Friday, February 11, 2011

தலைவன் - இட்லிவடையில் வெளியான என் சிறுகதை

"சேர்ந்து கொள்கிறீர்களா?"


"ஓ! தாராளமாக.ஆனால் இந்த மாதிரி நான் கேள்விப்பட்டதே இல்லையே? புதுமையாக இருக்கிறதே?"

"ஆம்! இது கொஞ்சம் புது மாதிரிதான்"

"இந்த மாதிரி வேறு எங்கேனும் உண்டா?"

"உண்டு"

"அவர்களுடன் நாம் இணைந்து செயல்படப்போகிறோமா?"

"இல்லை! நாம் தனித்து செயல்படப் போகிறோம்"

"தனித்தா?நன்று.யாருடனும் கூட்டணி இன்றி செயல்படுவது எனக்கு பிடித்தமான ஒன்று.

பின்னால் காலை வார மாட்டீர்களே?"

"இல்லை."

"சரி! நான் என்ன செய்ய வேண்டும்?"

"நீ நாலு பேரை சேர்த்து விடு.நானும் சேர்க்கிறேன்"

"ஆட்களை சேர்ப்பதா? இதில் எத்தனை பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்?"

"உன்னையும் என்னையும் சேர்த்து..?"

"சேர்த்து..?"

"இரண்டே பேர்"

"இரண்டே பேரா? இது ஆரம்பித்து எத்தனை நாட்களாகிறது?"

"இப்போதுதான்!"

"இப்போதுதான் என்றால்?"

"இரண்டு மணி நேரமாகிறது"

"இரண்டு மணி நேரம்தானா? வயிற்றைக் கலக்குகிறதே!"

"உனக்கு இதன் தலைவர் பதவி தரலாம் என்றிருக்கிறேன்.வயிற்றைக் கலக்குகிறது,

வாந்தி வருகிறது என்று பிதற்றுகிறாயே?"

"தலைவர் பதவியா? இப்போது நெஞ்சை அடைக்கிறது"

"ஏன்?"

"தலைவர் பதவி என்கிறீர்களே. அதுதான். தலைவன் என்பது பதவியல்லவே"

"பதவி அல்லவா? அதுதான் பிரதம பதவி.அதுகூட தெரியாத மூடனா நீ?"

"தெரிந்த மூடன்.போதுமா?"

"சரி. தலைவன் பதவியில் நீ இரு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்"

"அதைத்தானே நான் சொன்னேன்"



இப்படியாக சில ஆண்டுகளுக்கு முன் பனிக்கரடி சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டேன்.அதன் ஆகக்கூடிய செயல்பாடு வருடத்திற்கொரு முறை எங்கள் வீட்டுக்கருகில் இருக்கும் க்ரீவ் கோர் ஏரியில் குதிக்க வேண்டும்.



அதனால் என்ன பிரயோசனம் என்ற கேள்வி என்னுள் எழுந்தபோது, "அது உனக்கு தேவையில்லாதது" என்ற விடை கிடைத்தது. மகிழ்ச்சியாக ஆட்களை சேர்க்க ஆரம்பித்தேன்.



ஆனால் அது அவ்வளவு சுலபமாக இல்லை. என்னைக் கண்டாலே காத தூரம் ஓடினார்கள். இது பற்றி நான் முறைப்பாடு செய்தபோது " குதிப்பவர்களுக்கு அன்று அவர்கள் குடிக்கும் பீர் மொத்தமும் இலவசம்" என்று அறிவிப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டேன்.என்னை தலைவர்
பதவிக்கு தேர்வு செய்த என் ஆலோசகர் ஒரு பெரிய மதுபானக் கூடத்தின் உரிமையாளர்.



அப்படியும் என்னால் ஒரு எட்டு பேரை மட்டுமே சேர்க்க முடிந்தது.அத்தனை பேரும் பீர் மட்டுமே குடிப்பவர்கள். அவர்களை மட்டுமே என்னால் சேர்க்க முடிந்தது என்பது எனக்கு மட்டுமே தெரியும்.



ஒரு சனிக்கிழமை அமாவாசை மதியம் 12 மணிக்கு பனிக்கரடி படை மதுக்கூடத்திலிருந்து புறப்படும் என்று அடுத்த அரை மணி நேரத்தில் அத்தனை நிகழ்ச்சிகளும் முடிவடையும் என்றும் நிரல் தயாரிக்கப்பட்டது.



