவு இல்லியாம்'

'ஏனாம். ஏக்கனவே ஒரு வாரமா தறி சும்மா கெடக்கு. எப்ப வருமாம்?"

'தெரியலம்மா. மொதலாளி எதுவுஞ்சொல்லல.ஒரு எட்டு சேல மொழ பாவு வந்துதாம்.எண்ணெக்காரச் செட்டியாருக்கு குடுத்துட்டாராம்'

'யாரு நம்ம பங்களா மேடு எண்ணெக்காரச் செட்டியாருக்கா?"

'ஆமா.அவுரு ரெண்டு வாரமா சும்மாதான் இருக்காராம்'

'சரி. கஞ்சி சோறு வடிச்சு வச்சிருக்கேன்.குடிச்சுட்டு போ. பள்ளிக்கோடத்துக்கு நேரமாச்சு.மறக்காம வட்டில எடுத்துகிட்டு போடா'

மாதவன் தயங்கினான்.

'அம்மா.மத்தியான சத்துணவு சாப்பிட்டா வகுத்த வலிக்குதும்மா.சாப்பிடவே முடியலம்மா'

பாக்யம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

'அதுக்கு என்ன இப்ப. சுடுசோறு வடிக்கச் சொல்றியா.ஒரு வாரஞ்சாப்டா எல்லாஞ்சரியாப் போகும்"

வார்த்தைகள் குபுக்கென்று பொங்கும் ரத்தம் போல இளஞ்சூடாக வெளிவந்தன.

மாதவன் மெதுவாக அடுப்படிக்குச் சென்றான்.

சிறிது நேரம் கழித்து மூலைகள் ஓட்டையாகிப் போன ஒயர் கூடையில் கிழிந்த நோட்டு புத்தகங்களையும் வட்டிலையும் போட்டுக் கொண்டு கிளம்பினான். போதிய இடமில்லாததால் வட்டில் பிதுங்கியது.

பாக்யம் விளக்குமாறை எடுத்து தறி,ராட்டை ஆகியவற்றை சுத்தம் செய்யத் தொடங்கினாள்.ஒரு நாள் விட்டால் கூட நூலாம்படை அப்பிக் கொள்கிறது.மூட்டைப் பூச்சிகளின் தொந்தரவு வேறு.எத்தனை தடவை சீமெண்ணெய் அடித்தாலும் போகிறதில்லை.

முன் தினம் பெய்த மழையில் வீடு ஓதம் எடுத்து விட்டது. கால் வைத்தால் பிசுபிசுவென்று கோழையை மிதித்த மாதிரி சவசவக்கிறது.

சுத்தம் செய்து விட்டு கொஞ்சம் போல் பல்பொடியை போட்டுக் கொண்டு பொடக்காளியில் நின்று பல் விளக்க ஆரம்பித்தாள்.

எதிர் வீட்டு காந்தாமணி வீட்டுக்குள் வந்து குரல் கொடுத்தாள்.

'பாக்யா!"

'வாயில் இருந்த எச்சிலைத் துப்பினாள்.

'என்னா காந்தா?"

'டீ! ஒம்புருஷன் ஆடு வெட்ற கொட்டாயிக்கு பக்கத்துல இருக்கிற டிச்சியில வுழுந்து கெடக்குறாண்டி" பக்கத்தில் வந்து மெல்லிய குரலில் சொன்னாள்.

ஒரு வினாடி யோசித்தாள்.மறுகணம் கையில் இருந்த பல்பொடியைக் கொட்டி விட்டு சேலையைத் தூக்கி இடுப்பில் சொருகிக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் வந்தாள்.

'கண்டாரோழிப் பையா! குடிச்சி ஊட்டக் கெடுக்குறதுமில்லாம மானத்த வேற வாங்குறியா அவுசேரிக்கு பொறந்தவனே.வர்றேன் இருடா தாயோளி" என்று கத்தியபடியே தெருவில் ஓட்டமும் நடையுமாக நடந்தாள்.

சத்தம் கேட்டு வெளியே வந்த பூரணியும், காந்தாமணியும் பாக்யத்தை இழுத்துப் பிடித்தார்கள்.

'கத்தாதடீ.போயி அவனத் தூக்கிட்டு வா...கத்தி ஊரக் கூட்டாதடி'

'நீ விடுக்கா. பொழுது விடிஞ்சா இந்த புண்டவாயனுக்கு வேற வேலப்புண்ட இல்ல.ஊருல நாலு பேரு பாத்தா பாத்துட்டு போட்டுமே. எங்க பொழப்பு கொடி கட்டி பறக்குது பாரு இப்ப அரக் கம்பத்துல பறக்கறதுக்கு.பையனுக்கு ஒரு வாயி சோறு நல்ல சோறு போட முடியல. வகுத்த வலிக்குதுங்குறான். இவனுக்கு
எதுக்கு பொண்டாட்டி, புள்ளைங்க. சுன்னி மொழ நீளம் இருக்குறவனெல்லாம் ஆம்பளையா? த்தூ..அவுசேரிக்குப் பொறந்த பசங்க..இவனச் சொல்லி என்ன ..இவனுக்கு கட்டி வச்சாம்பாரு எங்கப்பன் ஊரக்கெடுத்த தாயோளி அவஞ்சுன்னி மேல எட்டி எட்டி மிதிச்சா சரியாப் போகும்..தாயோளிப் பசங்க..'

'பாக்யா! கத்தாம போயி அவனத் தூக்கிட்டு வா சாமி. அப்புறமா பேசிக்கலாம். போம்மா".

மொபெட்டில் வந்த ஈஸ்மூஸ் வாத்தியார் ஓரமாக நிறுத்தி விட்டு வந்து பாக்யத்தின் தோளைத் தொட்டு உலுக்கித் தள்ளி விட்டார்.

'என்னத்த பேசறது வாத்தியாரே..எத்தன பஞ்சாயத்து பண்ரது..ஒரு நா சும்மா கெடக்குறான்...அடுத்த நா கெளம்பிர்ரான்..என்னப் பாரு ..எஞ்சுன்னியப் பாருன்னு..இன்னிக்கு டிச்சியில விழுந்து கெடக்குறானாம்'

பாக்யம் உடைந்து அழுதபடியே ஆடு வெட்டும் கொட்டகை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

Saturday, November 19, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - தெருநாய்கள்

எச்சிலை தனில் எறியும் சோற்றுக்கும்
மஜ்ஜையில்லாத எலும்புத் துண்டுகளுக்கும்
உமிழ்நீர் வடிய
தொங்கும் நாக்கோடு
என் வீட்டுக்கு வெளியே
காத்திருக்கும் தெருநாய்கள்
வீட்டுக்குள் மட்டும் வருவதில்லை
எப்படி அழைத்தாலும்.

Tuesday, November 8, 2011

வைகுண்டத்தின் இரும்புக் கதவுகள்

'அண்ணே ! எப்பண்ணே போடும்'
'டேய்! இதென்ன பஸ்ஸா, ரயிலா.நேரத்துக்கு வாரதுக்கு..போடும்போது எடுத்துட்டு போடா"

சரிதான். மாடு எப்போது சாணி போடும் என்று யாருக்குத் தெரியும்.

அதிகாலை நான்கு மணிக்கு வீடு வழிக்க சாணி எடுக்க வந்து மாட்டின் ஆசன வாயை பார்த்துக் கொண்டிருக்கும் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்.எனக்குக் கிடைத்தது அன்று.

நான் தூங்குவது போல் நடித்து நடித்துப் பார்த்தேன். அம்மா விடவில்லை.
கடைசியில் பலம் கொண்ட மட்டும் என் போர்வையை உருவினாள்.