அந்த நாளும் வந்தது.அதற்கு முந்தைய இரவு நான் வானத்தை பார்த்தபடி சுருட்டு புகைத்தபடி உட்கார்ந்திருந்த போது இனம் புரியாத பீதி மனதை ஆட்கொண்டது.அது என்னவென்று எனக்கு புரிய ஐந்து நிமிடம் ஆனது. புரிந்தபின் அது ஜீரணம் ஆக அடுத்த ஐந்து நிமிடம் ஆனது.



அது கடுமையான குளிர்காலம்.அந்த ஏரி உறைந்தல்லவா கிடக்கிறது. அதில் எப்படி குதிப்பது. வேண்டுமானால் சித்தர்கள் மாதிரி குறுக்கும் நெடுக்குமாக நடக்கலாம்."ஆஹா! என்னைக் கண்டதும் அத்தனை பேரும் சிதறி ஓடினார்களே.இதுதான் காரணமா?இது எனக்கு மட்டும் எப்படி தெரியாமல் போனது?" என்று எனக்குள் நானே புலம்பிக் கொண்டு இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தேன்.



அடுத்த நாள் மாற்று உடுப்புகள் எடுத்துக் கொண்டு நான் மதுக்கூடத்துக்கு போன போது அதற்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது. சுமார் இரு நூறு பேர் அமர்ந்திருந்தார்கள். எப்போதும் காற்று வாங்கும் சனிக்கிழமை மதியம் எப்படி இத்தனை பேர்? அத்தனை பேரும் குதிப்பதற்கு வந்திருக்கிறார்களா? நன்று.



ஆனால் அது ரொம்ப நேரம் நீடிக்கவில்லை.அத்தனை பேரும் நாங்கள் குதிப்பதை வேடிக்கை பார்க்க வந்தவர்களாம்.அன்று மதிய வியாபாரம் அபாரமாக இருந்தது. என் ஆலோசகர் என்னையும், மற்ற உறுப்பினர்களையும் கூப்பிட்டு ஒரு பத்திரத்தில்  கையெழுத்து போடச் சொன்னார். அது என்ன என்று கேட்ட போது " குதிக்கும் போது
காயமோ அல்லது உயிருக்கு ஆபத்தோ நேர்ந்தால் அதற்கு மதுபானக் கூட நிர்வாகம் பொறுப்பல்ல" என்று எழுதியிருப்பதாக பதில் வந்தது.



இன்னும் எத்தனை அதிர்ச்சிகள் காத்திருக்கிறதோ? என்ற நினைப்புடன் நாங்கள் ஏரிக்கு பயணமானோம். ஏரியில் இரண்டு மாட்டு வண்டி சக்கர அளவிற்கு பனிக்கட்டிகள் உடைத்து குளம் போல் அமைக்கப்பட்டிருந்தது.



சரி! யாரவது முதலில் குதிக்கட்டும். அவர்கள் நிலைமையைப் பார்த்துவிட்டு அடுத்து எடுக்க வெண்டிய நடவடிக்கை குறித்து யோசிக்கலாம் என்று நான் குளத்தை வெறித்தபடி நின்றிருந்தபோது, என் ஆலோசகர் உரக்க அறிவித்தார்.



"தற்போது நம் தலைவர் முதலில் குதித்து இந்த சிறப்பு நிகழ்வை தொடங்கி வைப்பார்"



திரும்பி கூட்டத்தைப் பார்த்தேன். ஒரே ஆராவாரம்.கிழக்கு நோக்கி சேவித்துவிட்டு குதித்தேன் .எனக்கு பின்னால் மாட்டிக்கொண்ட மந்தைகள்.அந்த அனுபவம் எப்படி இருந்தது என்று எனக்கு வர்ணிக்கத் தெரியவில்லை.அது குதித்தால் தான் தெரியும்.



குதித்த அத்தனை பேர் வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை.கரண்ட் கம்பியைத் தொட்ட கரடி மாதிரி விதவிதமான சப்தங்கள்தான் வந்தது. இப்படியாக அந்த நிகழ்வு சில பல ரத்த காயங்களோடு இனிதே நிறைவடைந்தது.



இது நடந்த சில நாட்களுக்கு பின்னர் என் ஆலோசகர் என்னை அழைத்தார்.



" தலைவரே! ஒரு பெரும் பொறுப்பு உங்கள் முன் நிற்கிறது"

" முன்னால் நிற்கிறதா?எவ்வளவு தூரத்தில் நிற்கிறது?"