அதென்ன பாஞ்சாலியின் புடவையா உருவ உருவ வந்து கொண்டே இருப்பதற்கு.
ஒரே உருவலில் வந்து விட்டது.

எழுப்பித் துரத்தி விட்டாள். காப்பி கேட்டேன். வந்து குடிச்சுக்கோ என்று விட்டாள்.

முன் தினம் இரவு குடித்தது,உண்டது எல்லாம் எப்போது வேண்டுமானாலும்
வாய் வழியே வரத் தயாராக இருந்தது.

அம்மாவுக்கு சாணி வழிப்பது என்பது ஒரு சடங்கல்ல. அதுவும் சனிக்கிழமை
வழித்தே தீர வேண்டும்.

அதுவும் அன்று புரட்டாசி முதல் நாள்.சனிக்கிழமை. முதல் நாளே சனிக்கிழமை.
போதாதா?

மாட்டுக்கு அருகில் போய் வயிற்றைத் தடவிக் கொடுத்தேன். வைக்கோலை
அள்ளியெடுத்து வாய்க்கருகில் காட்டினேன். தண்ணீர் காட்டினேன்.
எதையும் சட்டை செய்யவில்லை.

'நான் போட்டு விடுவேன்.நீயும் எடுத்துக் கொண்டு போய் விடுவாய். அப்படித்தானே அற்பனே?" என்பது போல் நின்றது.

கடைசியில் மனமிறங்கி போட்டது ஐந்தரை மணிக்கு.

காப்பி கேட்டேன்.

'குளிச்சுட்டு வந்து குடி'.

'சரி. சுடு தண்ணி வச்சியா?"

'வெறகில்ல..ஒரு மயிரில்ல..ஆத்து நொம்ப தண்ணி போகுது...போ'

அதிகாலை நாலு மணிக்கு நான் எழுந்ததேயில்லை. இப்போது குளியல் ஆறு மணிக்கு.

ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு ஆறை ஒரு அரை மணி நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு குதித்தேன்.

வெடவெடக்கும் உடம்போடு வீட்டுக்கு வந்தேன்.

வாசலில் அம்மா வாயெல்லாம் பல்லாக கையில் வெண்கலச் செம்போடு நின்றிருந்தாள்.

பால்காரனுக்காக நிற்கிறாளா ?. இல்லையே..பால் எவர்சில்வர் பாத்திரத்தில் தானே வாங்குவாள்.

' டேய்..ராஜா..போய் கோமியம் கொஞ்சம் புடிச்சுட்டு வந்திருப்பா?"

'கோமியமா..அது எதுக்கு'

'கெழவி செத்த தீட்டு நேத்துதான் முடிஞ்சுருக்கில்லியா..அதுக்கு தான்..தெளிச்சா நல்லதாம்'

'ஆரு சொன்னா'

'நம்ம பூசாரிதான்'

'அடேய் பூசாரி' என்று கலைஞரின் பராசக்தி வசனம் வாயிலிருந்து பீறிட்டுக் கிளம்பியது.அடக்கிக் கொண்டு கிளம்பினேன்.

இந்த முறை மாட்டை நான் தாஜா செய்யவில்லை.

அது ஊற்றும் போது சரியாக கவனித்துப் பிடித்தால் போதும்.போனால் போனது தானே.அடுத்த தடவை ஊற்றும் வரை அல்லவா காத்திருக்க வேண்டும்?.

அந்த நேரத்தில் மாடு என்பது கட்டற்ற பெருவெளியாகவும், சாணி என்பது எங்கும் நிறைந்திருக்கும் பரம் பொருளாகவும், கோமியம் என்பது போனால் திரும்ப வராத காலமாகவும் எனக்குத் தோன்றியது.

ஒருவழியாக மனமிறங்கி ஊற்றியது எட்டு மணிக்கு.

வீட்டுக்குள் நுழையும் போதே இட்லி அவிக்கும் மணமும், தேங்காய்ச் சட்னியில் தாளித்துக் கொட்டும் மணமும் நாக்கில் தட தட வென்று நீர் வரச் செய்தது.

இரண்டு இட்லிகளை எடுத்துப் போட்டுக் கொண்டு கொஞ்சம் தேங்காய்ச் சட்னியை ஊற்றி முதல் விள்ளலைத் தோய்த்து வாயில் இறக்கப் போகும் போது தங்கை பார்த்து விட்டுக் கத்தினாள்.

'அம்மா! இங்க வந்து பாரேன்'

நான் வாய்க்கு கொண்டு போனதை அப்படியே வைத்துக் கொண்டு நின்றேன்.

'அடேய்' என்று பலத்த சத்தத்துடன் அம்மா புயல் வேகத்தில் வந்து தட்டைப் பிடுங்கினாள்.

எனக்கு கண்ணில் நீர் வரும் போலிருந்தது.

'என்னம்மா?"

'நல்ல நாள் அதுமா..சாமி கும்பிடாம என்னடா வகுத்துக்கு வேண்டிக் கெடக்கு'

கையில் தேங்காய்ப் பழத்தட்டுடன் வீதியில் இறங்கி நடந்தேன்.

நெற்றியில் நாமம். வயிற்றில் பசி. வாழைத்தோட்டத்தில் எழுந்தருளியிருக்கும்
'கோவிந்தசாமி திருக்கோவிலுக்கு'

இருபது நிமிட நடை.

அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசை நின்றிருந்தது. கோவிந்தசாமியை தரிசிக்க.
*********************************

இவருக்கும் எனக்கும் ஒரு 'நெருங்கிய' தொடர்பு உண்டு. இவருடைய பெயர்தான் என்னுடைய பெயரும்

இந்தப் பேரை வைத்திருப்பவன் பள்ளியிலும், கல்லூரியிலும் என்ன பாடு படுவான் என்பது யாரும் அறியாததல்ல.

அதனால் இவர் மேல் நான் கட்டற்ற 'பக்தி' வைத்திருந்தேன்.

இவர் சுற்று வட்டாரத்தில் மிகுந்த பிரசித்தி பெற்றவர். குடியானவர்கள் இவரைக் கேட்காமல் எதுவும் பயிரிட மாட்டார்கள்.

கோயில் என்னமோ மிகச் சிறியதுதான். முப்பது பேருக்கு மேல் நிற்க முடியாது.சிலையும் சிறியது தான்.

அதனாலென்ன மூர்த்தி சிறிதெனினும்.கீர்த்தி பெரிதல்லவா?

கோவிலிலிருந்து கொஞ்ச தூரம் வரை தட்டி கட்டி ஒழுங்கு படுத்தியிருந்தார்கள்.
அதற்கப்புறம் வரிசை தெருவில் புரளும் குடிகாரனைப் போல் ஒழுங்கின்றி வளைந்து கிடந்தது.

போய் நின்று கொண்டேன்.

'நாமதேஸ்ய' கிட்ணன் தான் பூசாரி. அவருக்கு இந்த அடைமொழி வந்தது ஒன்றும் பெரிய சுவாரசியமான விஷயமில்லை.

அர்ச்சனை செய்யச் சொல்லி யாராவது தேங்காய்ப் பழத்தட்டை நீட்டினால் பேரைக் கேட்டுக் கொண்டு பேருக்குப் பின்னால் 'நாமதேஸ்ய' என்று விடுவார். அதோடு சரி.அர்ச்சனை முடிந்தது.

ஆரஞ்சு நிறத்தில் பிரசாதம். கொஞ்சம் துளசித் தண்ணீர். கூம்பு வடிவ வெண்கல மணியினால் தலையில் ஒரு அழுத்து.அவ்வளவுதான்.