"எச்சில் துப்பினால் எவ்வளவு தூரம் போய் விழுமோ அவ்வளவு தூரத்தில்

நிற்கிறது. வேடிக்கை வேண்டாம்".

"சரி! சொல்லுங்கள்"

"நம் போட்டி மதுபானக் கூடம் இருக்கிறதல்லவா? அவர்களும் பனிக்கரடி

சங்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்"

" ஆரம்பித்துவிட்டு போகட்டுமே! அதனால் என்ன?"

"அதனால் என்னவா? ஒரு தலைவன் பேசும் பேச்சா இது? அதில் நம்மை விட

அதிகம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்திருக்கிறார்களாம்"

" இப்போது என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?"

"நம் சங்கத்தை பிரபலப்படுத்த நாம் முயற்சி செய்ய வேண்டாமா?"

" எப்படி செய்வது?"

"நான் ஒரு உபாயம் வைத்திருக்கிறேன்."

" என்ன உபாயம்?"

" இங்கிருந்து பத்து மைல் தொலைவில் ஒரு சிறிய விமான தளம் இருக்கிறதல்லவா?"

"ஆமாம் இருக்கிறது. ரொம்ப வருடங்களாக அங்கேயேதான் இருக்கிறது."

" அங்கே போய் ஒரு சிறிய கிளைடர் விமானத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறோம்"

"எடுத்துக் கொண்டு..?"

" அப்படியே 12,000 அடி உயரத்துக்கு போய்.."

"போய்..?"

" மிஸொரி நதி இருக்கிறதல்லவா..?"

" இருக்கிறது. அதற்கு என்ன இப்போது..?"

" அதன் மேல் பாராசூட் கட்டிக் கொண்டு நீ மட்டும் குதிக்கிறாய்"

" நான் மட்டுமா?"

" ஆம்"

" நான் மட்டும் ஏன்?"

" ஏனென்றால் நீ...?"

" நான்?"

"தலைவன்"

Wednesday, February 9, 2011

கபாட சுந்தரம் என்பவர் எவரெனில்..

கனத்த, கருத்த சரீரமும், கண்டசாலா போன்ற சாரீரமும் உடையவர்.தும்பைப் பூவைப் போல் வெளுத்த தலைமுடியும்,தொங்கு மீசையும் கொண்டவர்.எப்போதும் தூங்கி எழுந்தது போன்ற முகமுடையவர்.நன்கு மழித்த கன்னச் சதையில், வெட்டுக் காயம் கொண்டவர்.நின்றபடி பார்வையை மட்டும் தாழ்த்தி கால் கட்டை விரலைப் பார்க்க முடியாதவர்.இடது காதில் சிவப்புக் கடுக்கண் போட்டிருப்பவர்.சாதா வெள்ளை வேட்டியும், வெள்ளை சட்டையும் அணிபவர். ஒரு சாண் அகலமும், அரை சாண் உயரமும் கொண்ட நெற்றியில் எப்போதாவது திருநீறு துலங்க, தெய்வ கடாட்சமாக விளங்குபவர்.



காலை நேரத்தில், முண்டாசு கட்டிக் கொண்டு பால் கறந்து பக்கத்து ஊர் டீக்கடைகளுக்கு ஊற்றுபவர்.ஊற்றிய பாலுக்கு பதில் தேங்காய் பன்னைத் தின்றுவிட்டு, திகட்டத் திகட்ட காப்பி குடிப்பவர்.வெற்றிலை, சிறிது சுண்ணாம்போடு , மட்டமான புகையிலையும் சிறிது கஞ்சாவும் சேர்த்துக் குதப்புபவர்.துளசி இலைச் சாற்றை தினம் குடிப்பவர்.பதினைந்து நாளே ஆன இளம் நாட்டுக் கோழியின் இறைச்சியை மிகவும் விரும்பி உண்பவர். ஆடுகளை அன்பாக வளர்ப்பவர்.வளர்ந்த பின் வெட்டிச் சாய்த்து விருந்து வைப்பவர்.