எனக்கு முன்னால் நின்றிருந்தவர் யாரென்று முகம் பார்க்காமலே தெரிந்தது. 'கள்ளபார்ட்' ரங்கசாமிக் கவுண்டர்.அவர் தலைக்கு விளக்கெண்ணையும், வேப்பெண்ணையும் கலந்த கலவையைப் பூசுவார்.
பெண்களின் கூந்தலுக்கு மணமுண்டோ இல்லையோ..இவர் மண்டைக்கு உண்டு பிரத்யேக மணம்.

எனக்கு பின்னால் ராஜாத்தி. சரிகைப் புடவை கட்டி வந்திருந்தாள். படித்துறை ஆலமரத்தையும்,இவளையும் பத்து பேர் சேர்ந்தாலும் கட்டிப் பிடிக்க முடியாது என்கிற சொலவடை எங்கள் கிராமத்தில் புழக்கத்தில் உண்டு.

வெள்ளாட்டை முழுங்கிய மலைப் பாம்பு மாதிரி 'புஸ்..புஸ்ஸென்று மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.

வரிசை நகர்வது போல் தெரியவில்லை.சிகரெட்டுப் புகையும், முன் தினம் குடித்த குடியும் பாதியில் போன தூக்கமும் வயிற்றில் ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தன.

மணி பத்தாகி விட்டது. வெயில் ஏவுகணை மாதிரி மண்டையில் இறங்கிக் கொண்டிருந்தது.

வயிறு முழுவதும் புகை நிரம்பியது மாதிரி ஒரு உணர்வு. தண்ணீர் கேட்டேன். கூட்டத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த ஒருவர் கொண்டு வந்து கொடுத்தார்.குடித்தேன்.ஏன் குடித்தேன் என்றாகி விட்டது.கிணற்று நீர்.

தாகம் அதிகமாகிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து பாதி வரிசைக்கு வந்து விட்டேன். இதற்கிடையில் ஒரு சிறு ஹாஸ்ய நிகழ்வு ஒன்று நடந்தது.

'மாயாபஜார்' முத்துசாமி செட்டியார் பக்தி மிகுதியில் கையை உயர்த்திக் கும்பிட்டுக் கொண்டே கோவிலை விட்டு வெளியே வந்தார். அவர் வரும்போது அவருடைய வேட்டியின் நுனியை யாரோ அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள். அவர் கோவிலை விட்டு வெளியே வந்த பின் இடுப்பில் வேட்டி இல்லை.

இதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் நான் இல்லை.

போதாததற்கு பக்கத்து கரும்புத் தோட்டத்தில் கரும்பு வெட்டி முடித்தாகி விட்டதால் அடிக் கரும்புக்கு தீ வைத்து விட்டார்கள். எப்போதும் என் பக்கம் வீசாத காற்று அன்று மிகச் சரியாக என் பக்கம் வீச, புகையில் மூச்சு முட்டியது.

மணி பன்னிரெண்டு ஆகி விட்டது.

பூசாரி திரைச்சீலையை இழுத்து மூடினான். உச்சி கால பூஜையாம்.
அரை மணி நேரம் ஆகும் என்றார்கள். என்னால் முடியவில்லை.

மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.'

'கோவிந்தசாமி!!! உன்னை மற்றொரு நாள் சாவகாசமாக பார்க்கிறேன். இன்று என்னால் முடியவில்லை'

தேங்காய்ப் பழத்தட்டை கையில் இறுகப் பிடித்துக் கொண்டு அப்படியே ராஜாத்தியின் மேல் சாய்ந்தேன்.

'தம்பி மயக்க்ம் போட்டுட்டுது' என்று பெரிதாக அலறினாள்.

என்னை அப்படியே அலேக்காகத் தூக்கி தட்டியை விட்டு வெளியே கொண்டு வந்தார்கள்.
********************************************
பொன்னுசாமி கவுண்டரின் தோட்டத்தில் இருந்த கிணற்றடியில் உட்கார்ந்து கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டேன்.

தேங்காயை பக்கத்திலிருந்த பெரிய கல்லில் உடைத்து நீரைக் குடித்தேன்.
அமிர்தமாக இருந்தது.