இழவு வீட்டில் முதல் ஆளாக நிற்பவர்.கல்யாண வீட்டில் கடைசி பந்தியில் அமர்பவர்.எவனோ ஏமாற்றிவிட்டு போன பெண்ணை தன் மகனுக்கு கல்யாணம் செய்வித்தவர்.நல்லவர்.பண்பாளர்.கட்சிக்காக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ஜெயிலுக்கு போனவர். சிறைச்சாலை உணவு ஒத்துக் கொள்ளாமல் வயிற்றுப்போக்குக்கு ஆளானவர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதன் முதலாக ஜெயிலை விட்டு வெளியே வந்தவர்.வந்த பின் ஜெயில் சாப்பாடு பிரமாதம் என்று கருத்து சொன்னவர்.



அனைத்துலக சிவாஜி ரசிகர் மன்றத்தின் எங்களூர்க் கிளையின் பொருளாளராக இருந்தவர். திரிசூலம் படத்தில் சிவாஜியின் நடிப்பை பார்த்து விட்டு அரைச்சட்டி சாராய ஊறலை அப்படியே
குடித்தவர் .குடித்துவிட்டு ஆற்றோரமாய் இருந்த ஆலமரத்தின் கீழே அரை
நிர்வாணமாய்க் கிடந்தவர்.நினைவு தெளிந்தபின் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சில காலம் தலைமறைவாக இருந்தவர்.
மர்லின் மன்றோவைத் தவிர வேறெந்த நடிகையின் பாவாடை காற்றில் மேல் நோக்கி பறந்தாலும் அது கவர்ச்சியாக இராது என்று நெத்தியடி அடித்தவர்.



"அத்துவானக் காட்டில் அத்தானைத் தேடி பொத்தானைத் திருகியபடி வந்தது ஒரு முத்தான ஜிகிடி" என்று வசனம் சொல்பவர்.கேட்டால் அது கவிதை என்பவர். "தாதி தூது தீது, தத்தை தூதோதாது" என்று தத்தகாரத்தையும் குறுக்கும் நெடுக்குமாக பிளப்பவர்.புலவர். எவ்வளவு புண்பட்டாலும் புறமுதுகிடாதவர்.திருக்குறள் ஒரு முழுமையான நூல் அல்ல என்றவர். ஏன் என்று கேட்டதற்கு அதில் அறம்,பொருள், இன்பம் மட்டும்தான் உண்டு,வீடுபேறு இல்லை என்று வாதிட்டவர். வாழும் வள்ளுவர் என்று பத்தாவது வார்டு கவுன்சிலரால் புகழப்பட்டவர். அந்தப் புகழ்ச்சிக்கு உரியவர் தான் அல்ல என்றும், அது ஏற்கனவே மற்றொருவருக்கு வழங்கப்பட்ட பட்டம் என்பதால் பரிமேலழகர்,மோசிகீரனார்,ஒட்டக்கூத்தர், சீத்தலைச் சாத்தனார் என்று வேறு எதோ பெயரை பரிசீலிக்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டவர்.



வாய்க்கால் பாசனம் பாயும் ஐந்து ஏக்கரா புஞ்சை, நான்கு மாடுகள் வைத்திருந்தவர். கந்து வட்டிக்கு வாங்கி வீடு கட்டியவர். பின் வீட்டை விற்று வட்டி கட்டியவர்.நான்கு பெண்களுக்கு நல்ல முறையில் கல்யாணம் செய்வித்தவர்.பொறுப்பான குடும்பத்தலைவர்.



கருப்பசாமியின் மகன் "பாட்டு" சுந்தரம் என்பது மருவி கபாட சுந்தரம் என்றானவர்.



மழை பொய்த்ததால், வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல், அத்தனை சொத்துக்களையும் அடமானம் வைத்து விட்டு, நள்ளிரவில், ஊர் உறங்கும் சமயத்தில் எங்கேயோ போனவர்.



காணாமல் போன போது அழுக்கடைந்த உடுப்பும், அவமானமும் கண்ணீரும் பூசிய முகமும், கையில் வெறும் ரேகையும், நோய்ப் படுக்கையில் இறந்துபோன மனைவியின் நினைவுகளைத் தன் நெஞ்சிலும் கொண்டிருந்தவர்.



இத்தகைய அடையாளம் கொண்டவரை, புழுதி கவிந்த எதோ ஒரு நகரத்தின் தேனீர்க் கடை சிப்பந்தியாகவோ, உணவகத்தில் மேசை துடைப்பவராகவோ , மூத்திரச் சந்துகளிலோ, சாலையோரக் குடியிருப்புகளிலோ காண நேர்ந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.



"எதொவொரு கிராமம்".