வேலியோரம் இருந்த துளசிச் செடியிலிருந்து கொத்தாக இலைகளைப் பறித்துப் போட்டேன்.

வீட்டுக்குத் திரும்பும் வழியில் நாடார் கடையில் ஜிலேபி பவுடரை வாங்கி தேங்காயில் கொட்டி விட்டு நானும் கொஞ்சம் இட்டுக் கொண்டேன்.

வீடு வந்து சேர்ந்த போது மணி ஒன்று.

அம்மா பயபக்தியோடு வாங்கி பூஜையறையில் வைத்தாள்.

அன்று மதியச் சாப்பாடு பிரமாதமாக இருந்தது. சாப்பிட்டு விட்டு சொம்பு நிறையத் தண்ணீர் குடித்தேன். வயிற்றிலிருந்த புகை மூட்டம் விலகி தெளிவான பருவ நிலை நிலவியது.

'வந்துட்டானா?" என்றபடியே வீட்டுக்கு வந்த அப்பா பூஜையறைக்குப் போய் பயபக்தியோடு ஜிலேபி பவுடரை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டார்.

இப்படியாக முற்பகலில் அம்மா சொன்னாள் என்று கோவிந்தசாமிக்காக போட்ட நாமத்தை பிற்பகலில் அம்மாவுக்கும், கோவிந்தசாமிக்கும் சேர்த்துப் போட்ட திருப்தியில், படுக்கையில் சாய்ந்து கண்ணை மூடினேன்.

வைகுந்தத்தின் இரும்புக் கதவுகளை டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ற பலத்த சத்தத்துடன் யாரோ எனக்காக திறக்கும் சத்தம் என் மனச்செவியில் தெளிவாகக் கேட்டது.

Friday, November 4, 2011

பல் விளக்கிக் கொண்டிருந்த ஜப்பானியரிடம் போய் பைசாசா நகரத்திற்கு வழி கேட்டவர்

இகுஷிமோ காகயாமா ஜப்பானின் ஏன் உலகம் கண்ட மாபெரும் கவி ஆளுமை என்று நான் சொல்ல மாட்டேன்.ஏனென்றால் அவரே அப்படி சொல்லிக் கொண்டதில்லை.ஆனால் நல்ல சிந்தனையாளர். அவருடைய மண்டையில் மயிரில்லாததற்கும் இதற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறதா என்று என்னைக் கேட்காதீர்கள். அவருடைய சிந்தனைகள் எப்போது உதிக்கும்,எப்போது ஒளி விடும் என்று தீர்க்கமாய்ச் சொல்ல முடியாது.

அவரைச் சுற்றி எப்போதும் இளைஞர் கூட்டம் இருக்கும்.அவரிடமிருந்து சிதறும் சிந்தனைகளை சொட்டு பாக்கியில்லாது பிடித்து பானைகளை நிரப்பி விடுவார்கள்.அவர் சிந்தனை செய்யும் பாங்கு பரிணாம வளர்ச்சி பெற்று வந்தது. முதலில் விட்டத்தைப் பார்த்தபடி சிந்தித்துக் கொண்டிருந்தவர், வேதாளம் போல் மரத்தில் ஏறி சிந்தனை செய்ய ஆரம்பித்தார். இது ஒரு கட்டத்தில் விபரீதத்தில் முடிந்தது.

அது என்னவென்றால்,ஒரு அஷ்டமி தினத்தன்று காலையில் எழுந்து பல் விளக்க ஆரம்பித்தவர் சிந்தனை வயப்பட்டார். அந்த சிந்தனை வயம் சற்று நீண்டதில் முன்பகல் வந்து விட்டது.கை பற்தூரிகையை ( மொழி'பெயர்'ப்பு) இடதும், வலதுமாக ஆட்டிக் கொண்டேயிருந்தது.சீடர்கள் அவரது முகத்தைப் பார்த்தபடி, எதாவது சொல்வாரென்று உட்கார்ந்திருந்தார்கள்.ஒரு வழியாக மாலை ஆறு மணிக்கு சிந்தனை வயத்திலிருந்து விடுபட்டார்.

அன்றிலிருந்து அவருக்கு வாயில் பற்தூரிகையை வைத்தால்தான் சிந்தனைக் குதிரைகள் ஓடும் என்றானது. அவரது சிந்தனைகளைக் குறிப்பெடுக்க சீடர்கள் மிகுந்த சிரமப்பட்டார்கள்.வாயிலிருந்து பொங்கி வரும் நுரையினூடே அவர் சொல்லும் சிந்தனைக் குறிப்புகள் அவர் போகும் வழியெங்கும் சிதறிக் கிடக்கும்.

அன்றொரு நாள்.

ஒரு கிழவன் தள்ளாடியபடி அவருடைய வீட்டை நோக்கி வந்தான். பார்த்தால் நீண்ட தூரம் பிரயாணம் செய்து வந்தவன் போல் அத்தனை களைப்பு. வந்தவன் வீட்டு வாசலிலேயே மயங்கி பொத்தென்று விழுந்தான்.

சீடர்கள் அவனுக்கு மயக்கம் தெளிவித்து உண்ண உணவு கொடுத்தார்கள்.
பற்தூரிகை இடதும் வலதுமாக ஆட நம் சிந்தனைச் சிற்பி அவரிடம் பேசலானார்.

'எங்கிருந்து வருகிறீர்?"
கிழவனுக்குத் தலை சுற்றியது.
'நீங்கள் என்ன சொல்கிறீர்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.வாயிலிருந்து
அதை எடுத்து விட்டு பேசுங்கள்.'

சிந்தனைச் சிற்பியின் முகம் ஜிவ்வென்று சிவந்தது.

தன் சீடன் ஒருவனைப் பார்த்து சைகை செய்ய அவன் அதே கேள்வியைக் கேட்டான்.

'நான் கிகுஜிரோ மலையிலிருந்து வருகிறேன்'
'அந்த மாதிரி ஒரு மலையை நாங்கள் கேள்விப்பட்டதேயில்லையே.அது எங்கிருக்கிறது?"
'எனக்கு சரியாகத் தெரியாது. அங்கிருந்து நான் கிளம்பி இன்றோடு வருடம் ஐம்பது ஆகிறது.என்னுடைய இருபதாவது வயதில் நான் புறப்பட்டேன்'
'இவ்வளவு வருடங்களாக ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்தீர்களா?"
'ஆம். நான் பைசாசா நகரத்திற்கு போவதற்கு வேண்டிதான் கிளம்பினேன்.
கடைசியில் எப்படியோ கண்டுபிடித்து விட்டேன். இது பைசாசா நகரம் தானே?"
'இல்லை. இது புகுஷிமோ நகரம். பைசாசா நகரத்தைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டதில்லை'

கிழவன் அழ ஆரம்பித்தான்.
'கடவுளே! என் உயிர் பிரிவதற்குள்ளாகவேனும் அந்த நகரத்திற்குப் போய் விடவேண்டும்.கருணை காட்டு'

'கிழவரே! அழாதீரும். அப்படி அந்த நகரத்தில் என்ன சிறப்பு?. அங்கு போவதற்காக உங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழித்திருக்கிறீர்கள்."

'அந்த நகரத்தில் ஒரே ஒரு வீடு மட்டுமே உண்டு.அந்த வீட்டில் ஆட்களும் கிடையாது.அந்த வீட்டிற்கு சென்றால் நான் யார் என்பதையும், வாழ்க்கை என்றால் என்ன என்பதையும் தெரிந்து கொள்வேன். அதற்காகத்தான் நான் வீட்டை விட்டுக் கிளம்பினேன்.என்னிடம் ஒரு வரைபடம் இருந்தது. அதன்படி நான் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் நடந்தேன்.ஒரு நாள் நான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது என்னுடைய கழுதை அதைத் தின்று விட்டது.
அதற்குப் பிறகு நான் ஊர் ஊராக அலைந்தேன். யாருக்கும் பைசாசா
நகரத்தைப் பற்றித் தெரியவில்லை. இதோ பாருங்கள் உங்களுக்கும் தெரியவில்லை.'

'எனக்குத் தெரியும்'

குரல் வந்த திசை நோக்கி அனைவரும் திரும்பினர்.

சிந்தனைச் சிற்பி தூரிகையை வாயிலிருந்து எடுத்து விட்டு தெளிந்த குரலில் பேசினார்.

'என்ன? உங்களுக்குத் தெரியுமா?'
'தெரியும். என்னிடம் வரைபடம் கூட உண்டு.'
'கடவுளே! நின் கருணையே கருணை. அதை எனக்குத் தருவீர்களா?'
'நீங்கள் திரும்ப வந்து அதைக் கொடுப்பீர்கள் என்பது என்ன நிச்சயம்.?"
'வயதில் நான் பெரியவனானாலும் உங்கள் காலில் விழுகிறேன். ஐம்பது
வருடங்களாக நான் அந்த நகரத்துக்குப் போக நாயாய் அலைகிறேன். சத்தியமாகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்.என்னை நம்புங்கள்"
'சரி.அந்த வரைபடத்தின் படி நீங்கள் போனால் வரும் குளிர்காலத்தில் நீங்கள்
அந்த நகரத்தை அடைவீர்கள். உங்கள் ஐம்பதாண்டு காலத் தேடல் முடிவுக்கு வரும்'.

கிழவன் வாய் நிறையப் புன்னகையோடு வரைபடத்தைப் பெற்றுக் கொண்டான்.

அந்த வரைபடத்தில் நான்கு பகுதிகள் இருந்தன. முதல் பகுதி முழுவதையும் அவன் கோடையில் கடந்தான். இரண்டாம் பகுதி முழுவதையும் அவன் வசந்தத்தில் கடந்தான்.மூன்றாவது பகுதி முழுவதையும் அவன் மழைக்காலத்தில் கடந்தான்.நான்காவது பகுதியை அவன் நடக்க ஆரம்பித்தபோது குளிர்காலம் தொடங்கியது.

கடைசி அம்புக் குறியை அவன் நடக்கத் தொடங்கியதும் கடுமையான பனிப்புயல்
வீசத் தொடங்கியது. மிகுந்த சிரமத்துடன் அவன் நடக்கலானான். இன்னும் கொஞ்ச தூரம்தான்.அவன் தன் ஐம்பது வருடக் கனவை அடைந்து விடுவான். தான் யார் என்றும், வாழ்க்கை என்றால் என்னவென்றும் அவன் தெரிந்து கொள்வான்.

பனிப்புயல் உக்கிரம் அடைந்தது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடந்தான்.இரண்டு நாட்கள் அப்படியே நடந்தான்.இரண்டாம் நாளின் இறுதியில் அவன் அந்த வீட்டைக் கண்டான். எங்கும் பனி மூடிக் கிடந்தது.

அழுகை பொங்கும் கண்களோடு அவன் அந்த வீட்டை அடைந்து அதன் கதவை மெல்லத் திறந்தான்.

உள்ளே வாயில் பற்தூரிகையோடு சிந்தனைச் சிற்பி மர நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.

தூரிகையை எடுத்து தூர எறிந்து விட்டு சொன்னார்.

'என்ன கிழவரே! வாழ்க்கை என்றால் என்ன என்று தெரிந்து கொண்டீர்களா?நீர் ஒரு உத்தமன் ஐயா.வரைபடத்தைத் திருப்பிக் கொடுக்க கடும் பனிப்புயல் என்றும் பாராது வந்திருக்கிறீர்களே?"